எல்லாரும் போட்டி போட்டு வாங்கும் எலெக்ட்ரிக் கார் ஆசையில் மண் அள்ளி போட்டாங்க! இன்னும் சில நாட்கள் மட்டுமே!
ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் தனது கார்களின் விலையை 2% வரை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. வருகிற 2026ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் இந்த விலை உயர்வு குறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
உற்பத்தி & போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு மற்றும் இதர பொருளாதாரச் சீர்குலைவுகள் போன்ற காரணங்களால் அவ்வப்போது வாகனங்களின் விலைகள் உயர்த்தப்படுவதை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். அந்த வகையில்தான் தற்போது எம்ஜி நிறுவனம் அதன் விலை அதிகரிப்பை அறிவித்துள்ளது. ஒவ்வொரு கார் மற்றும் வேரியண்ட்டைப் பொறுத்து விலையேற்றத்தின் சதவீதம் மாறுபடும் என்றும் எம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவன குழுமமான ஜேஎஸ்டபிள்யூ குழுமமும், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் உலகளாவிய ஆட்டோமொபைல் நிறுவனமான சீனாவின் SAIC மோட்டார் நிறுவனமும் இணைந்து, 2023-இல் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கின. அதாவது, SAIC மோட்டார் குழுமத்தின் கீழ் செயல்பட்டுவரும் பிரிட்டிஷ் நாட்டின் எம்ஜி மோட்டார் இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ உடன் இணைந்து செயல்பட துவங்கியது.
இந்தக் கூட்டு முயற்சி, இந்தியாவில் ஸ்மார்ட் மற்றும் நிலையான வாகனச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, எலெக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் ஜேஎஸ்டபிள்யூ உடன் இணைந்த பிறகு எம்ஜி மோட்டார் தீவிரமாக உள்ளது. இதற்காக, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத் தயாரிப்புகளுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி மற்றும் புதுமைகளை அறிமுகப்படுத்துவதிலும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் உறுதியாக உள்ளது.

இங்கிலாந்தில் 1924ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மோரிஸ் கேரேஜஸ் (MG), அதன் ஸ்போர்ட்ஸ் கார்கள், ரோட்ஸ்டர்களுக்குப் பெயர் பெற்றது. அந்த சமயத்தில், பிரிட்டிஷ் பிரதமர்கள், அரச குடும்பத்தினர் எம்ஜி கார்களை அதிகம் வாங்கி பயன்படுத்தினர். 1930-இல் நிறுவப்பட்ட எம்ஜி கார் கிளப், உலகின் பெரிய கார் கிளப்களில் ஒன்றாகும்.
இவ்வாறு, கடந்த 100 ஆண்டுகளில் எம்ஜி ஒரு நவீன பிராண்டாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் குஜராத்தின் ஹாலோலில் உள்ள எம்ஜி மோட்டாரின் அதிநவீன தொழிற்சாலையில் ஆண்டுக்கு 1,00,000-க்கும் அதிகமான கார்களை தயாரிக்க முடியும்; இங்கு 6,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 'CASE' (இணைக்கப்பட்ட, தன்னாட்சி, பகிரப்பட்ட மற்றும் எலெக்ட்ரிக்) மொபிலிட்டி என்ற தொலைநோக்கு பார்வை உடன், இந்தியாவில் எம்ஜி பல புதுமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இணைய வசதி கொண்ட இந்தியாவின் முதல் எஸ்யூவி (SUV) கார் ஆன எம்ஜி ஹெக்டர் (Hector), இணைய வசதி கொண்ட முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆன எம்ஜி இசட்.எஸ் இவி (ZS EV), லெவல்-1 அடாஸ் (Level-1 ADAS) வசதி கொண்ட நாட்டின் முதல் பிரீமியம் எஸ்யூவி கார் ஆன எம்ஜி க்ளோஸ்டர் (Gloster), தனிப்பட்ட AI உதவியாளருடன் கூடிய அஸ்டர் (Astor) (லெவல்-2 உடன்), 'ஸ்ட்ரீட்-ஸ்மார்ட் கார்' & முதல் இன்டலிஜென்ட் சியூவி (CUV) கார் ஆன எம்ஜி கோமெட் இவி (Comet EV) ஆகியவை எல்லாம் எம்ஜி மோட்டாரில் இருந்து வந்தவையே.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எப்போதுமே புதுமைகளை புகுத்துவதில் ஆர்வம் காட்டும் எம்ஜி மோட்டாரின் புதிய விண்ட்சர் இவி (Windsor EV) ஆனது தற்சமயம் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக உள்ளது. ஆதலால், வருகிற ஜனவரி 1 முதல் புதியதாக கொண்டுவரப்படும் 2% விலை உயர்வு ஆனது எம்ஜி நிறுவனத்திற்கு பெரிய அளவில் பாதகமாக இருக்காது என்றே நினைக்கிறேன்.


Click it and Unblock the Notifications








