புது கியா காரை புக்கிங் போட்டவங்க எல்லாம் ரெடியா இருங்க! ஜன.2இல் விலை அறிவிச்ச உடனே எல்லாமே ஸ்டார்ட் ஆகிடும்!
கியா இந்தியா (Kia India) நிறுவனம் தனது முற்றிலும் புதிய செல்டோஸ் எஸ்யூவி (Seltos SUV) காரின் உற்பத்தியை ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரில் உள்ள அதன் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளது. இதன்படி உருவாக்கப்பட்ட முதல் செல்டோஸ் காரை அறிமுகப்படுத்தும் நிகழ்வில், கியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குவாங்கு லீ (Gwanggu Lee) உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா, இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் நுழைந்த போது அறிமுகம் செய்த முதல் கார், செல்டோஸ் ஆகும். அதன்பின், கியாவில் இருந்து பல புதிய கார் மாடல்கள் வெளிவந்தாலும், ஒருபக்கம் செல்டோஸ் காருக்கு எப்போதும்போல் சிறப்பான வரவேற்பு கிடைத்துவந்த நிலையில், சமீப மாதங்களாக இந்த காரின் விற்பனை குறைய துவங்கியது.

இதை சரியாக புரிந்துக் கொண்ட கியா நிறுவனம், இந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் காரை விற்பனைக்கு கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது என்பதை புரிந்துக் கொண்டு, இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை செல்டோஸ் காரை சமீபத்தில் வெளியீடு செய்தது. இதனை தொடர்ந்து, புதிய செல்டோஸ் காரின் விலைகள் 2026 ஜனவரி 2 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
புதிய செல்டோஸ், 4,460 மிமீ நீளம், 1,830 மிமீ அகலம், 2,690 மிமீ வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) கொண்டதாக, தன் பிரிவிலேயே பெரிய அளவிலான காராக விற்பனைக்கு வருகிறது. மேலும், புதிய செல்டோஸ் கார் மேம்பட்ட கேபின் இடவசதியையும் சிறந்த நிலைத்தன்மையையும் உறுதி செய்யும் வகையில், கியாவின் 'ஆப்போசிட்ஸ் யுனைடெட்' வடிவமைப்புத் தத்துவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கியா செல்டோஸ் காரின் அடையாளமே அதன் 'புலி மூக்கு' டிசைனிலான முகப்பு பகுதி ஆகும். அது புதிய தலைமுறை மாடலில் மேலும் நவீன தோற்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கேற்ப வழங்கப்பட்டுள்ள 'பனிக்கட்டி' டிசைனிலான எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய அலாய் சக்கரங்களுடன், புதிய செல்டோஸ் ஒரு தைரியமான, பிரீமியம் தோற்றத்தைப் பெற்றுள்ளது.
காரின் உட்புறத்தில், டாஷ்போர்டில் 75.18 செ.மீ (30-அங்குல) டிரிணிட்டி பனோரமிக் டிஸ்ப்ளே ஆனது பிரீமியம் தரத்திலான போஸ் 8-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ ஆப்பிள் கார்ப்ளே, கியா கனெக்ட் 2.0 சாஃப்ட்வேர், ஓவர்-தி-ஏர் அப்டேட்கள் போன்ற அம்சங்கள் காருக்குள் வசதியை மேம்படுத்துகின்றன.
இவற்றுடன், பிரிவிலேயே முதல் காராக, காருக்கு அருகில் சென்றதும் தானாக கதவுகளை அன்லாக் செய்யும் ஸ்மார்ட் கீ அம்சமும் புதிய செல்டோஸை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கியாவின் உலகளாவிய கே3 தளத்தில் வடிவமைக்கப்பட்ட செல்டோஸ், மேம்பட்ட உறுதித்தன்மை, சஸ்பென்ஷன், குறைந்த NVH-யை வழங்குகிறது.

இது சீரான டிரைவிங், சிறந்த பாடி கண்ட்ரோல் மற்றும் வளைவுகளில் திரும்பும்போது டிரைவருக்கு கூடுதல் தைரியத்தை கொடுப்பதாக இந்த காரை ஓட்டி பார்த்த பின் நாங்கள் வழங்கிய ரிவியூவில் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். புதிய செல்டோஸ் காரில் பாதுகாப்புக்காக 24 ஸ்டாண்டர்ட் அம்சங்கள் மற்றும் 21 ஆட்டோமேட்டிக் அம்சங்களுடன் கூடிய லெவல்-2 அடாஸ் (ADAS) பாதுகாப்புத் தொகுப்பு உள்ளது.
1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் பெட்ரோல் (115 பி.எஸ், 144 என்.எம்), 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்ட்ரீம் T-GDI டர்போ பெட்ரோல் (160 பிஎஸ், 253 என்.எம்) மற்றும் 1.5 லிட்டர் VGT டீசல் (116 பிஎஸ், 250 என்.எம்) என மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் புதிய செல்டோஸ் கார் புக்கிங் செய்ய கிடைக்கிறது. இவை 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு இண்டெலிஜண்ட் மேனுவல், ஐவிடி, 7-ஸ்பீடு டிசிடி, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அனந்தபூர் ஆலையில் உற்பத்தி தொடங்கிவிட்டதால், புதிய தலைமுறை செல்டோஸ் காரின் டெலிவிரிகளை கியா காத்திருப்பு காலமின்றி விரைவாக உறுதி செய்யும் என நம்புகிறோம். கியா மிட்-எஸ்யூவி கார்கள் உத்தியில் புதிய செல்டோஸ் முக்கிய படியாகும். 2026-இல் 'பெரியது, தைரியமானது, தொழில்நுட்பத்தில் மேம்பட்டது' என்ற இலக்குடன் செல்டோஸின் சந்தை நிலையைத் தக்கவைக்க கியா நோக்கம் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications









