எல்லா ஹோண்டா கார்களும் இ20 பெட்ரோலில் ஓட கூடியதாக மாறிடுச்சு.. இந்தியால வேற எந்த நிறுவனமும் இந்த இலக்கை எட்டல!
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் ஹோண்டா (Honda)-வும் ஒன்றாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து கார் மாடல்களையும் இ20 (E20) எரிபொருளில் இயங்கக் கூடியதாக மாற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அனைத்து கார்களும் இ20 ரக எரிபொருளில் இயங்கக் கூடியதாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று தயாரிப்புகள் அனைத்தையும் இ20 ரக வாகனமாக மாற்றி விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் நிறுவனம் ஹோண்டாவே ஆகும்.
இந்த இலக்கை அடைய மற்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கின்ற சூழலில் ஹோண்டா குறுகிய காலை இடைவெளியில் இந்த இலக்கை அடைந்திருக்கின்றது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய மூன்றாம் தலைமுறை அமேஸ் (Amaze) செடான் கார் மாடலையும் இது இ20 எரிபொருளில் இயங்கும் வகையில் மாற்றியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமல்ல நிறுவனத்தின் மற்ற முக்கிய தயாரிப்புகளான எலிவேட் எஸ்யூவி (Elevate SUV), சிட்டி (City) உள்ளிட்ட கார் மாடல்களையும் அது இ20 ரக எரிபொருளுக்கு ஏற்றதாக மாற்றி இருக்கின்றது. 80 சதவீதம் பெட்ரோல் மற்றும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளே இ20 ரக எரிபொருள் ஆகும்.
இதில் இயங்கக் கூடியதாகவே தன்னுடைய இந்தியாவிற்கான அனைத்து கார் மாடல்களையும் ஹோண்டா மாற்றியிருக்கின்றது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனையில் உள்ள அனைத்து பெட்ரோல் வாகனங்கள் மற்றும் பை-ப்யூவல் போன்ற உள் எரிப்பு எஞ்சின் கொண்ட வாகனங்கள் இ20 எரிபொருளில் இயங்கக் கூடியதாக மாற்றப்பட வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கி இருக்கின்றது.
இது ஹைபிரிட் (Hybrid) வகை வாகனங்களுக்கும் பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே ஹோண்டா தன்னுடைய தயாரிப்புகளை முழுமையாக இ 20 விதிகளுக்கு இணங்க மாற்றி உள்ளது. இதன் வாயிலாக மற்ற கார் உற்பத்தியாளர்களுக்கு முன்னோடியாக ஹோண்டா நிறுவனம் மாறி இருக்கின்றது.
காற்று மாசுபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு மத்திய அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளில் இ20 ரக எரிபொருள் ஊக்குவிப்பும் ஒன்றாகும். இதுமட்டுமல்ல பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவது மற்றும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றிலும் அரசு ஏற்கனவே தீவிரம் காட்டி வருகின்றது.
விரைவில் ஹோண்டா நிறுவனத்தை போலவே மற்ற கார் உற்பத்தியாளர்களும் முழுமையான இ20 ரக வாகன உற்பத்திக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்ர்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இ20 ரக எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் குறைவான காற்று மாசு வெளிப்பாட்டை மட்டுமல்ல கணிசமான அளவு நல்ல மைலேஜையும் வழங்கும் என கூறப்படுகின்றது. மேலும், முழுமையாக இ20 ரக எரிபொருள் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் நாட்டின் கச்சான எண்ணெய் தேவையும் கணிசமாகக் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எத்தனால், கரும்பு போன்ற விவசாய கழிவுகளில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது. எனவே இது செலவைக் குறைக்கக் கூடியதாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








