30 வருஷத்துக்கு முன் இதையெல்லாம் நெனைச்சி பார்த்திருக்க மாட்டார்! சிஇஓ-க்கு அடுத்த இடத்தில் தமிழ்நாட்டுக்காரர்
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு ஆட்டோமொபைல் வாகனங்களை விற்பனை செய்வதில் பிரம்மாண்டமான நிறுவனமாக மஹிந்திரா உருவெடுத்து வருகிறது.
ஆரம்பத்தில் விவசாயத்திற்கு தேவையான கருவிகள் மற்றும் டிராக்டர்களையும், கனரக வாகனங்களையும் உற்பத்தி செய்துவந்த மஹிந்திரா நிறுவனம், அதன்பின் கார்கள் உற்பத்தியில் தீவிரமாக இறங்கி, தற்சமயம் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, கடந்த சில வருடங்களாக மஹிந்திராவின் கார்கள் விற்பனை பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

இந்த அளவிற்கு ஆட்டோமொபைல் துறையில் ஆதிக்கம் மிகுந்த நிறுவனமாக மாறிவரும் மஹிந்திரா & மஹிந்திரா, அதன் உயர்மட்ட தலைமை நிலையிலான அதிகாரிகளை தற்போது பணி மாற்றம் செய்து அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த ஆர் வேலுச்சாமி (R Velusamy) அவர்கள் முன்னதாக மஹிந்திரா ஆட்டோமொபைல் தொழிற்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவின் தலைவாராக இருந்தார்.
இந்த நிலையில், ஆர் வேலுச்சாமி தற்போது மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் வணிகங்களை கவனித்துக் கொள்ளும் தலைவராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, மஹிந்திரா நிறுவனம் உருவாக்கும் அனைத்து கார்கள் மற்றும் எடை குறைவான கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதற்கான வணிக யுக்திகளை வகுக்கக்கூடியவராக இனி ஆர் வேலுச்சாமி விளங்க உள்ளார்.

மஹிந்திரா கனரக வாகனங்களுக்கான வணிகத்தை மட்டும் ஆர் வேலுச்சாமி கவனித்துக் கொள்ள போவதில்லை. இவர் தற்போது ஏற்றிருக்கும் பதவியில் முன்னதாக வீஜய் நக்ரா (Veejay Nakra) என்பவர் இருந்தார். வீஜய் நக்ரா தற்போது மஹிந்திராவின் வேளாண் சார்ந்த கருவிகளை உருவாக்கும் வணிகத்திற்கான தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பொறுப்பில் முன்பு இருந்த ஹேமந்த் சிக்கா, தற்போது மஹிந்திரா ஏற்றுமதி & இறக்குமதி பிரிவின் நிர்வாக இயக்குனர் & சிஇஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர் வேலுச்சாமி உள்பட மேற்கூறப்பட்ட மஹிந்திரா தலைமை அதிகாரிகள் அனைவரும் நேரடியாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் மற்றும் வேளாண் பிரிவுக்கான நிர்வாக இயக்குனரும், சிஇஓ-வுமான ராஜேஷ் ஜேஜூரிகரின் கீழ் செயல்படுவர். ஆர் வேலுச்சாமியை பற்றி பார்த்தோமேயானால், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவரான இவர் மஹிந்திராவில் 1996ஆம் ஆண்டில் பணிக்கு சேர்ந்தார்.
விரைவாகவே ஆர் வேலுச்சாமியின் திறனை புரிந்துக் கொண்ட மஹிந்திரா நிறுவனம், அவரை ஆஸ்திரியா (Austria) நாட்டிற்கு டீசல் என்ஜின் (Diesel Engine) தொழிற்நுட்பத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பியது. அங்கு, உலகின் மிக பெரும் என்ஜின் மேம்பாட்டு நிறுவனமான ஏவிஎல் (AVL) உடன் இணைந்து ஆர் வேலுச்சாமி பணியாற்றினார்.
அந்த சமயத்தில் மஹிந்திராவின் டீசல் என்ஜின்கள் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஹூண்டாய் (Hyundai) போன்ற மற்ற நிறுவனங்களின் டீசல் என்ஜின்களுக்கு இணையாக இல்லை. இதனால், ஏவிஎல் நிறுவனத்தின் உதவியை அந்த சமயத்தில் மஹிந்திரா நாடியது. அதன்படி, மஹிந்திரா- ஏவிஎல் நிறுவனங்களின் கூட்டணிக்காக மஹிந்திராவில் இருந்து ஆஸ்திரியாவுக்கு அனுப்பப்பட்ட மஹிந்திரா பணியாளர்களில் ஆர் வேலுச்சாமியும் ஒருவராவார்.
ஏவிஎல் நிறுவனத்தின் என்ஜின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சோதனைகள் அனைத்தையும் தெளிவாக புரிந்துக்கொண்ட ஆர் வேலுச்சாமி, அதே தெளிவுடன் இந்தியா வந்து மஹிந்திரா நிறுவனத்திற்காக உலக தரம் வாய்ந்த டீசல் என்ஜின்களை உருவாக்கினார். இந்தியா திரும்பிய பின்னர் மஹிந்திரா நிறுவனத்தில் எம்ஹாவ்க் (mHawk) டீசல் என்ஜின்களை உருவாக்கும் குழுவை ஆர் வேலுச்சாமி தலைமை தாங்கி நடத்தி சென்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 25 வருடங்களில் மஹிந்திரா நிறுவனத்தின் வாகனங்களில் பொருத்தப்பட்ட டீசல் என்ஜின்களின் உருவாக்கத்திற்கு ஆர் வேலுச்சாமியின் பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும். இவ்வாறு, ஆரம்பத்திலேயே மஹிந்திரா நிறுவனத்தின் நம்பிக்கையை பெற்றவர் தற்போது மஹிந்திரா சிஇஓ-க்கு அடுத்த நிலையை பெற்றிருப்பது தமிழர்களாகிய நமக்கு தான் பெருமை ஆகும்.


Click it and Unblock the Notifications








