வேலியே பயிரை மேய்ந்த கதை.. 3 வருடங்களாக ஆந்திராவில் நடந்த திருட்டு! வெளிநாட்டு கார் கம்பெனிக்கு பல கோடி நஷ்டம்
கியா (Kia), உலகளவில் பிரபலமான தென்கொரிய கார் நிறுவனம். இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் நுழைந்த கியா, குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது. இந்தியாவில் மட்டும் மாதத்திற்கு சராசரியாக 20 ஆயிரம் கார்களை விற்பனை செய்யும் கியா நிறுவனம், இந்திய மார்க்கெட்டிற்குள் நுழையும்போதே ஆந்திராவில் கார் உற்பத்தி தொழிற்சாலை உடன் தான் நுழைந்தது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அனந்தபுரம் மாவட்டத்தில் சுமார் 536 ஏக்கர் பரப்பளவில் உள்ள கியா தொழிற்சாலையில் தற்போது பெரிய அளவிலான திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
திருட்டு சம்பவம் தற்போது நடந்துள்ளது என சொல்வதை காட்டிலும், பல நாட்களாக நடைபெற்றுவந்த திருட்டு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மாதம் இல்லை... இரு மாதங்கள் இல்லை... சுமார் 3 வருடங்களாக கியா தொழிற்சாலையில் பணியாற்றிய இரு பணியாளர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இதில் அதிர்ச்சிக்குள்ளாகும் விஷயம் என்னவென்றால், எந்தவொரு காரிலும் முக்கியமான மற்றும் விலையுயர்ந்த பாகமான என்ஜின்களை 3 வருடங்களுக்கும் மேலாக யாருக்கும் தெரியாமல் அவர்கள் களவாடி வந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய ஆய்வில் சுமார் ஆயிரத்து எட்டு கியா கார் என்ஜின்கள் தொழிற்சாலைக்கு உள்ளே இருந்தே திருடப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருடப்பட்ட இந்த 1,008 கார் என்ஜின்களின் மதிப்பு ஏறக்குறைய சுமார் ரூ.20 கோடி அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவத்திற்கு கியா தொழிற்சாலையில் பணியாற்றிய முன்னாள் தொழிலாளர்கள் மற்றும் பணியாற்றும் இந்நாள் தொழிலாளர்கள் மட்டுமின்றி, உலோகங்களை அழித்து அதன் மூலம் வணிகம் செய்துவரும் ஸ்க்ராப் டீலர்களும் (Scrap Dealers) காரணமாக இருந்துள்ளனர்.

அதாவது, திருடப்பட்டு கொண்டுவரப்படும் புத்தம் புதிய கார் என்ஜின்களை உருமாற்றம் செய்து விற்பனை செய்வதை ஸ்க்ராப் டீலர்கள் கவனித்துக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக கியா தொழிற்சாலையில் சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் உடன் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம், கியாவின் தொழில்துறை செயல்பாடுகள், பங்குதாரர்களின் நம்பிக்கை மற்றும் வேலைவாய்ப்புகளில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
கியா இதுகுறித்து கடந்த மார்ச் மாதத்திலேயே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தது. அதனை அப்போதே நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம். கியா நிறுவனம் கார் என்ஜின்கள் திருடுப்போவதை வருடக்கணக்கில் கவனிக்காமல் இருந்துள்ளது. கியா கார்களில் பொருத்தப்படும் என்ஜின்கள் மற்றொரு பிரபலமான தென்கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) உதவியுடன் உருவாக்கப்படுபவை ஆகும்.

ஹூண்டாயின் உதவியுடன் எத்தனை என்ஜின்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அவற்றிற்கான மூலப்பொருட்களாக எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை சரிப்பார்க்கும்போது தான் ரூ.20 கோடி அளவிற்கு பெரிய அளவிலான திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கியா தொழிற்சாலையில் கார் என்ஜின்களை உற்பத்தி செய்து வழங்கும் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி மற்றும் டீம் லீடர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இரு ஸ்க்ராப் டீலர்கள் உதவியுள்ளதாகவும், தொழிற்சாலையில் இருந்து என்ஜின்களை ஸ்க்ராப் டீலர்களின் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வெளியில் இருந்து இருவர் உதவியுள்ளதாகவும் போலீசார் தங்களது விசாரணையில் கண்டுப்பிடித்துள்ளனர். தொழிற்சாலையில் பணியாற்றிய முன்னாள் தொழிலாளர்கள் இருவரை தவிர்த்து மற்ற நால்வரும் டெல்லிக்கு தப்பித்து சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்புக்காக போடப்பட்ட வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தொழிற்சாலையில் பணியாற்றியவர்களே திருட்டில் ஈடுப்பட்டுள்ளனர். ரூ.20 கோடி என்பது மிக பெரிய தொகை என்பதால், இந்த திருட்டு சம்பவத்தை போலீசார் மிகவும் தீவிரமாக விசாரிப்பர் என்பது உறுதி. தற்போது பணியாற்றும் பணியாளர்களும் இந்த திருட்டுக்கு காரணமாக இருக்கக்கூடும் என முன்னதாக யூகிக்கப்பட்டது. ஆனால், முன்னாள் தலைமை பணியாளர்கள் இந்த திருட்டில் ஈடுப்பட்டு, கியா நிறுவனத்திற்கு தெரியும் முன்னரே வேலையை விட்டு சென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications









