டாடா கார்கள் மட்டும்தான் 5-ஸ்டார் ரேட்டிங் வாங்கும்னு யாருங்க சொன்னா? மாருதி உருவாக்கிய காருக்கு 5-ஸ்டார்!!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து புதியதாக 'விக்டோரிஸ்' (Victoris) என்கிற பெயரில் எஸ்யூவி (SUV) ரக கார் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. முற்றிலும் புதிய கார் ஒன்றை செப்டம்பர் 3ஆம் தேதியில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே மாருதி சுஸுகி தெரிவித்து இருந்த நிலையில், அதன்படி தற்போது மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த காரை பற்றிய விபரங்களை ஏற்கனவே ஒரு தொகுப்பாக நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். இந்த தொகுப்பில் பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் சோதனையில் விக்டோரிஸ் கார் பெற்றுள்ள மதிப்பீடுகளை பற்றி பார்க்க போகிறோம். அதாவது, அறிமுகத்திற்கு முன்னதாகவே புதிய விக்டோரிஸ் கார் மோதல் சோதனைகளில் உட்படுத்தப்பட்டு அதன் சோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.

பாரத் என்சிஏபி ஆனது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் தரத்தை அறிவதற்காகவே 2023ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட அமைப்பு ஆகும். பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பல டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) கார்கள் 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளன.
அந்த வரிசையில் தற்போது, விக்டோரிஸ் காரும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. மற்ற அனைத்து கார்களையும் போல், விக்டோரிஸ் காரிலும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது, சிறியவர்களுக்கு பாதுகாப்பு எந்த அளவிற்கு உள்ளது, சாலையில் செல்லும் பாதசாரிகளுக்கு விபத்தின்போது கார் எந்த அளவிற்கு பாதுகாப்பை அளிக்கிறது என்பன மோதல் சோதனைகளில் ஆராயப்பட்டன.

பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 31.66 மதிப்பெண்களை மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் பெற்றுள்ளது. அதேபோல், சிறியவர்கள் பாதுகாப்பில் இந்த காருக்கு 49க்கு 43 மதிப்பெண்கள் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் வழங்கப்பட்டு உள்ளன. இந்த சோதனைகளின் ஒருபகுதியாக, காரின் முன்பக்கத்தை வளையக்கூடிய இரும்பின் மீது மோதவிட்டு சோதனை செய்து பார்த்ததில் 16க்கு 15.66 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அதேபோல், காரின் பக்காவாட்டில் வளையாத இரும்புடன் மோதவிட்டு பார்த்ததில் கார் மிகவும் சிறப்பான பாதுகாப்பை வழங்கியதை அடுத்து, 16க்கு முழு 16 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்த அளவிற்கு கார் பாதுகாப்பானதாக இருப்பதற்கு விக்டோரிஸ் காரை மாருதி சுஸுகி நிறுவனம் வடிவமைத்த விதம் தான் காரணம் என பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் அமைப்பு புகழாரம் சூட்டியுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களாக விக்டோரிஸ் காரில் 6 ஏர்பேக்குகள், லெவல்-2 அடாஸ் (ADAS), அனைத்து 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360-டிகிரி கேமரா உள்பட ஏகப்பட்ட தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இதில் குறிப்பாக, அடாஸ் வசதிகள் மூலமாக ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், சாலையில் ஒரே பாதையை தொடர்வதற்கான வசதி உள்ளிட்டவற்றை பெறலாம்.
இவை மட்டுமின்றி, காரின் ஹை பீமை பயன்படுத்துவதற்கான உதவி, ரிவர்ஸில் வரும்போது குறுக்கே ஏதேனும் வாகனம் கடக்க வந்தால் அதுகுறித்த எச்சரிக்கை, காருக்குள் இருந்து காரை சுற்றி டிரைவரால் பார்க்க முடியாத பகுதிகளை கண்காணிக்கும் வசதி உள்ளிட்டவற்றையும் அடாஸ் மூலமாக புதிய மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரில் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியில் இருந்து புதிய கார் அறிமுகமாகிறது என்றாலே மக்கள் மத்தியில் தனி கவனம் ஏற்படும். அத்துடன், விக்டோரிஸ் கார் 5-ஸ்டார் ரேட்டிங் உடன் பாதுகாப்பான காராக விற்பனைக்கு வருவதால், எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது. ஆதலால், எதிர்பார்க்கப்படும் ரூ.11 - 12 லட்சத்தில் விற்பனைக்கு வந்தால், புதிய மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் மார்க்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications









