டிரம்ப்பின் அழுத்தத்திற்கு மத்தியிலும் தமிழ்நாட்டில் கோடிகளை கொட்டும் ஃபோர்டு! மீண்டும் ஆலை ரன் ஆக போகுது!
அமெரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு (Ford), தமிழ்நாட்டில் தனது சென்னை ஆலையில் புதிய எஞ்சின் உற்பத்திப் பிரிவைத் தொடங்க, மாநில அரசுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இது 600க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இன்று (அக்டோபர் 31, 2025) கையெழுத்தாகி உள்ளது.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்ற நிலையில், முன்னதாக, ஃபோர்டு நிர்வாகிகளும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் காலை 11 மணியளவில் சந்தித்துப் பேசினர். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஃபோர்டு நிறுவனம் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பவர்டிரெய்ன் என்ஜின்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய ரூ.3,250 கோடி முதலீடு செய்ய உள்ளது.

இந்த முயற்சி மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் பெரிதும் உதவும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஆலையில் ஆண்டுக்கு 2,35,000 என்ஜின்கள் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 2029ஆம் ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த உற்பத்தி பணிகளுக்கான திட்ட தயாரிப்புப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க உள்ளன.
முன்னதாக, 2024 செப்டம்பரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்கப் பயணத்தின்போது ஒரு லெட்டர் ஆஃப் இன்டென்ட் (LoI) கையெழுத்தானது. அதன் அடுத்த கட்டமாகவே தற்போது தமிழ்நாடு மாநில அரசு உடன் புதிய புத்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 2022-ல் இந்தியாவில் வாகன உற்பத்திச் செயல்பாடுகளை நிறுத்திய ஃபோர்டு நிறுவனம், இதன் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் தனது செயல்பாடுகளைத் தொடர்கிறது.

சென்னை என்ஜின் ஆலை, ஃபோர்டின் உலகளாவிய பவர்டிரெய்ன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக அமையும். இது இந்த அமெரிக்கன் கார் நிறுவனத்தின் மேம்பட்ட உற்பத்தி மற்றும் உலக நாடுகளுக்கான ஏற்றுமதித் திட்டங்களுக்கு உதவும். சென்னையின் புறநகர்ப் பகுதியான மறைமலைநகரில் அமைந்துள்ள இந்த ஆலை, 2022 முதல் செயல்படாமல் உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் "மேட் இன் அமெரிக்கா" கொள்கை காரணமாக, ஃபோர்டின் முதலீடுகள் அமெரிக்காவிலேயே குவியக்கூடும் என்ற அச்சம் நிலவியது. இருப்பினும், ஃபோர்டு தனது இந்திய உற்பத்திச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதில் உறுதியாக உள்ளது. மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் மேட்-இன்-இந்தியா என்ஜின்கள் ஏற்றுமதி சந்தைகளுக்கானதாக விளங்க இருப்பது, நேரடியாக இந்திய பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இது ஃபோர்டின் உலகளாவிய 'Ford+' வளர்ச்சி வியூகத்துடன் ஒத்துப்போகிறது. கொரோனா வைரஸ் பரவல் காலத்தினால் அடைந்த நஷ்டத்தை சமாளிக்க, 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் வாகன உற்பத்தியை நிறுத்திய ஃபோர்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலான அதன் செயல்பாட்டில் 200 கோடி டாலருக்கும் அதிகமான நஷ்டத்தைச் சந்தித்தது.
அப்போதில் இருந்து, ஈகோஸ்போர்ட், எண்டவர், ஃபிகோ, ஆஸ்பயர், ஃப்ரீஸ்டைல் போன்ற கார்களை உற்பத்தி செய்யும் மறைமலைநகர் ஃபோர்டு ஆலை செயலற்ற நிலையில் உள்ளது. மீண்டும் செயல்பட இருக்கும் சென்னை ஃபோர்டு ஆலையில் என்ன வகையான பவர்டிரெய்ன் என்ஜின்கள் தயாரிக்கப்படும் என்பது குறித்து ஃபோர்டு தற்போது வரையில் இன்னும் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை என்றாலும், அவை அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் கொண்டதாக இருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டு இருப்பது இதன் மூலம் தெரிகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டத்திற்கான தளத் தயாரிப்பு மற்றும் முதலீடுகள் தொடங்கும். இது இந்தியாவில் ஃபோர்டின் உற்பத்தி மறுமலர்ச்சிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









