இத்தனை மேட்-இன்-இந்தியா கார்களை கொண்டு போக கப்பலில் இடம் இருக்குமானு தெரியல! பிரதமர் சொன்னப்படியே நடக்குது!
மாருதி சுஸுகி (Maruti Suziki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம் என்பதை சொல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்குவது மட்டுமின்றி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களை அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகவும் மாருதி சுஸுகி விளங்குகிறது.
கப்பல்களில் ஆயிரக்கணக்கிலான மாருதி சுஸுகி கார்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை பலமுறை பார்த்துள்ளோம். அந்த வகையில் தற்போது 2,900க்கும் அதிகமான இ-விட்டாரா (e-VITARA) என்கிற எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) ஐரோப்பாவுக்கு மாருதி சுஸுகி அனுப்பி வைத்துள்ளது. பிரம்மாண்டமான கப்பல் ஒன்றிற்கு அருகே இ-விட்டாரா எலக்ட்ரிக் கார்கள் வரிசைக்கட்டி நிற்கும் படங்களை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இ-விட்டாரா ஆனது மாருதி சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் கார் ஆகும். நீண்ட வருட ஆலோசனைகளுக்கு பின் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்த காரணத்தினால்தான், இ-விட்டாரா காரின் உற்பத்தி பணிகள் துவங்கப்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குஜராத்தில் உள்ள மாருதி சுஸுகி தொழிற்சாலைக்கு நேரில் சென்று, உற்பத்தி செய்யப்பட்ட முதல் இ-விட்டாரா காரை கொடியடைத்து விற்பனைக்கு துவங்கி வைத்தார்.
அப்போது பிரதமர் மோடி, மேட்-இன்-இந்தியா எலக்ட்ரிக் கார்கள் வரும் காலங்களில் இந்தியாவில் இருந்துதான் அதிகளவில் செல்லும் என பூரிப்புடன் தெரிவித்து இருந்தார். அது இப்போதே துவங்கிவிட்டது என்பதுபோல் மாருதி சுஸுகி நிறுவனம் தனது இ-விட்டாரா எலக்ட்ரிக் கார்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கி உள்ளது.

குஜராத்தின் பிபாவாவ் துறைமுகத்தில் இருந்து இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் என மொத்தம் 12 ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மேட்-இன்-இந்தியா மாருதி சுஸுகி இ-விட்டாரா எலக்ட்ரிக் கார்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
மாருதி சுஸுகி நிறுவனம் இதற்கு முன்னர் இலட்சக்கணக்கிலான கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பினும், எலக்ட்ரிக் கார்களை ஏற்றுமதி செய்வது இதுவே முதல்முறை ஆகும். மேற்கூறப்பட்ட ஐரோப்பிய நாடுகள் உடன் நிறுத்திக் கொள்ளாமல், உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மேட்-இன்-இந்தியா இ-விட்டாரா எலக்ட்ரிக் கார்களை ஏற்றுமதி செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

ஆனால் இதில் ஆச்சிரியம் என்னவென்றால், மாருதி சுஸுகி இ-விட்டாரா எலக்ட்ரிக் கார்கள் இன்னும் இந்தியாவிலேயே சாலைக்கு வரவில்லை. அதாவது, இன்னும் இந்தியர்களின் கைகளுக்கே முதலில் இ-விட்டாரா கார்கள் வரவில்லை. மாருதி சுஸுகியின் இந்த முதல் எலக்ட்ரிக் கார் ஆனது இதுவரையில் இரண்டே இரண்டு முறை தான் பொது வெளியில் காட்சிப்படுத்தப்பட்டது.
ஒன்று, கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற கண்காட்சியில், மற்றொன்று, இந்த 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) கண்காட்சியில் ஆகும். மாருதி சுஸுகியின் முற்றிலும் புதிய ஹார்டெக்ட்-இ (HEARTECT-e) பிளாட்ஃபாரத்தில் புதிய இ-விட்டாரா வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் 'மேட்-இன்-இந்தியா' முயற்சியின் பிராண்ட் தூதராக மாருதி சுஸுகி இருக்கும் என மாருதி சுஸுகி நிறுவனத்தை பிரதமர் மோடி புகழ்ந்து தள்ளினார். அதனை நிஜமாக்கும் வேலைகளில் ஏற்கனவே மாருதி சுஸுகி நிறுவனம் இறங்கிவிட்டது என்பதை தற்போது ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள 2,900க்கும் அதிகமான இ-விட்டாரா எலக்ட்ரிக் கார்கள் வெளிக்காட்டுகின்றன. இந்த 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இ-விட்டாரா எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை (Ex-showroom Prices) ரூ.17 லட்சத்தில் இருந்து எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









