ஜிஎஸ்டி குறைஞ்சதால சந்தை கடை போல் மாறிய ஷோரூம்கள்! நேத்து ஒரே நாளில் இத்தன கார்கள் வித்து தீந்துருச்சா!
இந்தியாவில் நவராத்திரி (Navratri) பண்டிகையின்போது, கார் விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும். இதன்படி இந்த வருடம் நவராத்திரி பண்டிகை மிகவும் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நேற்றுதான் (செப்டம்பர் 22) நவராத்திரியின் முதல் நாள். கூடவே நேற்று முதல்தான், ஜிஎஸ்டி (GST) வரி குறைப்பும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த 2 காரணங்களால், நேற்று ஒரே நாளில் இந்தியாவில் ஏராளமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. அத்துடன் நேற்று ஒரே நாளில் மாருதி சுஸுகி கார்களை வாங்குவது தொடர்பாக 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டீலர்ஷிப்களில் விசாரித்துள்ளனர்.

மறுபக்கம் இந்தியாவின் மற்றொரு முன்னணி கார் நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), நேற்று ஒரே நாளில் 11 ஆயிரம் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 5 வருடங்களில், ஒரே நாளில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
நவராத்திரி தொடக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்பு ஆகிய 2 காரணங்களால்தான், கார் விற்பனை இந்த அளவிற்கு அதிகமாக நடைபெற்றுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக, இந்திய சந்தையில் கார்களின் விலை (Price) வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக புதிய கார்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து என்டிடிவி தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாருதி சுஸுகி, ஹூண்டாய் வரிசையில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் நேற்று கார் விற்பனை சாதனைகளை படைத்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நேற்று ஒரே நாளில், 10 ஆயிரம் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளதாகவும், இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வரலாற்று சாதனை எனவும், தி ஹிந்து பிஸ்னஸ் லைன் தனது செய்தியில் கூறியுள்ளது.
அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்குவது தொடர்பாக நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், டீலர்ஷிப்களில் தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டுள்ளனர். மேற்கண்ட நிறுவனங்கள் தவிர, மற்ற முன்னணி கார் நிறுவனங்களும், நேற்று விற்பனையில் சாதனைகளை படைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இது குறித்து ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் முழு நேர இயக்குனரும், சிஓஓ-வுமான (COO - Chief Operating Officer), தருண் கார்க் (Tarun Garg) கூறுகையில், ''ஜிஎஸ்டி வரி குறைப்பின் முழு பலன்களையும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக வழங்கிய முதல் நிறுவனங்களில் ஒன்றாக ஹூண்டாய் திகழ்கிறது. வாடிக்கையாளர்களின் கொண்டாட்டங்களை இன்னும் மகிழ்ச்சியாக மாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்'' என்றார்.
கார் வாங்க டீலர்ஷிப்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் (FADA - Federation Of Automobile Dealers Associations) தற்போது தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பதை, கார் உற்பத்தி நிறுவனங்களும், கார் டீலர்ஷிப்களும் வெகுவாக வரவேற்றுள்ளன.
இது வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் என அவை கருத்து தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த முயற்சியை மேற்கொண்டதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் (Prime Minister Narendra Modi) அவை நன்றி தெரிவித்துள்ளன. ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் பண்டிகை காலம் ஆகிய 2 காரணங்களால், இனி கார் விற்பனை வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் சொந்தமாக ஒரு புதிய காரை வாங்க இது உண்மையிலேயே நல்ல சந்தர்ப்பம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. ஜிஎஸ்டி வரி குறைப்பால், தற்போது கார்களின் விலை குறைந்துள்ளது. அத்துடன் பண்டிகை காலத்தை முன்னிட்டு, தள்ளுபடி மற்றும் சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.


Click it and Unblock the Notifications








