தமிழ்நாட்டுக்கு ஒரு நல்லது நடக்க கூடாதே.. தினுசு தினுசா பிரச்னை வருது.. லேண்ட் ரோவர் இ-கார் உற்பத்தி நடக்குமா?
இந்திய பணக்காரர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களின் பிரியமான கார் பிராண்டாக ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover EV) உள்ளது. இது ஓர் சொகுசு கார் (Luxury Car) உற்பத்தி நிறுவனம் ஆகும். இங்கிலாந்து நாட்டு நிறுவனமான இது தற்போது டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் கைகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனமே உள்ளூரில் வைத்து தன்னுடைய மின்சாரத்தில் இயங்கும் கார்களை தயாரிக்க திட்டமிட்டு இருந்தது. அதாவது இந்தியாவிலேயே இ-கார்களை தயாரிக்க உள்ளது.
ஆனால், இந்த திட்டத்தை அதனால் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டாடா மோட்டார்ஸ் அதன் புதிய வாகன உற்பத்தி ஆலையை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ஆலையில் வைத்தே ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தன்னுடைய மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருந்தது.

மேலும், இங்கு வைத்து தயாரிக்கப்படும் வாகனங்களை அது இந்தியாவில் மட்டுமின்றி உலக சந்தையிலும் விற்பனைச் செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், சப்ளையர் பிரச்னை காரணமாக இந்த மொத்த பிளானுக்கும் நிறுவனம் முழுக்கு போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 70 ஆயிரத்திற்கும் அதிமான மின்சார சொகுசு வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே நிறுவனத்தின் இலக்காகும்.
இ-வாகனங்களுக்கு என்றே தயார் செய்யப்பட்ட எலெக்ட்ரிஃபைடு மாடுலர் ஆர்கிடெக்சரை பயன்படுத்தியே இத்தனை கார்களையும் அது தயார் செய்ய பிளான் போட்டு இருந்தது. இதற்காக சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் அந்நிறுவனம், உள்ளூர் சப்ளையர்களிடம் உதிரிபாகங்கள் மற்றும் அதற்கான விலையை நிர்ணயம் செய்வது குறித்து அறிந்துக் கொள்ள ஒரு கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், அப்போது உதிரிபாகங்களுக்கான விலைகளை வழங்குமாறும் சப்ளையர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்போது இந்த பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராய்ட்டர்ஸ்-இன் சமீபத்திய செய்திகளும் இதையே கூறுகின்றன. சந்தையின் தேவைக்கு ஏற்ப டாடா தன்னுடைய திட்டங்களை மாற்றியமைத்து இருப்பதாகவே அது தெரிவித்து இருக்கின்றது.
மேலும், தற்போதைய பேச்சுவார்த்தை நிறுத்தம் தற்காலிகமானது என்றும் அது தெரிவித்து உள்ளது. எனவே, விரைவில் இந்த விஷயத்தில் வேறு ஏதேனும் மாற்றங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிகின்றது. ஜாகுவார் லேண்ட் ரோவர் எலெக்ட்ரிஃபைடு மாடுலர் ஆர்கிடெக்சரைப் பயன்படுத்தி அந்த நிறுவனத்தின் மின்சார கார்கள் மட்டுமல்ல டாடாவின் எலெக்ட்ரிக் கார்களும் தயாரிக்கப்பட இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
அவின்யா உள்ளிட்ட கார் மாடல்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. டாடா நிறுவனம் தமிழகத்தில் தயார் செய்துக் கொண்டிருக்கும் புதிய வாகன உற்பத்தி ஆலை ஆண்டிற்கு 2.5 லட்சம் யூனிட்டுகளை தயாரிக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், முதல் கட்டமாக 25 ஆயிரம் யூனிட்டுகள் வாகனங்கள் மட்டுமே இந்த ஆலையில் வைத்து தயாரிக்கப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
ஜாகுவார் லேண்ட் ரோவர், தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் வைத்து தயாரிக்கும் எனில் அதன் விலை சற்றே குறைவானதாக இருக்கும். குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனைக்குக் கொண்டு வரப்படும் மின்சார கார்களைக் காட்டிலும் இதன் விலை மிகப் பெரிய அளவில் குறைவானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
மேலும், தமிழகத்தில் இந்த புதிய ஆலை செயல்பாட்டிற்கு வரும் எனில் தமிழகத்தின் நிதிநிலையில் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, புதிய வேலை வாய்ப்புகளும் மாநிலத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே தற்போது தள்ளிப் போகும் நிலை உருவாகி இருக்கின்றது. இது பலருக்கும் வேதனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
டிரைஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. உலக அளவிலும் மின்சார கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதை முன்னிட்டே உலக சந்தையின் இ-கார்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தன்னுடைய எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் பணிகளை ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








