250 கோடி ரூபாய் முதலீடு பண்ண தயார்... 2030க்குள் மொத்த இந்தியாவும் மாருதி சுஸுகியால் மாற போகுது!!
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) தனது முதல் எலெக்ட்ரிக் காரை (Electric Car) அறிமுகப்படுத்தும் திட்டத்துடன், அடுத்த ஐந்தாண்டிற்குள் நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான சார்ஜிங் மையங்களை நிறுவ தனக்கு தானே இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இ-விட்டாரா (e-Vitara) காரின் வெளியீட்டின் போது இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இன்னும் 5 ஆண்டிற்குள் நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நெட்வொர்க்கை பெரிய அளவில் பெரியதாக்குவது எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க உதவும் என மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO ஹிரோஷி டேகுச்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,100 நகரங்களில் 2,000 பிரத்யேக சார்ஜிங் நிலையங்களை மாருதி சுஸுகி அமைத்துள்ளது.

முதல் மின்சார வாகனமான 'இ-விட்டாரா'வை அறிமுகப்படுத்த தயாராகி வரும் மாருதி, மிகப்பெரிய அதிவேக சார்ஜிங் நெட்வொர்க்கை கொண்ட நிறுவனமாக மாற முயல்கிறது. இதற்காக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஃபாஸ்ட்-சார்ஜிங்கை வழங்கும் 13 நிறுவனங்களுடன் மாருதி சுஸுகி கூட்டு சேர்ந்துள்ளது. இதுகுறித்து ஹிரோஷி டேகுச்சி பேசுகையில், "நாங்கள் இருமுனை உத்தியைப் பின்பற்றுகிறோம்.
அதாவது ஒன்று, சிறந்த இயங்கும் திறனுடைய வாகனங்களை வழங்குவது; இரண்டாவது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வசதி மற்றும் மன அமைதியை உறுதி செய்யும் வலுவான எலெக்ட்ரிக் வாகனச் சூழலை உருவாக்குவது ஆகும். எங்கள் வாடிக்கையாளர்கள் 'இ ஃபார் மீ' (e for me) செயலி மூலம் அனைத்து இவி சார்ஜிங் நிலையங்களையும் அணுகலாம். இந்தச் செயலி பல தனித்துவமான பலன்களை வழங்குகிறது.

இது வாகனத்தை டிராக் செய்வது முதல் பணம் செலுத்துதல் வரை தடையற்ற இவி உரிமையாளர் அனுபவத்தை அவர்களுக்கு வழங்கும்" என்று டேகுச்சி குறிப்பிட்டுள்ளார். மாருதி சுஸுகியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் மூத்த நிர்வாக அதிகாரியான பார்த்தோ பானர்ஜி பேசுகையில், "மாருதி சுஸுகி நிறுவனம் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் கவனம் செலுத்தும் என்றும், முக்கிய நகரங்களில் ஒவ்வொரு 5- 10 கிமீ தூரத்திற்கு ஒரு சார்ஜரை நிறுவ திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் முக்கிய தடைக்கல்லாக சார்ஜிங் உள்கட்டமைப்பு இல்லாதது பார்க்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் சுமார் 30,000 பொது சார்ஜிங் நிலையங்கள் உள்ளன என்றாலும், மேம்பட்ட வெளிநாட்டு இவி சந்தைகளை விட இந்தியா இன்னும் பின்தங்கியே உள்ளது.

குஜராத் ஆலையில் இ-விட்டாரா கார் உற்பத்தியை கடந்த ஆகஸ்ட் மாதம் மாருதி சுஸுகி தொடங்கியதுடன், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியையும் தொடங்கிவிட்டது. தாய் நிறுவனமான சுஸுகி மோட்டோகார்ப், இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் ஏற்ற ஒரு மையமாக கருதுகிறது.
குறிப்பாக, உற்பத்தி செலவு குறைவினால் இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்வதற்கான கூடாரமாகவே மாருதி சுஸுகி உள்பட பெரும்பாலான நிறுவனங்கள் பார்க்கின்றன. இதனாலேயே, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ-விட்டாரா, உலகளாவிய சந்தைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த எலெக்ட்ரிக் கார், விரைவில் ஜப்பானிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்திய அறிமுகம் இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 2026 ஜனவரி- மார்ச்க்குள் இருக்கலாம். டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தைக்குள் சற்று தாமதமாகவே நுழைந்துள்ளது.
இந்த தாமதம், டாடா மோட்டார்ஸை கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளராக முன் நிறுத்தியுள்ளது. எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டிற்குள் சற்று தாமதமாக நுழைந்தாலும், பெரும்பாலான மற்ற கார் உற்பத்தியாளர்களைப் போலன்றி, மாருதி சுஸுகி கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான மற்ற உத்திகளைப் பின்பற்றுகிறது.
இந்த அணுகுமுறையில், பேட்டரி மின்சாரம், ஹைப்ரிட் (Hybrid), சிஎன்ஜி (CNG) மற்றும் ஃப்ளெக்ஸ் (Flex)-எரிபொருள் போன்ற பல்வேறு வகையான எரிபொருட்களால் இயங்கும் வாகனங்கள் அடங்கும். 2031ஆம் நிதியாண்டிற்குள், மாருதி சுஸுகி கார்களில் அதிகமாக, அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் சிஎன்ஜி கார்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









