2022இல் ஹூண்டாய் எவ்வளவு ஆசை ஆசையாய் அறிமுகம் செய்த கார்! இனி நினைச்சாலும் வாங்க முடியாது!
ஹூண்டாய் டக்சன் (Hyundai Tucson) காரின் பெயர் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டதால், அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கலாம் என்கிற செய்திகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவன வட்டாரங்களின்படி, இந்த நிறுவனத்தின் விலையுயர்ந்த மற்றும் முதன்மையான எஸ்யூவி (SUV) காரான டக்சன் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்டாக்கில் உள்ளவரை சில ஹூண்டாய் ஷோரூம்களில் இன்னும் சில வாரத்திற்கு கிடைக்கலாம்.
டக்சன் காருக்கு நேரடி மாற்றாக வேறு எந்த காரையும் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஹூண்டாய் இப்போதைக்கு இருப்பதுபோல் தெரியவில்லை. 2022இல் அறிமுகப்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை டக்சன், பிரீமியம் எஸ்யூவி கார்கள் சந்தையில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அறிமுகத்தின் ஆரம்ப கட்டத்தில் விற்பனை ஒரளவுக்கு இருந்தாலும், பின்னர் அது வெகுவாகக் குறைந்துவிட்டது.

இது இந்திய சந்தையில் ஹூண்டாய் டக்சனின் முடிவுக்கு வழிவகுத்துள்ளது. ரூ.27.7 லட்சம் ஆரம்ப விலையில் 2022இல் அறிமுகமான டக்சன், ரூ.30-40 லட்சம் மதிப்பிலான எஸ்யூவி கார்கள் பிரிவில் ஹூண்டாயின் பிரீமியம் தரத்திலான காராக நிலைநிறுத்தப்பட்டது. பல சிறப்பம்சங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் நான்கு சக்கர இயக்கம் (all-wheel-drive) போன்ற அம்சங்களுடன், இது பிரீமியம் காரின் நிலையை நியாயப்படுத்தியது.
இருப்பினும், இந்திய வாடிக்கையாளர்களை டக்சன் ஈர்க்கவில்லை. 2023ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 692 டக்சன் கார்கள் விற்பனையான நிலையில், 2024இல் 58% குறைந்து ஆயிரத்து 543 யூனிட்களாக சரிந்தது. 2025ஆம் ஆண்டில், இது மேலும் சரிந்து, இதுவரை வெறும் 650 டக்சன் கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய காலத்தில் இப்படித்தான் மிகவும் குறைவான டக்சன் கார்கள் மட்டுமே விற்பனையாகின. அந்த நிலைக்கு டக்சன் மீண்டும் திரும்பியதை அடுத்து, அதன் விற்பனையை ஹூண்டாய் நிறுத்தியுள்ளது. 2016ஆம் ஆண்டில் முதல்முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டக்சன் எந்தவொரு வருடத்திலும் ஒரு ஆண்டில் 4 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதே கிடையாது.
ஹூண்டாய் டக்சன் ஏன் வெற்றி பெறவில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. டக்சன் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு ஹூண்டாய்க்கு திறன் இல்லாததால் அல்ல, டக்சன் சந்தையில் அதற்கான இடத்தை பிடிக்காததால் இந்திய மார்க்கெட்டை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1) மற்றும் ஆடி க்யூ3 (Audi Q3) போன்ற பிரபலமான சொகுசு எஸ்யூவி கார்களுக்கு இணையான விலையில் விற்கப்பட்டதால், அந்த பிராண்டுகளுக்கு கிடைத்த வரவேற்பு டக்சனுக்கு கிடைக்கவில்லை.

அதே சமயம், வழக்கமான ஹூண்டாய் வாடிக்கையாளர்களுக்கும் டக்சன் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. குறிப்பாக, டக்சன் வழங்கிய அம்சங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை, ஹூண்டாய் கிரெட்டா (Creta) சுமார் 60 சதவீத குறைந்த விலையில் வழங்கியது. கிரெட்டாவை விட அதிக பணம் செலுத்தி டக்சனை வாங்குவதில் உள்ள மதிப்பை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏற்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய எஸ்யூவி கார் சந்தையில், கிரெட்டாவின் விலைக்கு மேல் உள்ள பிரிவில் உள்ள எஸ்யூவி கார்களுக்கு மக்களிடம் இருந்து தேவை தொடர்ந்து மிகவும் குறைவாகவே இருந்து வருவதை தெளிவாகக் காணலாம். ஜீப் மெரிடியன் (Jeep Meridian), ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (VW Tiguan) மற்றும் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) போன்ற கார்கள் அனைத்தும் இந்திய சந்தையில் தங்களுக்கான மார்க்கெட்டை உருவாக்க தொடர்ந்து போராடி வருகின்றன.

சிகேடி (CKD) எனப்படும் வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் வைத்து முழு காராக அசெம்பிள் செய்து விற்பனை செய்யும் முறையினால் டக்சனின் விலை அதிகமாகவே இருந்தது. அதேநேரம், ஹூண்டாய் நிறுவனத்தின் கவனமும் வென்யூ (Venue), எக்ஸ்டர் (Exter) மற்றும் கிரெட்டா போன்ற அதிகம் விற்பனையாகும் கார்கள் மீது இருந்ததால், டக்சனுக்கு குறைவான வாடிக்கையாளர்களே கிடைத்தனர். இதனால், டக்சனால் இந்தியாவில் நிலையான ஒரு சந்தையை உருவாக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications
