இது நம்ம நாட்டு காரே கிடையாது... நம்பர் பிளேட் இல்லாம சாலையில் சுற்றி திரிந்த விசித்திரமான ஹோண்டா கார்!
இந்தியச் சந்தையில் சிறிய வகை எஸ்யூவி (Compact SUV) கார்கள் மீண்டும் புதியது புதியதாக களமிறங்கக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. இது ஏற்கனவே போட்டியும், நெரிசலும் நிறைந்த சந்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம். அந்த வகையில் அடுத்ததாக இந்திய சந்தைக்கு வர உள்ள ஹோண்டா டபிள்யூ.ஆர்-வி ஆர்.எஸ் (WR-V RS) கார் புனேவில் பொது சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த சோதனை ஓட்டத்தில் ஹோண்டாவின் புதிய எஸ்யூவி கார் எந்தவித மறைப்புமின்றிக் காணப்பட்டதுதான். டபிள்யூ.ஆர்-வி கார் இந்தியாவில் முதன்முதலில் 2017 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 6 ஆண்டுகள் விற்பனையில் இருந்த இந்த கார், 2023 மார்ச்சில் விற்பனை நிறுத்தப்பட்டது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான டபிள்யூ.ஆர்-வி கார்கள் விற்பனையான போதிலும், அதன் இறுதி காலக்கட்டத்தில் விற்பனை குறையத் தொடங்கியது.

விற்பனை குறைவு மட்டுமன்றி, பிஎஸ்6 2ஆம் கட்டம் மற்றும் ரியல் ட்ரைவிங் எமிஷன் (RDE) தரநிலைகளுக்கு மேம்படுத்துவதற்கான அதிக செலவுகள் காரணங்களினாலும் ஹோண்டா நிறுவனம் இந்த காரின் உற்பத்தியை நிறுத்தியது. இந்த நிலையில் தற்போது, ஹோண்டா டபிள்யூ.ஆர்-வி காரின் ஆர்.எஸ் வெர்சன் சிவப்பு நிறத்தில் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
காரின் வடிவமைப்பு ஆனது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹோண்டா அமேஸ் காருடன் ஒத்துப் போகிறது. க்ரோம் பூசப்பட்ட கவர்ச்சிகரமான கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்களை இணைக்கும் க்ரோம் பெல்ட், ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டி.ஆர்.எல்-கள் (DRLs), ஸ்போர்ட்டியான பம்பர் மற்றும் பம்பரின் விளிம்பில் ஒரு ஸ்டைலான ஏரோ காம்போனென்ட் ஆகியவை புதிய டபிள்யூ.ஆர்-வி காரின் முன்னழகை மெருகூட்டுகின்றன.

பக்கவாட்டுத் தோற்றம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பின்புறத்தில் எல்இடி டெயில்லேம்ப்கள், மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் ஒரு உறுதியான பம்பர் ஆகியவை அமைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக, இதன் வடிவமைப்பு ஹோண்டாவின் சமீபத்திய கார்களுக்கு இணையாக உள்ளது. குறிப்பாக, காரின் முன் மற்றும் பின் நம்பர் பிளேட்டுகளில் 'ஹோண்டா ஜகார்த்தா சென்டர்' (Honda Jakarta Centre) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்பக்க கண்ணாடியில் 'சோதனை வாகனம்' (Testing Vehicle) என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள், இது இந்தோனேஷியாவிற்கான மாடலாக இருக்கலாம் என்பதையும், எதிர்காலத்தில் இந்தியச் சாலைகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதையும் உணர்த்துகின்றன. ஹோண்டா நிறுவனம் 2030-க்குள் இந்தியாவிற்காக 10 புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.
ஆகவே, டபிள்யூ.ஆர்-வி போன்ற ஒரு எஸ்யூவி காரை மீண்டும் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். இந்தோனேஷியாவில், இது 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் உடன் (இந்தியாவில் ஹோண்டா சிட்டி காரில் உள்ள அதே என்ஜின்) வருகிறது. ஆனால், இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டால், செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க அமேஸ் காரில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்தியச் சந்தையில் ஹோண்டா நிறுவனம் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் ஆகிய மூன்று கார்களை மட்டுமே விற்பனை செய்கிறது. தனது சந்தைப் பங்களிப்பை விரிவுபடுத்த மேலும் பல கார் மாடல்களை வெளியிட இந்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் ஹோண்டாவின் புதிய டபிள்யூ.ஆர்-வி காருக்கு ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சொனட், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ போன்ற கார்களுடன் கடும் போட்டி இருக்கும்.
இருப்பினும், டபிள்யூ.ஆர்-வி காரின் அறிமுகம் குறித்து ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால், போட்டியும் சவால்களும் நிறைந்த காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் ஹோண்டா தனது ஆதிக்கத்தை அதிகரிக்க புதியதாக டபிள்யூ.ஆர்-வி போன்ற எஸ்யூவி காரை விரைவாக அறிமுகம் செய்வது அவசியமாகிறது.
இல்லையேல் மற்ற போட்டி நிறுவனங்கள் தங்களது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்திவிடும். தற்போது இந்தோனிஷிய டபிள்யூ.ஆர்-வி ஆர்.எஸ் கார் எந்தவொரு மறைப்பும் இன்றி சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டு இருந்தாலும், இந்தியாவில் காம்பாக்ட் எஸ்யூவி கார் ஒன்றை அறிமுகம் செய்ய ஹோண்டா துவங்கிவிட்டது என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications








