யார நம்புறதுனே தெரியல தாஸ் அண்ணா... கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் காரில் கூட பாதுகாப்பு இருக்க மாட்டிங்குது!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் சொகுசு கார்களை அதிகம் விற்பனை செய்யும் நிறுவனம். கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் உள்ளது. இருப்பினும், இத்தகைய நிறுவனத்துக்கு கூட சில நேரங்களில் கஷ்ட காலம் வர தான் செய்கிறது. உலகளவில் இந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் காரில் பிரச்சனை இருப்பதாக அவற்றை சரிச்செய்து கொடுக்க ஆறு முறை மெர்சிடிஸ் நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில கார்களை வாங்கிய கஸ்டமர்களை திரும்ப அழைத்துள்ளது. இதில் ஆறாவது முறை அழைப்பு தற்போதுதான் அழைக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஎஸ் (EQS), ஜிஎல்சி (GLC), எஸ்-கிளாஸ் (S-Class) மற்றும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்.எல் 55 (AMG SL 55) கார்களில் பிரச்சனை ஒன்று கண்டறியப்பட்டதை அடுத்து மெர்சிடிஸ் நிறுவனத்தின் உத்தரவின் பெயரில் அவை மீண்டும் ஷோரூமுக்கு திரும்ப அழைக்கப்படுகின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட மெர்சிடிஸ் கார்கள் அனைத்துமே உலகளவில் பிரபலமானவை. இந்தியாவிலும் இந்த மெர்சிடிஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன மற்றும் தற்போது உலகளவில் திரும்ப அழைக்கப்படும் மெர்சிடிஸ் கார்களுள் சில கார்கள் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த மெர்சிடிஸ் கார்கள் இதுவரையில் உருவாக்கப்பட்டவை அனைத்தும் திரும்ப அழைக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை மட்டுமே திரும்ப அழைக்கப்படுகின்றன.
அந்த வகையில் 2023 ஜூன் 22ஆம் தேதியில் இருந்து 2024 மார்ச் 20ஆம் தேதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் மற்றும் மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் கார்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்படுகின்றன. இந்த காலக்கட்டத்தில் மொத்தம் ஒன்பது எஸ்-கிளாஸ் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இவை ஒன்பதும் பெட்ரோல் என்ஜினை கொண்ட கார்கள் ஆகும்.
அதேபோல், மெர்சிடிஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரான இக்யூஎஸ் கார்களும் திரும்ப அழைக்கப்படுபதாக கூறினோம் அல்லவா... 16 மெர்சிடிஸ்-பென்ஸ் இ.க்யூ.எஸ் எலக்ட்ரிக் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன. இந்த எலக்ட்ரிக் பென்ஸ் கார் ஆனது செடான் மற்றும் எஸ்யூவி என இரு விதமான உடலமைப்புகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அதில் செடான் ரக இக்யூஎஸ் கார்கள் மட்டுமே திரும்ப அழைக்கப்படுகின்றன.
இவை, 2023 ஜூலை 19 முதல் 2024 ஏப்ரல் 8 வரையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இவை இல்லாமல், மூன்று ஜிஎல்சி கார்களும் திரும்ப அழைக்கப்படுகின்றன. இவை, 2023 செப்டம்பர் 9 முதல் அதே ஆண்டில் டிசம்பர் 4 வரையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இந்த 3 ஜிஎல்சி கார்களில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின்களுடன் கார்கள் உள்ளன. இவை தவிர்த்து, இரண்டு மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ்.எல் கார்களும் திரும்ப அழைக்கப்படுகின்றன.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த மற்றும் அதற்கு இணையாக பவர்ஃபுல்லானவை ஏஎம்ஜி எஸ்.எல் கார்கள் ஆகும். இந்த இரு ஏஎம்ஜி எஸ்.எல் கார்கள் 2023 ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 28 வரையில் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இவ்வாறு, மொத்தம் 30 கார்கள் இந்த முறை மெர்சிடிஸ் நிறுவனத்தால் இந்தியாவில் திரும்ப அழைக்கப்படுகின்றன. இந்தியாவிலாவது பரவாயில்லை, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 93 ஆயிரம் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.
கார்கள் எதற்காக திரும்ப அழைக்கப்படுகின்றன? அப்படி என்ன பிரச்சனை கண்டுப்பிடிக்கப்பட்டது? இந்த கார்களில் ஃபியூஸ் பாக்ஸ் (Fuse Box) பிரச்சனை இருப்பது மெர்சிடிஸ் நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இது சரியாக வேலை செய்யாவிட்டால், அதனுடன் இணைக்கப்பட்ட அமைப்புகள் செயலிழக்கக் கூடும். இது எச்சரிக்கை இல்லாமல் உந்துவிசையை கார் இழக்க வழிவகுக்கும். இது விபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பது மட்டுமின்றி, சில நேரங்களில் தீ விபத்துகளுக்கும் காரணமாகலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் பிரச்சனையை இப்போது மெர்சிடிஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது. நல்லவேளையாக, இப்போதுதாவது கண்டறிந்ததே என ஆச்சிரியம் தான் பட வேண்டும். அல்லது, ஏற்கனவே இந்த பிரச்சனையினால் யாரேனும் விபத்தில் சிக்கி உள்ளனரா என்பது தெரியவில்லை. இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள மெர்சிடிஸ் ஷோரூமை அணுகவும்.


Click it and Unblock the Notifications








