இந்தியன் இரயில்வேயை நல்லா யூஸ் பண்ணிக்குறாங்க!! லாரியில் கார்களை பார்க்க முடியாததற்கு இதுதான் காரணம்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். கார்களை உற்பத்தி செய்வதிலும் சரி, விற்பனை செய்வதிலும் சரி பல்வேறு சாதனைகளை இந்த நிறுவனம் நிகழ்த்தி உள்ளது. அந்த வரிசையில் தற்போது புதியதொரு சாதனையை மாருதி சுஸுகி செய்து காட்டி உள்ளது. அது என்னவென்றால், இரயில்களில் அதிக எண்ணிக்கையிலான கார்களை கொண்டு செல்வது ஆகும். கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025 மார்ச் மாதம் வரையில் எத்தனை கார்களை தொழிற்சாலையில் இருந்து இரயில்கள் வழியாக கொண்டு சென்றுள்ளோம் என்பதை புள்ளி விபரங்கள் உடன் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார்களை ஷோரூமுக்கு கொண்டு செல்வதற்கு இரயில்களை கார் கம்பெனிகள் பயன்படுத்துவது சமீப காலமாக வெகுவாக அதிகரித்துள்ளது. ஏனெனில், இரயில் போக்குவரத்து விரைவாக இருப்பது மட்டுமின்றி, ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கார்களை கொண்டு செல்ல முடிகிறது.

இதைவிட முக்கியமானது என்னவென்றால், இரயில் போக்குவரத்தில் கார்களுக்கு சிறப்பான பாதுகாப்பு கிடைக்கிறது. ஏனெனில், சரக்கு இரயில்களில் கார்கள் கொண்டு செல்லப்படுவதால், கார்கள் முழுவதுமாக மூடப்பட்டு மிகவும் பாதுகாக்கப்படுகின்றன. அதேநேரம், கார் கம்பெனிகள் தங்களது போக்குவரத்தை பயன்படுத்துவதால், இந்தியன் இரயில்வே (Indian Railway) நிர்வாகத்திற்கும் நல்ல இலாபம் கிடைக்கிறது.
இவ்வாறு இந்தியன் இரயில்வே நிர்வாகத்தின் உதவியுடன் கார்களை கடந்த பல வருடங்களாகவே மாருதி சுஸுகி நிறுவனம் ஷோரூம்களுக்கு அனுப்பி வருகிறது. ஷோரூம்களுக்கு மட்டுமின்றி, இவ்வாறு இரயில்கள் வழியாக கொண்டு செல்லப்படும் கார்கள் பெரும்பாலும் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியன் இரயில்வேயை அதிகமாக பயன்படுத்தி வருகிறது. இது இப்போதோ அல்லது நேற்றோ இல்லை... 2014ஆம் ஆண்டில் இருந்தே இரயில்களில் கார்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதை மாருதி சுஸுகி வாடிக்கையாக கொண்டுள்ளது. 2014 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2015 மார்ச் வரையில் 65 ஆயிரத்து 700 கார்களை இரயில் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மாருதி சுஸுகி கொண்டு சென்றது.
இது அந்த ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் மொத்த எண்ணிக்கையில் வெறும் 5% மட்டுமே ஆகும். அதுவே, கடந்த 2024-25 நிதியாண்டில் இந்த விகிதம் ஆனது கிட்டத்தட்ட 25% ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 10 வருடங்களில் இரயில்களில் ஏற்றி செல்லப்படும் மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது.
25% என்பதை 2030-31ஆம் நிதியாண்டிற்குள் 35% ஆக அதிகரிக்கும் முனைப்பில் இந்த நிறுவனம் உள்ளது. கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025 மார்ச் வரையில் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரத்து 157 கார்களை இரயில்களில் மாருதி சுஸுகி கொண்டு சென்றுள்ளது. இது 2023-24ஆம் நிதியாண்டில் இரயில்களில் கொண்டு செல்லப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 70 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
ஏனெனில், அந்த வருடத்தில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 750 கார்களை மட்டுமே இரயில்களில் மாருதி சுஸுகி கொண்டு சென்றிருந்தது. மாசற்ற பசுமையான சுற்றுச்சூழலை கொண்டுவர போராடும் கார் நிறுவனங்களுள் ஒன்றான மாருதி சுஸுகி, அதன் ஒருபகுதியாகவே கார்களை இரயில்களில் தேவையான இடங்களுக்கு கொண்டு செல்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமான லாரிகளில் கொண்டு செல்வதை காட்டிலும், இவ்வாறு இரயில்களில் கொண்டு செல்வதன் மூலம் வாகன புகையினால் ஏற்படும் காற்று மாசு கணிசமாக குறைக்கப்படுகிறது. இதுதான், கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் இரயில்களில் கொண்டு செல்வதற்கு முக்கியமான காரணமாகும். இந்தியாவின் 20க்கும் அதிகமான மையங்களில் இருந்து இந்தியன் இரயில்வேயின் உதவியுடன் கார்களை மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்கிறது.


Click it and Unblock the Notifications








