இந்தியாவுக்கு வரும் வாய்ப்பை தமிழ்நாடு வளைச்சு போடுவது இது ஒன்னும் முதல்முறை அல்ல!
வின்ஃபாஸ்ட் (Vinfast), வியட்நாம் நாட்டை சேர்ந்த முன்னணி கார் நிறுவனம். குறிப்பாக, தாயக நாடான வியட்நாமில் பெரிய அளவிலான நெட்வொர்க்கை வின்ஃபாஸ்ட் கொண்டுள்ளது. 2-வீலர்களில் இருந்து விலையுயர்ந்த கார்கள் வரையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுவதால், அதற்கேற்ப நன்கு பிரம்மாண்டமான தொழிற்சாலை இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக வியட்நாமில் செயல்படுகிறது. இத்தகைய ஆட்டோமொபைல் நிறுவனம் இந்தியாவிற்கு வருகிறது என்றவுடனே பலரது கவனம் வின்ஃபாஸ்ட் மீது விழுந்தது.
மேலும், ஆரம்பத்திலேயே இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து கார்களை உற்பத்தி செய்ய போவதாக வின்ஃபாஸ்ட் அறிவித்ததும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. இந்தியாவில் எங்கு வின்ஃபாஸ்ட் தனது தொழிற்சாலையை நிறுவ போகிறதோ என்று பெரிதும் எதிர்பார்ப்பு உருவானது. இந்தியாவிலேயே வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களை அதிகம் கவர்ந்து இழுக்கக்கூடிய மாநிலமாக விளங்கும் நம் தமிழ்நாட்டிற்கு தான் வின்ஃபாஸ்ட் வாய்ப்பும் கிடைத்தது.

தனது கார்களை இந்தியாவில் காட்சிப்படுத்துவதற்கு முன்பே 2014ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தொழிற்சாலையை நிறுவும் பணிகளில் வின்ஃபாஸ்ட் ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. அதனை தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 4) தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் ரூ.16 ஆயிரம் கோடி செலவில், 114 ஏக்கர் பரப்பளவில் எழுப்பப்பட்ட வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியதுபோல், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் புகலிடமாக தமிழ்நாடு கடந்த பல வருடங்களாகவே திகழ்ந்து வருகிறது. வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியின் போது கூட முதல்வர் முக ஸ்டாலின் 'இந்தியாவின் ஆட்டோமொபைல் டெட்ராய்டு தமிழ்நாடு' என புகழ்ந்தார். அவ்வாறு தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் சிலவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

ஹூண்டாய் (Hyundai): சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புத்தூரில் ஹூண்டாய் தொழிற்சாலைக்கு என்றே தனியாக ஒரு சிறு கிராமமே செயல்பட்டு வருகிறது. சுமார் 542 ஏக்கர் பரப்பளவில் ஒரே இடத்தில் இரு தொழிற்சாலைகளாக செயல்பட்டு வரும் ஹூண்டாய் ஸ்ரீபெரும்புத்தூர் தொழிற்சாலையில் வருடத்திற்கு 6 லட்சத்து 80 ஆயிரம் கார்களை உருவாக்க முடியும்.
ஃபோர்டு (Ford): பழமையான அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவை விட்டு சென்ற செய்தியை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவை விட்டு சென்று வருடக்கணக்கில் ஆன போனதிலும் சென்னை தொழிற்சாலையை மட்டும் இன்னும் விற்கமால் ஃபோர்டு உள்ளது. 1999ஆம் ஆண்டில் இருந்து சென்னையின் மறைமலை நகர் பகுதியில் செயல்பட்டுவந்த ஃபோர்டு தொழிற்சாலை பணிகளை கடந்த 2021இல் ஃபோர்டு நிர்வாகம் நிறுத்தியது. இருப்பினும், மற்ற பணிகளுக்காக தொடர்ந்து இந்தியாவில் சென்னை தொழிற்சாலையை மட்டும் தொடர்ந்து பயன்படுத்த ஃபோர்டு திட்டமிட்டுள்ளது.

பி.எம்.டபிள்யூ (BMW): சென்னைக்கு அருகே அமைந்துள்ள மஹிந்திரா சிட்டியில் பிஎம்டபிள்யூ ஷோரூம் அமைந்துள்ளது. இரு அசெம்பிளி லைன்களை (Assembly Lines) கொண்டுள்ள இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு 17 ஆயிரத்து 500 கார்களை உற்பத்தி செய்ய முடியும். இங்கு உருவாக்கப்படும் பிஎம்டபிள்யூ கார்களில் பாதி கார்கள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
ரெனால்ட்- நிஸான் (Renault-Nissan): ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து சென்னைக்கு ஒரடகம் பகுதியில் வருடத்திற்கு அதிகப்பட்சமாக 4 லட்சத்து 80 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு பிரம்மாண்டமான தொழிற்சாலையை கொண்டுள்ளன. குறிப்பாக, ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்கள் இந்த தொழிற்சாலையை வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்வதற்காகவே அதிகம் பயன்படுத்துகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வரிசையில் இன்னும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வரும் காலங்களில் இணையலாம் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் முடிவுக்கு வந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதனை தமிழ்நாட்டில் அதுவும் தென்முனையில் உள்ள தூத்துக்குடியில் அமைக்கும் முடிவுக்கு வந்ததன் காரணம், இந்த தொழிற்சாலையில் கார் பாகங்கள் உற்பத்தி செய்யப்பட போவதில்லை; வியட்நாமில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு தூத்துக்குடி தொழிற்சாலையில் முழு காராக உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதற்கு இந்தியாவின் தென்முனையில் தொழிற்சாலை அமைப்பதுதான் இலாபக்கரமான முடிவாக இருக்கும் என்பதால், அதனை வின்ஃபாஸ்ட் பின்பற்றி உள்ளது.


Click it and Unblock the Notifications









