நல்ல கார் ஆச்சே! பிரபலமான மாருதி தயாரிப்பின் உற்பத்தி திடீர் நிறுத்தம்! அப்பனா இனிமேல் விற்பனைக்கு கிடைக்காதா!
இந்தியாவில் வீசி கொண்டுள்ள எஸ்யூவி (SUV) புயலில் சிக்கி செடான் கார்கள் (Sedan Cars) சின்னாபின்னமாகி கொண்டுள்ளன. வாடிக்கையாளர்கள் பலரும் எஸ்யூவி ரக கார்களை அதிகம் விரும்ப தொடங்கியுள்ளதால், செடான் ரகத்தை சேர்ந்த கார்களின் விற்பனை 'டல்' அடிக்கிறது. இதற்கு மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) காரும் விதிவிலக்கு அல்ல. இது கடந்த 2014ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் ஆகும். ஆரம்பத்தில் மாருதி சுஸுகி சியாஸ் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கவே செய்தது.
தாராளமான இடவசதி, நல்ல மைலேஜ் வழங்க கூடிய இன்ஜின் மற்றும் சரியான விலை நிர்ணயம் போன்றவை எல்லாம் இதற்கு காரணமாக இருந்தன. ஆனால் நாளடைவில் மாருதி சுஸுகி சியாஸ் காரின் விற்பனை குறைய தொடங்கியது. கடந்த 2023-24ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 2024-25ம் நிதியாண்டில், மாருதி சுஸுகி சியாஸ் காரின் விற்பனை 34 சதவீதம் குறைந்து விட்டது.

எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு அதிகரிக்க தொடங்கியது இதற்கு ஒரு காரணம் என்றால், செடான் செக்மெண்ட்டிற்குள்ளேயே மாருதி சுஸுகி சியாஸால் மற்ற கார்களின் போட்டியை சமாளிக்க முடியவில்லை என்பது இதற்கு மற்றொரு காரணமாக அமைந்து விட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மாருதி சுஸுகி சியாஸ் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே விற்பனையாகி வருகிறது.
பொதுவாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் ஒவ்வொரு மாதமும் அனாயசமாக விற்பனையில் 5 இலக்க எண்களை தாண்டும். ஆனால் மாருதி சுஸுகி சியாஸோ மிக நீண்ட காலமாக 3 இலக்க எண்களில் தடுமாறி கொண்டுள்ளது. இதற்கு நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் விதிவிலக்கு அல்ல.

மாருதி சுஸுகி சியாஸ் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 321 சியாஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம், 867 ஆக இருந்தது. இந்த வகையில் பார்த்தால் 546 மாருதி சுஸுகி சியாஸ் கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. முந்தைய வருடத்தின் இதே மாதத்துடன் (ஏப்ரல்) ஒப்பிடும்போதுதான் சரிவு என்றால், முந்தைய மாதத்துடன் (2025 மார்ச்) ஒப்பிட்டாலும், மாருதி சுஸுகி சியாஸ் விற்பனையில் சரிவையே கண்டுள்ளது.
நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 676 சியாஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, அதன்பின் வந்த ஏப்ரல் மாதம் வெறும் 321 ஆக குறைந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், 355 மாருதி சுஸுகி சியாஸ் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
விற்பனை தொடர்ந்து சரிவடைந்து கொண்டே வருவதால், மாருதி சுஸுகி நிறுவனம் சியாஸ் காரின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாருதி சுஸுகி சியாஸ் கார் இன்னமும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அனேகமாக 'ஸ்டாக்' இருக்கும் வரை இந்திய சந்தையில் மாருதி சுஸுகி சியாஸ் கார்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பிறகு மாருதி சுஸுகி நிறுவனம் சியாஸ் காரின் விற்பனையை அதிகாரப்பூர்வமாக நிறுத்தி விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி சியாஸ் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், ஹோண்டா சிட்டி (Honda City), ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna), ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia) ஆகிய கார்களுக்கு எல்லாம் ஒரு போட்டி குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








