மஹிந்திரா காரை ஆதாரமில்லாமல் குறை கூற எப்படி தான் மனசு வருதோ... வெச்சு லெஃப்ட்-ரைட் வாங்கிடுச்சு!!
மஹிந்திரா (Mahindra), முன்னணி கார் நிறுவனம் என்பது நம் எல்லாருக்குமே தெரியும். குறிப்பாக, கடந்த 1 வருடமாக கார்கள் விற்பனையில் மஹிந்திரா புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த ஆண்டு இறுதியில் மஹிந்திராவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பிஇ 6 எலக்ட்ரிக் கார் (BE 6 Electric Car) ஆனது மார்க்கெட்டில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. அட்டகாசமான தோற்றத்தில், பல்வேறு விதமான சென்சார்கள் மற்றும் கேமராக்கள் உடன் பிஇ 6 காரை மஹிந்திரா உருவாக்கியுள்ளது.
இருப்பினும், நம் ஊர் சாலைகளுக்கு எத்தனை சென்சார்கள் உடன் காரை உருவாக்கினாலும், பிரச்சனை எந்த வடிவில் வரும் என்றே சொல்ல முடியாது அல்லவா. அவ்வாறுதான், சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் கார் ஒன்று டட்சன் கோ+ (Datsun Go+) என்கிற ஹேட்ச்பேக் காருடன் மோதலுக்கு உள்ளாகி உள்ளது.

பிஇ 6 எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டாலும், இன்னும் கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தில் விபத்திற்குள்ளான பிஇ 6 கார் ஆனது ஷோரூம் பயன்பாடுகளுக்காக கொண்டு செல்லப்பட்ட போது விபத்தில் சிக்கியுள்ளது. இந்தியாவில் கார் விபத்துகளுக்கு ஒன்றும் பஞ்சமே இல்லை. இருந்தாலும், பல்வேறு பாதுகாப்பு தொழிற்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட பிஇ 6 கார் விபத்தில் சிக்கியது, அதன் பாதுகாப்பு தரம் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் இந்த விபத்து தொடர்பான தனது விளக்கத்தை அளித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் பல்வேறு விதமான கருத்துகளை மஹிந்திரா தெரிவித்துள்ளது. அவற்றுள் முக்கியமானது, "இது ஆதாரமற்றது மற்றும் தவறானது" என்பதாகும். இந்த அறிக்கையில், "ஹைதராபாத்தில் பின்பக்க மோதலுக்கு பிறகு சென்சார் செயலிழந்ததால் மஹிந்திரா பிஇ 6 நின்றுவிட்டது என கூறும் ஒரு வீடியோவை ஜனவரி 18, 2025 அன்று பதிவேற்றியதை தொடர்ந்து செய்திகள் வெளிவந்தன என்பது எங்களுக்கு தெரியும்.

இந்த கூற்றுகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என்று நாங்கள் திட்டவட்டமாக கூறுகிறோம். வீடியோவில் கூறப்பட்டுள்ள படி, வாகனம் நிறுத்தப்பட்டது எந்த சென்சார் செயலிழப்பு உடனும் தொடர்புடையது அல்ல. மோதலை தொடர்ந்து, கார் உடனடியாக சாலையின் ஓரத்திற்கு நகர்த்தப்பட்டது. இது அதன் செயல்பாட்டை தெளிவாக காட்டுகிறது.
வாகனம் ஆய்வுக்காக டீலர்ஷிப்பிற்கு சரியான முறையில் கொண்டு செல்லப்பட்டது. மஹிந்திராவில் பாதுகாப்பு மற்றும் தரம் ஆனது மிக முக்கியமானது ஆகும். இதுவரையில் இல்லாத மதிப்பெண்களாக, பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் பிஇ 6 சமீபத்தில் 5-ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

விபத்திற்குபின், காரில் குறைந்த சேதாரங்கள் எங்களது வடிவமைப்பின் உறுதித்தன்மையை வெளிக்காட்டுகிறது. கூடுதலாக, எங்கள் அதிநவீன மின்சார அசெம்பிளி லைனில் தயாரிக்கப்படும் 6 வாகனங்களும் சென்சார்கள் மற்றும் முக்கியமான அமைப்புகளுக்கான கடுமையான தர சோதனைகளுக்கு உட்படுகின்றன. இது ஒப்பிட முடியாத நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்த பிஇ 6 எலக்ட்ரிக் கார் விபத்தை மஹிந்திரா மறுக்கவில்லை. ஆனால், இந்த விபத்து சென்சார் கோளாறால் ஏற்பட்டது என்பதை தான் மஹிந்திரா மறுக்கிறது. தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதால், இதுகுறித்த கூடுதல் விபரங்கள் இனி வரும் நாட்களில் வெளிவரும்.


Click it and Unblock the Notifications









