எல்லாரும் எதிர்பார்க்கும் மாருதி கார்களின் விலை எவ்வளவு குறைய போகுது? பைக் வாங்குற மாதிரி கார் வாங்கலாம்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இன்னும் ஜிஎஸ்டி 2.0-க்கு ஏற்ப தனது கார்களின் விலைகளை குறைத்து அறிவிப்பை வெளியிடவில்லை. இந்த நிலையில், மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா (RC Bhargava) இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 91 வயதான ஆர்சி பார்கவா, மாருதி சுஸுகியின் விலை குறைப்பு குறித்தும், இந்தியாவின் எதிர்காலம் குறித்தும் சமீபத்திய பேட்டியில் தனது கருத்துகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
கார் கம்பெனிகள் தங்களது கார்களின் விலைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது அதிகரிக்க தான் செய்யுமே தவிர்த்து, குறைப்பது என்பது மிகவும் அரிதாகவே நடக்கக்கூடிய விஷயமாகும். அந்த அரிதான நிகழ்வுதான் மிக விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு காரணம், மத்திய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்த ஜிஎஸ்டி 2.0 திட்டமாகும்.

இந்தியாவில் பல பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் மாற்றங்கள் வருகிற செப்டம்பர் 22ஆம் தேதியில் கொண்டுவரப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இதன்படி, கார்கள் மற்றும் பைக்குகளுக்கான ஜிஎஸ்டியும் செப்.22 முதல் குறைக்கப்பட உள்ளது.
இதனால், கார் கம்பெனிகள் தங்களது கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை குறைத்து அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியில் இருந்து தற்போதுவரையில் இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை. மாதத்திற்கு இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி தனது கார்களின் விலைகளை எந்த அளவிற்கு குறைக்க போகிறது என்பதை அறிய பலரும் ஆவலாக உள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் மூலமாக தங்களது சிறிய ரக கார்களின் விற்பனை வழக்கத்தை காட்டிலும் 10% வரையில் அதிகரிக்கலாம் என மாருதி சுஸுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஏனெனில், சிறிய ரக கார்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி ஆனது 28 சதவீதத்தில் இருந்து 18% ஆக குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா சமீபத்தில் எக்கனாமிக் டைம்ஸ் (Economic Times) செய்தித்தளத்திற்கு அளித்த பேட்டியில், "மாருதி சுஸுகி நிறுவனம் இனி வருடத்திற்கு 10% விற்பனை வளர்ச்சியை பதிவு செய்யும். மேலும், சிறிய கார் பிரிவானது ஆண்டுக்கு 7- 8% வளர்ச்சி அடையும். இது ஒரு மாத அல்லது இரண்டு மாத மாற்றம் அல்ல.

இது ஒரு நீண்டகால சீர்திருத்த நடவடிக்கையாகும். இது நாம் மேலும் முன்னேறும்போது பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார். சிறிய ரக கார்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பட்டு இருப்பது மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பெரிய அளவில் நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கும். ஏனெனில், மாருதி சுஸுகியில் இருந்து விற்பனை செய்யப்படும் கார்களில் 70% கார்கள் அளவில் சிறிய கார்கள் ஆகும்.
ஒவ்வொரு மாதத்திலும் சிறிய அளவிலான கார்களை மட்டுமே இலட்சக்கணக்கில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்கிறது. இருப்பினும், கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025 மார்ச் வரையில் மாருதி சுஸுகியின் சிறிய அளவிலான கார்களின் விற்பனை ஆனது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 9% குறைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் வேகன்ஆர், பலேனோ, டிசைர் என பல பிரபலமான கார்களின் விற்பனை சமீப காலத்தில் குறைந்திருப்பதால், மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி 2.0 ஆனது யாருக்கு பயனுள்ளதாக இருக்கிறதோ இல்லையோ மாருதி சுஸுகிக்கு பயனுள்ளதாக இருக்கும். மாருதி சுஸுகி கார்களின் விலைகள் 7இல் இருந்து 10% வரையில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









