ஜிஎஸ்டி குறைத்து பார்த்தும் ஒண்ணும் வேலைக்கு ஆகல... இந்தியாவில் ஹோண்டா கார்களின் நிலைமை!!
இந்தியாவின் முன்னணி பிரீமியம் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (Honda Cars India Limited - HCIL) நடந்து முடிந்த கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் மொத்தமாக 8 ஆயிரத்து 96 கார்களின் விற்பனையை பதிவு செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 5 ஆயிரத்து 303 யூனிட்களாகவும், வெளிநாட்டு ஏற்றுமதி 2 ஆயிரத்து 793 யூனிட்களாகவும் உள்ளது.
இத்தனை ஆயிரம் கார்களை ஒரே மாதத்தில் ஹோண்டா விற்பனை செய்துள்ளதா என நீங்கள் ஆச்சிரியமாக கேட்கலாம். ஆனால், இது வழக்கமாக இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். உதாரணத்திற்கு, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்திருந்த கார்களின் எண்ணிக்கையை பார்ப்போம்.

கடந்த 2024 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பரில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை சற்று குறைந்துள்ளது; வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது. புள்ளி விபரங்களின்படி சொல்ல வேண்டுமென்றால், கடந்த செப்டம்பரில் விற்பனை செய்ததை காட்டிலும் 372 கார்கள் அதிகமாக 5 ஆயிரத்து 675 கார்களை உள்நாட்டில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
அதுவே, 2024 செப்டம்பரில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹோண்டா கார்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 239 ஆகும். இதனை காட்டிலும் சுமார் 2 ஆயிரத்து 446 கார்கள் குறைவாக கடந்த செப்டம்பரில் ஹோண்டா ஏற்றுமதி செய்துள்ளது. இதுகுறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை துணைத் தலைவர் திரு. குனால் பெஹ்ல் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "செப்டம்பர் மாதத்தில், நவராத்திரி (Navratri) தொடங்கியதில் இருந்து மொத்த விற்பனையிலும் விநியோகத்திலும் கணிசமான வளர்ச்சி காணப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) தொடர்பான அறிவிப்புகளைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்முதல்களை மேற்கொண்டு உள்ளனர். ஜிஎஸ்டி 2.0 வாடிக்கையாளர்களுக்கும் வாகனத் தொழில்துறைக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
குறைக்கப்பட்ட விலைகள் மற்றும் தொடர்ச்சியான சலுகைகள் காரணமாக கார்கள் இப்போது மிகவும் மலிவு விலையில் கிடைக்கின்றன. தசரா மற்றும் தீபாவளி பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் மனநிலை அதிகரிப்பதன் மூலம் இந்த வலுவான உத்வேகம் அக்டோபரிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), இந்தியாவில் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் ஆகும். இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டாவின் பயணிகள் கார் மாடல்களையும் தொழில்நுட்பங்களையும் வழங்குவதற்காக ஜப்பானை சேர்ந்த ஹோண்டா இந்தியாவில் 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறுவப்பட்டது.

HCIL-ன் இந்திய அலுவலகம் உத்திரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ளது. ஹோண்டாவின் அதிநவீன உற்பத்தி தொழிற்சாலை இராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்திலுள்ள தபுகாராவில் உள்ளது. ஹோண்டா கார்கள், நீடித்துழைப்பு, நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் எரிபொருள் திறன் போன்ற நிரூபிக்கப்பட்ட தரங்களுடன், மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் வலுவாக தொடர்புடையவை.
நாடு முழுவதும் விரிவான மற்றும் வலுவான சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. புதிய கார் வணிகத்தைத் தவிர, ஹோண்டா ஆட்டோ டெர்ரஸ் (Terrace) என்ற வணிகச் செயல்பாடு மூலம் செகண்ட்-ஹேண்ட் கார்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒரு முழுமையான சேவையையும் ஹோண்டா வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜப்பானிய-ஸ்டைல் கார்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒருவித கிரேஸ் உண்டு. இருப்பினும், இந்தியாவில் ஹோண்டா கார்கள் விற்பனை குறைந்துக் கொண்டே வருவதை அறிய முடிகிறது. ஜிஎஸ்டி திருத்தங்களினாலும், வரவிருக்கும் பண்டிகை காலங்களினாலும் ஹோண்டா கார்கள் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









