ஆட்டோரிக்சா சைஸ்ல காருனு சொன்னா யாருதான் புக் பண்ணாம இருப்பா! 3 சக்கர குட்டியோண்டு காருக்கு குவியும் புக்கிங்!
ஆட்டோரிக்சாவை போன்று மூன்று சக்கரங்களைக் கொண்டிருக்கும் மின்சார வாகனங்களை சீக்கிரமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக ஜென்சோல் இவி (Gensol EV) நிறுவனம் அறிவித்திருக்கின்றது. ஆட்டோரிக்சாவில் முன் பக்கத்தில் ஓர் வீலும், பின் பக்கத்தில் இரண்டு வீல்களும் வழங்கப்பட்டு இருக்கும். ஆனால், இந்த நிறுவனம் தயார் செய்திருக்கும் புதுமுக வாகனங்களில் முன் பக்கத்தில் இரண்டு வீல்களும், பின் பக்கத்தில் ஒரு வீலும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ரகத்திலேயே பயணிகள் மற்றும் வர்த்தக பயன்பாடு என இரண்டு பிரிவுகளுக்குமான மின் வாகனங்களை ஜென்சோல் இவி நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.
ஈசியோ (Ezio) மற்றும் ஈசிபாட் (Ezibot) என்கிற இரண்டு இ-வாகன மாடல்களையே நிறுவனம் இந்தியாவிற்காக தயார் செய்திருக்கின்றது. இந்த வாகனங்களை சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-இல் அது காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனங்களின் உற்பத்தியையே விரைவில் தொடங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இதற்கு முன்னதாக அவற்றை அதிகாரப்பூர்வமாக நாட்டில் வெளியீடு செய்யவும் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இன்னும் ஒரு சில மாதங்களில் இவற்றின் அறிமுகமானது அரங்கேற இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. முதலில் ஈசியோ மாடலே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் பயணிகளுக்கான வாகனம் ஆகும்.
இதன் அறிமுகமானது இந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கு திட்டமிடப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த 2025 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் ஈசியோ இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் ஈசியோ எலெக்ட்ரிக் காரை ஜென்சோல் இவி பெங்களூரு நகரத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது.

இதற்கு பின்னரே நாட்டின் பிற முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்ய இருக்கின்றனர். ஆனால், ஈசிபாட் 2026 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இது ஓர் கார்கோ பயன்பாட்டு வசதிக் கொணட் இ-வாகனம் ஆகும். ஈசியோ, விற்பனைக்கு வருவதற்கு அனைத்து நிலைகளிலும் தயார் நிலையில் இருக்கின்றது.
இந்த வாகனத்திற்கு அராய்-யிடமிருந்து சான்று கிடைத்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், விரைவிலேயே இதன் அறிமுகம் நிச்சயம் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கலாம். மூன்று சக்கரங்கள் கொண்டிருக்கும் இந்த வாகனத்தில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும். பின்பக்கத்தில் லக்கேஜ்களை வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக பெரிய இட வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், டூ-வீலர்களுக்கு மாற்றாக இந்த கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கோடைக் காலம் மற்றும் மழைக் காலம் என எந்த மாதிரியான காலநிலையாக இருந்தாலும் இந்த வாகனம் சமாளிக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ரேஞ்ச் தருவது மற்றும் திறன் வெளிப்பாட்டிலும் இந்த கார் மிக சிறந்ததாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
ஓர் முழு சார்ஜில் ஈசியோ 200 கிமீ வரை ரேஞ்ச் தரும் என்றும், அதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ என்றும் தெரிவித்திருக்கின்றது. இந்த காருக்கும், ஈசிபாட்-கும் இந்தியாவில் அமோகமான வரேவற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனைக்கு வருவதற்கு முன்னரே இரண்டு வாகனங்களும் 30 ஆயிரம் புக்கிங்குகளை குவித்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றது.
ஆட்டோரிக்சாவின் அளவில் இருந்தாலும் இந்த வாகனங்களை அதிகம் சிறப்பம்சங்களைத் தாங்கியதாக இருக்கின்றன. மிக முக்கியமாக சன்ரூஃப் அம்சமெல்லாம் ஈசியோவில் வழங்கப்பட்டு இருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. இதுமட்டுமல்ல, அலாய் வீல், எல்இடி லைட்டுகள், பெரிய டச் ஸ்கிரீன், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், கேபினில் ஓட்டுநர் உதவி தொழில்நுட்பம் மற்றும் AI-ஆல் இயக்கப்படும் கிளவுட் அனலிடிக்ஸ் உள்ளிட்ட வசதிகளையும் இந்த வாகனங்கள் தாங்கியிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஈசியோ தனிநபர் பயன்பாட்டிற்காக விற்பனைக்குக் கிடைக்குமா என்பது சந்தேகமே. இதனை நிறுவனம் கால் டாக்சி போன்ற பிரிவிற்கு மட்டுமே விற்பனைக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், மிக மிக குறைவான விலைக் கொண்ட வாகனமாகவே இது விற்பனைக்கு வரும் என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், தனி நபர் பயன்பாட்டிலும் இந்த வாகனம் பலரின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









