ஜிஎஸ்டி குறைச்சது யாருக்கு பலனோ, இல்லையோ... மஹிந்திராவுக்கு இலாபம் கொட்டுது!
மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (Mahindra & Mahindra) நிறுவனத்தின் விவசாய உபகரணங்கள் (Farm Equipments) வணிகப் பிரிவு, நடந்து முடிந்த 2025 செப்டம்பர் மாத டிராக்டர்கள் (Tractors) விற்பனை விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த 2025 செப்டம்பர் மாத உள்நாட்டு மஹிந்திரா டிராக்டர்கள் விற்பனை எண்ணிக்கை 64 ஆயிரத்து 946 யூனிட்டுகளாகப் பதிவாகி உள்ளது. இது 2024 செப்டம்பர் மாதத்தில் விற்கப்பட்ட 43 ஆயிரத்து 201 டிராக்டர்கள் உடன் ஒப்பிடுகையில் சுமார் 50% அதிகம் ஆகும்.

அதாவது, 2024 செப்டம்பர் உடன் ஒப்பிடுகையில் 2025 செப்டம்பரில் மஹிந்திரா டிராக்டர்கள் விற்பனை டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி (GST) குறைப்பு மற்றும் நவராத்திரி (Navratri) பண்டிகை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு செப்டம்பரிலேயே வந்ததும் இந்த வளர்ச்சிக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆயிரத்து 165 மஹிந்திரா டிராக்டர்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. ஆக, ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி) கடந்த செப்டம்பர் மாதத்தில் 66 ஆயிரத்து 111 டிராக்டர்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் வெறும் 44 ஆயிரத்து 256 மஹிந்திரா டிராக்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்தச் சாதனை குறித்து மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் விவசாய உபகரண வணிகப் பிரிவின் தலைவர் வீஜய் நக்ரா கருத்துத் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது, "செப்டம்பரில் உள்நாட்டுச் சந்தையில் 64,946 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளோம். இது கடந்த ஆண்டை விட 50% வளர்ச்சி ஆகும். மாண்புமிகு பிரதமரின் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த முடிவு மற்றும் இந்த ஆண்டு செப்டம்பரில் வந்த நவராத்திரியின் முதல் 9 நாட்களில் விற்பனை அதிகரித்துள்ளது. நவராத்திரி கடந்த ஆண்டில் அக்டோபரில் வந்தது.

சாதகமான காரீஃப் சாகுபடி, இந்த பருவத்தில் வேளாண் சார்ந்த பணிகள் அதிகரிப்பு மற்றும் இயல்பை விட அதிக பருவமழை போன்ற காரணிகளும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளன" என்று வீஜய் நக்ரா விளக்கி கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமின்றி, கடந்த 6 மாத காலமாகவே மஹிந்திரா டிராக்டர்கள் விற்பனை கவனிக்கத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான 6 மாத காலக்கட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 336 டிராக்டர்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டில் இதே 6 மாத காலக்கட்டத்தில் மஹிந்திரா டிராக்டர்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது வெறும் 2 லட்சத்து 6 ஆயிரத்து 236 யூனிட்களாக மட்டுமே பதிவாகியது.

இந்த வகையில் பார்த்தால், கடந்த 6 மாதத்தில் மஹிந்திரா டிராக்டர்கள் விற்பனை 20% அதிகரித்துள்ளது. இதேபோல், மஹிந்திரா டிராக்டர்கள் ஏற்றுமதியும் 12% அதிகரித்துள்ளது. 2024 ஏப்ரல்- செப்டம்பரில் 8 ஆயிரத்து 613 மஹிந்திரா டிராக்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களில் 9 ஆயிரத்து 689 டிராக்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா டிராக்டர்களின் விற்பனை அதிகரித்து வருவது, இந்தியாவில் வேளாண் சார்ந்த பணிகளில் மக்கள் அதிகமாக ஈடுப்பட ஆரம்பித்துள்ளனர் என்பதை காட்டுகிறது. மஹிந்திரா டிராக்டர்கள் விவசாய பணிகளை தாண்டி, மற்ற வேலைகளுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும், மஹிந்திரா விவசாய உபகரணங்கள் வணிகப் பிரிவில் இருந்து டிராக்டர்கள் மட்டுமின்றி, விவசாயத்திற்கு தேவையான வேறு சில உபகரணங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications









