ஒரே வருஷத்தில் கார் மார்க்கெட் மொத்தமா மாறிபோச்சு! மாருதிக்கு அடுத்து அதிகம் பேர் நம்புவது இந்த கம்பெனியை தான்
இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்தியாவில் அதிகம் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக பிரச்சனையே இல்லாமல் முதலிடத்தை மாருதி சுஸுகி (Maruti Suzuki) பிடித்துவிடுகிறது. இந்திய-ஜப்பானிய கூட்டு நிறுவனமான இதனை கார்கள் விற்பனையில் வேறொரு நிறுவனம் முந்துவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் போல் இருக்கிறது. இதற்கடுத்து 2வது இடத்தை பிடிப்பது யார் என்பதில்தான் பலத்த போட்டி நிலவி வருகிறது. வழக்கமாக, மாருதி சுஸுக்கு அடுத்து 2வது இடத்தை தென்கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) பிடிப்பது வழக்கம்.
ஹூண்டாயை முந்தி எப்போவாவது சில மாதங்களில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) 2வது இடத்தை பிடிப்பது உண்டு. ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த இரு நிறுவனங்களுக்கும் பெரிய ஷாக் கொடுத்து மஹிந்திரா (Mahindra) 2வது இடத்தை சொந்தமாக்கி வருகிறது. கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் முதல்முறையாக ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்களை முந்தி கார்கள் விற்பனையில் மஹிந்திரா 2வது இடத்தை பிடித்தது.

அதன்பின், மார்ச் மாதத்தில் மீண்டும் தங்களது பழைய 2வது மற்றும் 3வது இடங்களை ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் பிடித்த நிலையில், 4வது இடத்திற்கு மஹிந்திரா தள்ளப்பட்டது. ஆனால், அடுத்த ஏப்ரல் மாதத்திலேயே மீண்டும் 2வது இடத்தை பிடித்து மீண்டும் ஷாக் கொடுத்து மஹிந்திரா, அதனை தொடர்ந்து நடந்து முடிந்த மே மாத கார்கள் விற்பனையிலும் 2வது இடத்தை தனதாக்கி உள்ளது.
2வது இடத்தை பிடித்தது மட்டுமின்றி, இதுவரையில் ஒரு மாதத்தில் கார்கள் விற்பனையில் அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கையை கடந்த மே மாதத்தில் மஹிந்திரா பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 431 ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் 52 ஆயிரத்து 330 கார்களை விற்பனை செய்ததே ஒரு மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்த அதிகப்பட்ச கார்கள் எண்ணிக்கையாக இருந்த நிலையில், தற்போது அதனை மஹிந்திராவின் மே மாத விற்பனை முந்தியுள்ளது.

அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே மே மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்த கார்களின் விற்பனை எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 43 ஆயிரத்து 218 ஆகும். கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் சுமார் 9 ஆயிரத்து 213 கார்களை மஹிந்திரா கூடுதலாக விற்பனை செய்துள்ளது. இதில் இருந்து கடந்த 1 வருடத்தில் மஹிந்திரா அடைந்திருக்கும் உயரத்தை அறியலாம்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (XUV 3XO) காரில் இருந்து தார் ராக்ஸ் (Thar ROXX) மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பிஇ 6 (BE 6) & எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்கள் வரையில் எல்லாமே மார்க்கெட்டில் பெரிய வெற்றியை பெற்று வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாத விற்பனையை போன்று, கடந்த மே மாத விற்பனையிலும் மஹிந்திராவுக்கும் ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கும் இடையே விற்பனை எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் உள்ளது. 3வது இடத்தை பிடித்துள்ள ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கடந்த மே மாதத்தில் விற்பனை செய்த கார்களின் விற்பனை எண்ணிக்கை 43 ஆயிரத்து 861 ஆகும்.
4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் கடந்த மாதத்தில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை வெறும் 41 ஆயிரத்து 557 ஆகும். இந்த இரு நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அவற்றின் 2024 மே விற்பனை எண்ணிக்கைகளை காட்டிலும் ஏறக்குறைய 11% குறைவாகும். கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் ஹூண்டாய் 4வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், கடந்த மே மாதத்தில் டாடா மோட்டார்ஸ் 4வது இடத்திற்கு சறுக்கி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் வளர்ச்சி மாதத்திற்கு மாதம் நம்மை ஆச்சிரியப்படுத்துகிறது. அதுவும் 1 வருடம் என்கிற குறுகிய காலத்தில் இந்த உயரத்தை மஹிந்திரா எட்டியுள்ளது. மஹிந்திராவின் இந்த அதிரடியான முன்னேற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், அவற்றுள் முக்கியமானது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய கார் வடிவமைப்பாளர் பிரதாப் போஸ் மஹிந்திராவுக்கு மாறியது ஆகும். டாடா மோட்டார்ஸின் சரிவுக்கு காரணம் என்ன என்பதும் இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.


Click it and Unblock the Notifications









