நம் இந்திய இளைஞர்களின் புத்திசாலித்தனத்திற்கு எல்லையே இல்ல! டெஸ்லாவே பார்த்து வியக்கும் ஆட்டோமேட்டிக் கார்!
இந்தியாவில் ஆட்டோமேட்டிக் வாகனத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வெளிப்பாடாக தற்போது, விப்ரோ (Wipro) நிறுவனமும், ஆர்.வி பொறியியல் கல்லூரி மாணவர்களும் இணைந்து பெங்களூருவின் முதல் ஓட்டுநர் இல்லாத காரை உருவாக்கி அசத்தி உள்ளனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகனத் துறை வல்லுநர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்குவதை கடந்த சில வருடங்களாகவே நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
டிரைவர்கள் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் பைக்குகள், எலெக்ட்ரிக் கார்கள், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் எனப் பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தற்போது, பெங்களூருவில் உருவாக்கப்பட்டுள்ள ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய கார் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த அளவிற்கு, இந்தக் கார் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இதன் முன் பகுதியான பொனட் மற்றும் பம்பர் கூர்மையான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. பக்கவாட்டில் பிரத்யேகமான அலாய் சக்கரங்களும், தள்ளக்கூடிய கதவுகளும் உள்ளன. மேலும், இந்தக் காருக்கு கண்ணாடி மேற்கூரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காரின் தானாக இயங்கும் திறனைச் சோதிப்பதற்காக, உத்தரதி மடத்தின் ஸ்ரீ சத்யத்மதீர்த்த சுவாமிஜி, மற்றவர்களுடன் சேர்ந்து இதன் கான்செப்ட் காரில் பயணித்தார்.

இந்தச் சோதனை ஓட்டம், நிஜ உலக பயன்பாட்டிற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த ஆட்டோமேட்டிக் ஆக இயங்கும் காரின் அதிகாரப்பூர்வ வெளியீடு அடுத்த சில மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இந்திய சாலை நிலைமைகளை ஆய்வு செய்வதிலும், விரிவான மேப்பிங் செய்வதிலும் இந்த குழு ஈடுபட்டு வருகிறது.

இதன் மூலம் கார் பாதுகாப்பாக செயல்படுவதை உறுதி செய்ய முடியும். இந்த முயற்சி விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) மற்றும் ஆர்.வி. பொறியியல் கல்லூரி ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும். ஆகையால், இந்த பணிகள் விரின் (WIRIN: Wipro-IISc ஆராய்ச்சி மற்றும் புதுமை நெட்வொர்க்) என்கிற பெயரிலான திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன.
தானாக இயங்கும் வாகனத்தை உருவாக்குவதற்கான பொறியியல் யோசனைகளை ஆர்.வி. கல்லூரி வழங்குகிறது. இதன் மூலம், ஆட்டோமேட்டிக் டெக்னாலஜி அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, ஸ்மார்ட் மெட்டீரியல்கள் மற்றும் வடிவமைப்பில் புதுமை போன்ற பல துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கக்கூடிய கார் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் தனித்திறமை ஆனது மென்பொருள் அல்லது ஐடி துறைகளுக்கு மட்டும் அல்ல, அதிநவீன மொபிலிட்டி துறையிலும் உள்ளது என்பதை காட்டுகிறது. ஆட்டோமேட்டிக் ஆக இயங்கும் வாகனங்களுக்கான காலத்திற்கு இன்னும் சில ஆண்டுகள் இருந்தாலும், இத்தகைய திட்டங்கள் தொழில்நுட்ப ரீதியாக தன்னிறைவு பெற்ற, அட்வான்ஸ்டு ஆட்டோமொபைல் சூழலை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கின்றன.
விரின் அமைப்பானது அடுத்த தலைமுறைக்கான தொழிற்நுட்பங்களை ஆராய்ச்சி, புதுமை மற்றும் நடைமுறை பயன்பாடுகள் மூலம் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விப்ரோ மற்றும் ஐஐஎஸ்சி இடையேயான இந்த கூட்டணி, செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் மற்றும் மனித-இயந்திர தொடர்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களில் கூட்டு ஆராய்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்தியாவின் இந்த முதல் ஆளில்லா இயங்கும் காரின் அறிமுகம் மிக விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









