விலை குறைவான கார்களை களமிறக்க போகும் சிமெண்ட் கம்பெனி! டாடா பொழப்புல மண்ணை அள்ளி போட போறாங்க!
இந்தியாவை சேர்ந்த மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று ஜேஎஸ்டபிள்யூ குழுமம் (JSW Group). மும்பை (Mumbai) நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜேஎஸ்டபிள்யூ குழுமம், இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்கா என உலகின் பல்வேறு பிராந்தியங்களிலும் இயங்கி கொண்டுள்ளது.
பெயிண்ட், சிமெண்ட், ஸ்டீல், ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு என ஜேஎஸ்டபிள்யூ குழுமம், பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறது. இதில், ஆட்டோமொபைல் தொழிலும் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) நிறுவனத்துடன் இணைந்து, ஜேஎஸ்டபிள்யூ குழுமம் இயங்கி கொண்டுள்ளது.

ஆனால் ஜேஎஸ்டபிள்யூ குழுமம், கூடிய விரைவில் தனியாக எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் (JSW Motors) என்ற தனி நிறுவனத்தின் கீழ், புதிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார், அனேகமாக வரும் 2027ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் முதலில் சற்றே விலை உயர்ந்த பிரீமியம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில், ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் மிகவும் முக்கியமான ஒரு நிறுவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தற்போதைய நிலையிலேயே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில், மிக முக்கியமான ஒரு இடத்தில் இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். விண்ட்சர் இவி (Windsor EV), கோமெட் இவி (Comet EV) மற்றும் இஸட்எஸ் இவி (ZS EV) போன்ற எலெக்ட்ரிக் கார்களை எல்லாம் இந்த கூட்டணி விற்பனை செய்து வருகிறது.
அத்துடன் சைபர்ஸ்டர் (Cyberster) மற்றும் எம்9 (M9) ஆகிய எலெக்ட்ரிக் கார்களையும், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் கூடிய விரைவில் ஜேஎஸ்டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் தனியாக விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளது.
இதற்காக ஒடிசா (Odisha) மாநிலத்தில் புதிய தொழிற்சாலையை ஜேஎஸ்டபிள்யூ குழுமம் கட்டமைக்கவுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள நாரஜ் பகுதியில் எலெக்ட்ரிக் கார் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலைகளை ஜேஎஸ்டபிள்யூ குழுமம் அமைக்கவுள்ளது. அதே நேரத்தில் ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதீப் பகுதியில் லித்தியம் சுத்திகரிப்பு ஆலையை ஜேஎஸ்டபிள்யூ குழுமம் அமைக்கவுள்ளது.
இந்த தொழிற்சாலைகள் மூலமாக ஒடிசாவில் 11 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் இந்த முடிவு, இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எலெக்ட்ரிக் கார்கள்தான் நமது எதிர்காலம் என்றாகி விட்டது. அதாவது எலெக்ட்ரிக் கார்களுக்கு எதிர்காலத்தில் நல்ல 'டிமாண்ட்' இருக்கும். எனவேதான் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் உள்பட இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தீவிரமாக தயாராகி வருகின்றன.


Click it and Unblock the Notifications








