கொஞ்ச நாள் கண்டுக்கல, மீண்டும் இந்த டாடா காரை வாங்க குவியும் மக்கள்! காரணம் என்ன?
2025 செப்டம்பரில் டாடா நெக்ஸான் கார் விற்பனை அபரிமிதமாக உயர்ந்ததற்கு முக்கிய காரணம், புதிதாக அமல்படுத்தப்பட்ட குறைந்த சரக்கு மற்றும் சேவை வரி (GST), பண்டிகைக் கால சலுகைகள் மற்றும் காரில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட முக்கிய அப்டேட்கள் ஆகும். இந்த அம்சங்கள் நெக்ஸானை மக்கள் மத்தியில் மலிவு விலையில் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளன.
குறிப்பாக, புதிய ஜிஎஸ்டி விகிதங்களும், சலுகைகளும் நெக்ஸான் விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. 2025 செப்டம்பர் 22இல் இருந்து அமல்படுத்தப்பட்ட "ஜிஎஸ்டி 2.0" புதிய வரி விகிதங்களின்படி, டாடா நெக்ஸான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.55 லட்சம் வரை குறைந்துள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் பலனை அளிப்பதாக அமைத்துள்ளது.

ஜிஎஸ்டி குறைப்புகளுடன், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பண்டிகைக் கால சலுகைகளையும் அறிவித்தது. இதன் மூலம் நெக்ஸான் கார் வாங்குபவர்களுக்கு மொத்தமாக ரூ.2 லட்சம் வரை சலுகைகள் கிடைத்தன. ஆனால், இந்த சலுகைகள் செப்டம்பர் 30 வரை மட்டுமே வழங்கப்பட்டதால், இந்த அக்டோபர் மாத நெக்ஸான் கார்கள் விற்பனை எண்ணிக்கை சற்று குறைய கூடும்.
விலை குறைப்புகள் மற்றும் சலுகைகள் டாடா நெக்ஸான் விற்பனையை சாதனை படைக்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளன. கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் 22 ஆயிரத்து 573 யூனிட்கள் விற்பனையாகி, எந்தவொரு டாடா மாடலும் மட்டுமில்லாமல், இந்தியாவிலேயே வேறு எந்தவொரு காரும் இல்லாத அதிகபட்ச மாத விற்பனை எண்ணிக்கையை டாடா நெக்ஸான் பதிவு செய்துள்ளது.

22,573 என்பது கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தை விட 61% அதிகமாகும், மேலும் 2024 செப்டம்பரை விட சுமார் 97% வளர்ச்சி ஆகும். இந்த ஒரேடியான வளர்ச்சிக்கு நெக்ஸான் காரில் அவ்வப்போது டாடா மோட்டார்ஸ் கொண்டுவந்த அப்டேட்களும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த அக்டோபரில் நெக்ஸான் விற்பனை சற்று சரிய கூடும் என்பதை முன்னரே அறிந்த டாடா நிறுவனம் அதனை சமாளிக்கும் வகையில் நெக்ஸான் ஃபியர்லெஸ்+ பிஎஸ் (Fearless+ PS) என்கிற டாப் வேரியண்டை ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்டது. தீபாவளியையும் டார்க்கெட் செய்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ள புதிய நெக்ஸான் ஃபியர்லெஸ்+ வேரியண்ட்டில் லெவல்-1 ADAS அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பு அக்டோபரில் வெளியானாலும், இதன் எதிர்பார்ப்பு செப்டம்பர் மாத விற்பனையிலும் பிரதிபலித்தது. நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு வந்த அடாஸை பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் நெக்ஸான் காருக்கும் டாடா விரிவுப்படுத்தி உள்ளது. அதேபோல், இந்த அக்டோபரில், நெக்ஸான் EV-யின் பிரபலமான ரெட் டார்க் எடிசனை அடிப்படையாகக் கொண்டு, ஸ்போர்ட்டியான ரெட் டார்க் எடிசனும் நெக்ஸானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, நெக்ஸானின் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என பல வகையான என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள், வெவ்வேறு பட்ஜெட் மற்றும் விருப்பங்களுடன் கார் வாங்குபவர்களை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. இதுவும் நெக்ஸானின் விற்பனை உயர்வுக்கு ஒரு காரணம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கார் சந்தை தரவுகளின்படி, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எஸ்யூவி கார்கள் மீதான நுகர்வோர் ஆர்வம் கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சிறிய கார்களில் விலை குறைப்புகள் கொண்டுவரப்பட்டது, இந்த வகை எஸ்யூவிகளின் தேவையை ஒரேடியாக அதிகரித்துள்ளது.
நெக்ஸான் இந்த மாற்றத்தை பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளது. கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகு மீண்டும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை மார்க்கெட்டில் அதிகரிக்க துவங்கியுள்ளது. இருப்பினும், ஒரே மாதத்தில் சுமார் 22 ஆயிரத்து 500 நெக்ஸான் கார்கள் விற்பனை என்பது இதுவரையில் டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் வரலாற்றில் நடக்காத ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications









