மொபைல் போன் மாதிரி ஈசியா அப்டேட் பண்ணிக்கலாம்! இன்னும் பல வருஷம் எல்லாம் வெயிட் பண்ண தேவை இல்ல!
இந்திய ஆட்டோமொபைல் (Automobile) துறையில், மென்பொருள்-சார்ந்த வாகனங்கள் (Software-Defined Vehicles) ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. மென்பொருள்-சார்ந்த வாகனங்கள் என்றால் என்ன என்பது உங்களில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏனெனில், இந்த வகை வாகனங்கள் தற்போதைக்கு மிகவும் ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளன. இந்த புதிய தொழில்நுட்பம் ஆனது வன்பொருள் சார்ந்த வடிவமைப்பிலிருந்து மென்பொருள் சார்ந்த அணுகுமுறைக்கு மாற உதவுவது ஆகும்.
இதன் மூலம் வாகனத்தில் தொடர்ச்சியான மேம்பாடுகள் மற்றும் மக்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப வாகனங்களை வடிவமைத்து கொள்வது மற்றும் புதிய வணிக வாய்ப்புகள் போன்றவை ஏற்படுகின்றன. மென்பொருள் அடிப்படையிலான இந்த மாற்றம், ஓவர்-தி-ஏர் (OTA) சாஃப்ட்வேர் புதுப்பிப்புகள் மூலம் புதிய அம்சங்களையும், வாகனங்கள் தன்னிச்சையாக பழுதை சரிச்செய்துக் கொள்ளும் திறனையும் வழங்குகிறது.

மேலும், AI மூலம் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சார்ந்த அப்கிரேட்கள், கஸ்டமைசேஷன் (Customisation) செய்யப்பட்ட பயனர் அனுபவங்கள், எளிதாக்கப்பட்ட மின்சாரக் கட்டமைப்புகள் போன்ற பல நன்மைகளை மென்பொருள்-சார்ந்த வாகனங்களில் பெற முடிகிறது.
இந்த வாகனங்களின் உருவாக்கத்திற்கும், பயன்பாட்டிற்கும் கிளவுட் (Cloud) இணைப்பு, எட்ஜ் கணினிமயமாக்கம் மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுகள் போன்ற தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இது உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் அதிக செயல்திறன் மற்றும் தகவமைப்புத் திறனை வழங்குகிறது.

இந்த புரட்சியின் முக்கிய அம்சங்கள் என்று பார்த்தால், வாகனங்களில் அவ்வப்போது கொண்டுவரப்படும் தொடர்ச்சியான அப்கிரேட்கள் மற்றும் நீண்டகாலப் வாகன பயன்பாட்டை சொல்லலாம். வாகனங்களை வாங்கிய பிறகும் OTA புதுப்பிப்புகள் மூலம் புதிய அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் செயல்திறனை வாகனத்தில் பெரியதாக எந்த மாற்றத்தையும் செய்யாமலேயே பெற முடியும்.
இதனால் அவற்றின் செயல்பாட்டு ஆயுட்காலம் நீட்டிக்கப்படுகிறது. தற்போதுள்ள நடைமுறை போல் இல்லாமல், வன்பொருளை காட்டிலும் அதிகமாக மென்பொருள் சார்ந்த வாகன வடிவமைப்பு அணுகுமுறை ஆனது ஸ்மார்ட்போன் ஆப் (Smartphone App) புதுப்பிப்புகளைப் போலவே, புதிய தொழில்நுட்பங்களை விரைவாக ஒருங்கிணைக்கவும், நெகிழ்வுத்தன்மையுடன் செயல்படவும் அனுமதிக்கிறது.

மென்பொருள்-சார்ந்த வாகனங்கள் கிளவுட் மற்றும் எட்ஜ் கணினிமயமாக்கத்தை பயன்படுத்தி, வாகனம் தொடர்பான தரவுகளை நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்து, வாகனம் சர்வீஸ் செய்யப்பட வேண்டுமா என்பதை முன்கூட்டியே தெரிவிப்பதுடன், வாகனத்தை பயன்படுத்துபவர்களின் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் கஸ்டமைசேஷன் அனுபவங்களை வழங்குகின்றன. இதன்படி, அடாப்டிவ் கிளைமேட் கண்ட்ரோல், நாவிகேஷன் ஆப்ஷன்கள் மற்றும் விர்ச்சுவல் கோ-பைலட்கள் போன்றவை வாகனத்தை பயன்படுத்துபவர்களின் பழக்கவழக்கத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும்.
வாகனத்தின் எலக்ட்ரானிக் சிஸ்டங்களை ஒருங்கிணைக்கும் சக்திவாய்ந்த ECU-கள் சிக்கலான மின் அமைப்புகளை எளிதாக்குகின்றன. இது வாகனத்தின் எடை, உற்பத்தி செலவு மற்றும் சிக்கலைக் குறைத்து, அதே நேரத்தில் செயல்திறனை மேம்படுத்துகிறது. மேம்பட்ட ஓட்டுநர்-உதவி அமைப்புகள் (ADAS), வாகனம் தானாக இயங்கும் திறன் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவதில் மென்பொருள்-சார்ந்த வாகனங்களில் உள்ள சாஃப்ட்வேர் திறன்கள் மிக முக்கிய பங்களிக்கும்.

மென்பொருள்-சார்ந்த வாகனங்கள் மூலம் கொண்டுவரப்படும் இந்த மாற்றம், சந்தா அடிப்படையிலான சேவைகள், சாஃப்ட்வேர் அம்சங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறைக்கான பிற தொழில் வாய்ப்புகளை உருவாக்கும். மென்பொருள்-சார்ந்த வாகனங்களின் வளர்ச்சி, பாரம்பரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இடையே மேலும் நெருங்கிய பிணைப்பை உருவாக்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறையில் மென்பொருள்-சார்ந்த வாகனங்களின் தாக்கம் புதிய கண்டுபிடிப்புகளை தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது. வன்பொருளிலிருந்து மென்பொருளுக்கு மாறுவது, புதிய செயல்பாடுகளை விரைவாக சந்தையில் அறிமுகப்படுத்த அனுமதிக்கும். இதன் மூலம், எளிதாக்கப்படும் வாகன கட்டமைப்பு மற்றும் OTA புதுப்பிப்புகள் வாகனத்தில் உடல் ரீதியான அலங்கரிப்புகளை குறைத்து, அதிக செயல்பாட்டுத் திறனுக்கு வழிவகுக்கிறது.


Click it and Unblock the Notifications









