மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார்களுக்கு மவுசு குறைந்துவிட்டதா? துறைமுகத்துக்கு வரத்து ரொம்ப குறைஞ்சிடுச்சு!
இந்தியாவின் முன்னணி பிரீமியம் கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (Honda Cars India Limited - HCIL), கடந்த 2025 நவம்பர் மாதத்தில் 5,204 கார்களை உள்நாட்டில் விற்பனையும், 1,984 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளது. இதன் மூலம், மொத்தம் 7,188 கார்கள் HCIL நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை ஆகியுள்ளன.
அதேநேரம் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஹோண்டா நிறுவனம் 5,005 கார்களை மட்டுமே உள்நாட்டில் விற்பனை செய்திருந்தது. அதாவது, கடந்த ஆண்டு நவம்பரை விட இந்த ஆண்டு நவம்பரில் 199 ஹோண்டா கார்கள் இந்திய சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை துணைத் தலைவர் திரு.குணால் பெஹ்ல், 2025 நவம்பரில் உள்நாட்டில் ஹோண்டா கார்களுக்கான தேவை அதிகரித்து இருப்பது குறித்து பேசுகையில், ஜிஎஸ்டி (GST) சீர்திருத்தங்களால் வாடிக்கையாளர் நம்பிக்கையைக் காட்டுவதாகக் கூறினார். மேலும் பேசிய அவர், "இதே போக்கு வரும் மாதங்களிலும் தொடரும் என நம்புகிறோம்.
நவம்பரில் மூன்றாவது தலைமுறை ஹோண்டா அமேஸ் (Amaze), பயணிகளின் பாதுகாப்பிற்கு 5-நட்சத்திர பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்று முக்கிய மைல்கல்லை எட்டியது. இது ஹோண்டாவின் உயர்தர பாதுகாப்புத் தரங்களுக்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது" என தெரிவித்தார். பாரத் NCAP-இன் இந்தச் சான்றிதழ் மற்றும் பிரத்யேக ஹோண்டா சென்சிங் (ADAS) தொழில்நுட்பத்தால், அமேஸ் பாதுகாப்பான, நம்பகமான குடும்பக் காராக வலுப்படுகிறது.

இருப்பினும், மறுப்பக்கம் HCIL நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதி கடந்த மாதத்தில் பெரிய அளவில் குறைந்துள்ளது. 2024 நவம்பரில் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கையை விடவும் அதிகமாக, 5,721 கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஹோண்டா ஏற்றுமதி செய்திருந்தது. அதாவது, ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த கார்கள் விற்பனை எண்ணிக்கை 2024 நவம்பரில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்திருந்தது.
2024 நவம்பர் உடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் சுமார் 3,737 ஹோண்டா கார்கள் குறைவாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி பிரீமியம் கார் தயாரிப்பாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட், 1995 டிசம்பரில் இந்தியாவில் நுழைந்தது. டெல்லிக்கு அருகே கிரேட்டர் நொய்டாவில் (உ.பி) தலைமையகம் மற்றும் இராஜஸ்தான் தபுக்காராவில் உற்பத்தி ஆலையுடன் இந்தியாவில் ஹோண்டா செயல்பட துவங்கியது.

அதன்பின், நிறுவப்பட்ட ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தின் மூலமாக மேம்பட்ட வடிவமைப்பு, தொழில்நுட்பம், நீடித்து உழைக்கும் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார்களை ஹோண்டா வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் வலுவான விற்பனை நெட்வொர்க்கை கொண்ட இந்த ஜப்பானிய நிறுவனம், 'ஹோண்டா ஆட்டோ டெர்ரஸ்' (Honda Auto Terrace) மூலம் சான்றளிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்களையும் விற்பனை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகை கால தேவை மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் உள்ளிட்டவை ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் கடந்த மாத உள்நாட்டு கார்கள் விற்பனையை அதிகரித்துள்ளன. இது வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம். அதேநேரம், ஹோண்டா நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதி வெகுவாக குறைந்திருப்பது, நிச்சயமாக இந்த நிறுவனத்திற்கு பெரிதும் கவலையளிக்கக் கூடியதாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications









