மத்திய அரசின் இந்த நடவடிக்கை காலத்திற்கும் பேசும்! ஒவ்வொரு கார் கம்பெனியா வரிசைக்கட்டி வருது!
ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), உலகளவில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் என்கிற வெவ்வேறான காலக்கட்டத்தில் நிறுவப்பட்ட இரு பிரிட்டிஷ் கார் நிறுவனங்கள் சேர்ந்ததுதான் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகும். இந்த இரு நிறுவனங்களை ஒன்று சேர்த்து சர்வதேச அளவில் கட்டி ஆண்டு வருவது வேறு யாருமில்லை நம் இந்தியாவை சேர்ந்த டாடா க்ரூப் (Tata Group) ஆகும்.
இதனால்தான், டாடா க்ரூப் தனது கார்களின் விலைகளை குறைத்தது போன்று, தனது பிராண்டின் கீழ் செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கார்களின் விலைகளையும் இந்தியாவில் பல லட்ச ரூபாய்களில் குறைத்து உள்ளது. இதுதொடர்பான அறிக்கை ஆனது ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கார்களின் விலைகள் இந்தியாவில் எந்த அளவிற்கு குறைய உள்ளன என்பதை பற்றி பார்ப்பதற்கு முன்னர், எதனால் இந்த விலை குறைப்பு கொண்டுவரப்படுகிறது என்பதை முதலில் பார்ப்போம். ஏனெனில், டாடா க்ரூப் மட்டுமின்றி, பிரம்மாண்டமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யும் மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) வரையில் தங்களது கார்களின் விலைகளை குறைத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
கார்களின் விலைகளில் கொண்டுவரப்படும் இந்த விலை குறைப்புக்கு காரணம், செப்டம்பர் 22ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ள திருத்தம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) ஆகும். இதனால், செப்.22 முதல் கார்களின் விலைகள் பெரிய அளவில் குறைக்கப்படுவதாக பல கார் கம்பெனிகள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

அவற்றுள் சில கார் கம்பெனிகள் செப்.22 வரையிலான இடைப்பட்ட நாட்களிலும் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக குறுகிய கால சலுகைகளை அறிவித்துள்ளன. ஆனால், லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் இன்னும் கொஞ்சம் அட்வான்ஸாக யோசித்து இப்போதில் இருந்தே தனது கார்களின் விலைகளை குறைத்து கொள்வதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த தனது அறிக்கையில், ஆடம்பர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதக் குறைப்பின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜேஎல்ஆர் (JLR) நிறுவனம், இந்திய அரசின் வணிகம் மற்றும் நுகர்வோர் தேவையை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தங்களது கொள்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 9 முதலே அமலுக்கு வந்துவிட்ட இந்த விலைக் குறைப்பின்படி, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களில் ரூ.4.6 லட்சம் முதல் ரூ.30.4 லட்சம் வரையிலும், டிஃபெண்டர் (Defender) கார்களில் ரூ.7 லட்சம் முதல் ரூ.18.6 லட்சம் வரையிலும் விலை குறைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், லேண்ட் ரோவர் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் டிஸ்கவரி (Discovery) கார்களில் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.9.9 லட்சம் வரையிலும் விலை பலன்கள் கிடைக்கும். இதுகுறித்த விரிவான விலைத் தகவல்களுக்கு அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஜேஎல்ஆர் ஷோரூமை அணுகுமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
| Brand | Price benefits post GST implementation (₹) |
|---|---|
| Range Rover | From 4.6L upto 30.4L |
| Defender | From 7L upto 18.6L |
| Discovery | From 4.5L upto 9.9L |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அளவில் பிரம்மாண்டமான மற்றும் விலையுயர்ந்த கார்களாக இருப்பினும், ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களுக்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்களுக்கு இந்தியாவில் அதிக கஸ்டமர்கள் கிடைத்து வருகின்றனர். இதனால், சுமார் ரூ.30 லட்சம் வரையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விலை குறைப்பானது இந்த நிறுவனத்தின் விற்பனையை மேலும் அதிகரிக்கும். இருப்பினும், இன்னும் ஜாகுவார் கார்களுக்கான விலை குறைப்புகள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









