இந்திய கார் மார்க்கெட்டில் நடக்கும் ஆதிக்கம்! ஜப்பானில் இருந்து வந்து லட்ச கணக்கில் கஸ்டமர்களை பிடிச்சுட்டாங்க
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. ஜப்பானை சேர்ந்த சுஸுகி மற்றும் இந்தியாவின் மாருதி நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டணி நிறுவனம் தான் மாருதி சுஸுகி ஆகும்.
இது இல்லாமல், ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனத்திற்கும், டொயோட்டா (Toyota)-க்கும் இடையே நீண்ட காலமாக கூட்டணி உள்ளது. இந்த கூட்டணியின் மூலமாக இந்த நிறுவனங்களும் தங்களது கார்களின் வடிவமைப்பை ஒன்றுக்கொன்று பகிர்ந்துக் கொள்கின்றன. அதாவது, சிறப்பாக விற்பனையாகும் மாருதி சுஸுகி காரை அடிப்படையாக கொண்டு டொயோட்டா தனது கார்களை வடிவமைத்து கொண்டுள்ளது.

இவ்வாறு, மாருதி சுஸுகி காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட டொயோட்டா கார்கள் ஏராளமானவை உள்ளன. இது டொயோட்டா நிறுவனத்துக்கு நல்ல பலனை அளித்துள்ளதால், இந்த யுக்தியை இந்த இரு நிறுவனங்களும் நிறுத்திக் கொள்வதுபோல் இல்லை. சமீபத்தில் கூட, மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Fronx) காரின் டிசைனில் டொயோட்டா நிறுவனம் தனக்கான டைசர் (Taisor) காரை உருவாக்கி அறிமுகம் செய்தது.
மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் கார் ஆனது மார்க்கெட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே அதிக பேரால் வாங்கப்பட்டு வந்த மாருதி சுஸுகி பலேனோ (Baleno) காரை அடிப்படையாக கொண்டு ஃபிரான்க்ஸ் கார் உருவாக்கப்பட்டது. அதாவது, இந்த இரு மாருதி கார்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. மேலும், மாருதி சுஸுகி பலேனோ காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட டொயோட்டா காரும் உள்ளது.
பலேனோவை அடிப்படையாக கொண்டு டொயோட்டா க்ளான்ஸா (Glanza) கார் கடந்த சில வருடங்களுக்கு முன்பில் இருந்தே விற்பனையில் உள்ளது. ஆக, மாருதி சுஸுகி பலேனோ, ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா க்ளான்ஸா, டைசர் இந்த 4 கார்களும் நிறைய விஷயங்களில் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகின்றன. இதன் மூலமாக, இந்த 4 கார்களை உற்பத்தி செய்யும் செலவு மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களுக்கு இடையே கணிசமாக குறைகிறது.
உற்பத்தி செலவு குறைவது ஒருபக்கம் இருந்தாலும், இந்த யுக்தியில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றனவா என்பதுதான் இந்த விஷயத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது ஆகும். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த 4 கார்களை மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்துள்ளன.
க்ளான்ஸா மற்றும் டைசர் கார்கள் இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக விளங்குகின்றன. அதேநேரம், அர்பன் க்ரூஸர் (Urban Cruiser) போன்ற மற்ற டொயோட்டா கார்களின் விற்பனையும் சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆனது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Brezza)-இன் ரீ-பேட்ஜ்டு வெர்சன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கார்கள் மார்க்கெட்டில் டொயோட்டா நிறுவனம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு மாருதி சுஸுகியின் பங்களிப்பு முக்கியமானது ஆகும். 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025 மார்ச் மாதம் வரையில் டொயோட்டா நிறுவனம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 508 கார்களை விற்பனை செய்துள்ளது.
அதுவே, 2023 ஏப்ரலில் இருந்து 2024 மார்ச் வரையில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 129 கார்களை மட்டுமே இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், முந்தைய ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டில் டொயோட்டா கார்கள் விற்பனை 26% அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








