வாரண்டியை உயர்த்தி இந்திய கார் கம்பெனிகளுக்கு ஷாக் கொடுத்த கியா! புதுசா கார் வாங்குபவர்களுக்கு செம்ம லக்கு!
கியா இந்தியா (Kia India) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அதன் பிரபலமான நான்கு கார்களான செல்டோஸ் (Seltos), சொனெட் (Sonet), சைரோஸ் (Syros) மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் (Carens Clavis) ஆகிய கார்களுக்கு கூடுதல் வாரண்டி (Extended Warranty) திட்டத்தை கியா வழங்குகிறது.
இந்த புதிய முயற்சி, நீண்ட கால மன அமைதியையும், மேம்பட்ட வாகன அனுபவத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள கியா உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தின் வாரண்டி கவரேஜை, வழக்கமான 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகள் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் இவ்வளவு நீண்ட கால உத்தரவாத திட்டத்தை வழங்கும் ஒரு சில நிறுவனங்களில் கியாவும் இணைந்துள்ளது. கூடுதல் வாரண்டி சேவையை, நாடு முழுவதும் உள்ள எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட கியா டீலர்ஷிப்பிலும் பெறலாம். வாங்கும் அனைத்து வாகனங்களுக்கும் கியா நிறுவனம் 3 வருட ஸ்டாண்டர்ட் வாரண்டியை தொடர்ந்து வழங்கி வருகிறது.

கூடுதல் கவரேஜ் விரும்பும் வாடிக்கையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் கோளாறுகளில் இருந்து தங்கள் கார்களைப் பாதுகாக்கும் உத்தரவாத திட்டங்களைத் தேர்வு செய்யலாம். உற்பத்தி அல்லது பழுது குறைபாடுகளால் ஏற்படும் கோளாறுகளில் இருந்து, வழக்கமான வாரண்டி காலத்திற்கு அப்பாலும், எதிர்பாராத பழுதுபார்ப்பு செலவுகளில் இருந்து உரிமையாளர்களை கூடுதல் வாரண்டி பாதுகாக்கிறது.
ஏற்கனவே 5 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி வைத்திருக்கும் கியா வாடிக்கையாளர்களுக்காகவும், இந்த நிறுவனம் ஒரு கவர்ச்சிகரமான மேம்படுத்தல் ஆப்ஷனை வழங்குகிறது. இந்த மேம்படுத்தல் மூலம், 5+2 வருட திட்டத்தின் கீழ் மொத்த கவரேஜை 7 வருடங்களாக நீட்டிக்கிறது. இதற்கான கட்டணம் ஆனது வரிகள் தவிர்த்து ரூ.32,170 இல் இருந்து தொடங்குகிறது.

அதேசமயம், புதியதாக கியா கார் வாங்குபவர்கள் நேரடியாக 7 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி தொகுப்பைத் தேர்வு செய்யலாம். இதன் விலை ரூ.47,249 (வரிகள் தவிர்த்து) முதல் தொடங்குகிறது. கியா நிறுவனத்தின் புதிய நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தின் குறிப்பிடத்தக்க நன்மைகளில் ஒன்று, அதை வெவ்வேறு உரிமையாளர்களுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி ஆகும்.
அதாவது, கவரேஜ் காலத்தில் வாகனம் விற்கப்பட்டால், மீதமுள்ள வாரண்டியை புதிய உரிமையாளருக்கு மாற்றிக் கொள்ளலாம். இது காரின் மறுவிற்பனை மதிப்பை அதிகரிப்பதுடன், புதியதாக வாங்குபவர்களுக்கும் வாகனத்தின் நீண்ட கால நம்பகத்தன்மை குறித்த உறுதியையும் அளிக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம், 7 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தை ஏற்கனவே வழங்கிவரும் ஹோண்டா (Honda), ரெனால்ட் (Renault) மற்றும் டொயோட்டா (Toyota) போன்ற பிற முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் கியா இணைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாடிக்கையாளர் திருப்தி மற்றும் அதன் தயாரிப்பு தரத்தில் கியாவுக்கு உள்ள நம்பிக்கையை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் எடுத்துக் காட்டுகிறது. நெகிழ்வான வாரண்டி ஆப்ஷன்கள் மற்றும் விரிவான கவரேஜ் வழங்குவதன் மூலம், கியா நிறுவனம் நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் மன அமைதிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பிராண்டாக தனது நற்பெயரைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications









