கார் பார்க்க சூப்பரா இருந்த போதும் வாங்க ஆள் இல்ல! பலருக்கு இப்படியொரு கார் இருந்ததே தெரியாது!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து கார் ஒன்றின் விற்பனை எந்தவொரு அறிவிப்பும் இன்றி சைலண்ட்டாக நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக, கார்கள் சரியாக விற்பனையாகவில்லை என்றால், அதன் விற்பனை நிறுத்தப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், இந்த நிலைமை இந்தியாவின் நம்பர் ஒன் லக்சரி கார் நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸுக்கும் ஏற்பட்டுள்ளது எனும் நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் சிறப்பம்சமே அவற்றின் பிரம்மாண்டமான தோற்றம் ஆகும். காஸ்ட்லீயான லுக்கில், அளவில் பெரியதாக இருப்பதினாலேயே பென்ஸ் காரை பார்க்கும் எவரொருவரும் அதன் அழகில் மயங்கி விடுகின்றனர். அவ்வாறான ஒரு அளவில் பெரியதான பென்ஸ் கார் தான், ஜிஎல்பி (GLB) ஆகும். இந்தியாவில் பல்வேறு விதமான விலைகளில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் கார்களை விற்பனை செய்கிறது.

அவ்வாறு, குறைந்த விலையில் ஏழு இருக்கைகள் உடன் கிடைக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் தான், ஜிஎல்பி ஆகும். இந்த காரின் விற்பனையை தான் தற்போது மெர்சிடிஸ் நிறுவனம் எந்தவொரு சத்தமும் இன்றி நிறுத்திக் கொண்டுள்ளது. இந்தியாவில் விற்பனை பெரியதாக இல்லாத காரணத்தினால் ஜிஎல்பி காரின் விற்பனையை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் நிறுத்திக் கொண்டுள்ளது.
இந்த கார் அதிகமாக விற்பனையாகாததற்கு முக்கிய காரணம், அதன் விலை ஆகும். விலை குறைவான மெர்சிடிஸ் 7-சீட்டர் காராக இருந்தாலும், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை இந்திய மக்களுக்கு அதிகமானதாக தோன்றியது. தற்போது விற்பனை நிறுத்தப்படுவதற்கு முன்பு வரையில், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்பி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.63.8 லட்சமாக இருந்தது.

மெர்சிடிஸ் நிறுவனத்தால் இதைவிட குறைவான விலையில் ஜிஎல்பி காரை கொண்டுவந்திருக்க முடியும். முழுவதுமாக மெக்ஸிகோவில் உள்ள மெர்சிடிஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு மெர்சிடிஸ் ஜிஎல்பி கார் இங்கு விற்பனை செய்யப்பட்டது. இதற்கு பதிலாக, வெளிநாட்டில் இருந்து பாகங்கள் கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் முழு காராக அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு இருந்தால், காரின் விலையை இன்னும் குறைவானதாக நிர்ணயித்து இருக்கலாம்.
இவ்வாறு பாகங்களாக கொண்டுவரப்பட்டு இங்கு முழு வாகனமாக உருவாக்கும் முறையை சிகேடி (CKD) என அழைக்கின்றனர். இவ்வாறான சிகேடி முறையில் பல பென்ஸ் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றாக இல்லாமல், ஜிஎல்பி காரை ஏன் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் முழுவதுமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து விற்பனை செய்தது என்பது தெரியவில்லை.
இந்தியாவில் கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎல்பி கார் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டது. 200 புரோகிரெஸிவ் (200 Progressive), 220டி 4மேட்டிக் (220d 4MATIC), 220டி ஏஎம்ஜி லைன் 4மேட்டிக் (220d AMG Line 4MATIC) என்பன அந்த 3 வேரியண்ட்கள் ஆகும்.
வெறும் 2 வருடங்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையில் இருந்த ஜிஎல்பி காரின் அடுத்த தலைமுறை வெர்சனை விரைவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கிறோம். கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய தலைமுறை ஜிஎல்பி கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதுவரையில் விற்பனையில் இருந்தது இதற்கு முந்தைய தலைமுறை ஆகும்.
2023 மார்ச்சில் இருந்து ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் விற்பனையில் இருக்கும் அந்த புதிய ஜிஎல்பி காரை இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய போகிறதா? அல்லது முற்றிலும் புதிய ஜிஎல்பி கார் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட உள்ளதா என்பது தெரியவில்லை. புதிய ஜிஎல்பி காரை சோதனை செய்யும் பணிகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிக பழமையான ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றான மெர்சிடிஸ்-பென்ஸ், இந்தியாவில் ஜிஎல்பி கார் விஷயத்தில் அவவளவு எளிதாக பின்வாங்கி விடாது. நிச்சயமாக புதிய ஜிஎல்பி காரை அறிமுகம் செய்யும். ஆனால், அதன் அறிமுகம் எப்போது என்பதுதான் கேள்வியே. காரை சாலையில் ஓட்டிப்பார்த்து சோதனை செய்யும் பணிகள் ஆரம்பமாகி உள்ளதால், விரைவில் புதிய ஜிஎல்பி காரின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








