பென்ஸ் கார்களை கூட நம்ப முடியலயே... இந்த 3 கார்களை வைத்து இருப்பவங்க உஷாரா இருங்க!!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்தியாவில் தனது மூன்று கார்களின் வாடிக்கையாளர்களுள் குறிப்பிட்ட சிலரை, பிரச்சனை ஒன்றை சரி செய்வதற்காக தங்களது கார்களை கொண்டுவருமாறு அழைத்துள்ளது. ஆனால் இதற்கு பெரியதாக பயப்பட வேண்டாம். ஏனெனில், 2022 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தயாரிக்கப்பட்ட கார்களை வாங்கிய வெறும் நான்கு கஸ்டமர்கள் மட்டுமே இந்த நடவடிக்கையில் உட்படுகின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
மெர்சிடிஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட இந்தத் திரும்பப் பெறுதல் பட்டியலில், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி ஏஎம்ஜி (GLC AMG), சி-கிளாஸ் ஏஎம்ஜி (C-Class AMG) மற்றும் ஸ்டாண்டர்ட் ஜிஎல்சி ஆகிய 3 கார்கள் அடங்குகின்றன. இதில், சி-கிளாஸ் ஆனது மெர்சிடிஸ் நிறுவனத்தின் தாழ்வான உடலமைப்பு கொண்ட செடான் (Sedan) ரக கார் ஆகும்.

ஜிஎல்சி ஆனது உயரம் அதிகம் கொண்ட, கம்பீரமான எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். ஏஎம்ஜி-அல்லத ஜிஎல்சி மற்றும் ஜிஎல்சி ஏஎம்ஜி என இரண்டும் இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் உட்பட்டுள்ளன. இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த மூன்று கார்கள் அனைத்தும் திரும்ப அழைக்கப்படவில்லை. மேற்கூறப்பட்ட 2022-25 காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் மட்டுமே திரும்ப அழைக்கப்படுகின்றன.
இதில் ஆச்சிரியமான விஷயம் என்னவென்றால், மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் இந்த 3 கார்கள் வெறும் 4 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதனால்தான், இந்த நடவடிக்கையில் 4 வாடிக்கையாளர்கள் மட்டுமே உட்படுவதாக தெரிவித்தோம். 4 கார்களையும் ஒரே நபர் வாங்கியிருந்தால், அவர் ஒருவர் மட்டுமே தங்களது கார்களை அருகில் உள்ள மெர்சிடிஸ் சர்வீஸ் மையத்திற்கு கொண்டு சென்று இலவசமாக பழுதை சரிச்செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

மெர்சிடிஸ் நிறுவனத்தின் தகவல்படி, ஸ்டாண்டர்ட் ஜிஎல்சி மற்றும் சி-கிளாஸ் ஏஎம்ஜி ஆகியவற்றில் தலா ஒரு யூனிட்டும், ஜிஎல்சி ஏஎம்ஜி மாடலில் இரண்டு யூனிட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன. பாதிக்கப்பட்ட ஜிஎல்சி கார் செப்டம்பர் 19, 2022 அன்று தயாரிக்கப்பட்டது. சி-கிளாஸ் ஏஎம்ஜி கார் செப்டம்பர் 20, 2023 அன்று உருவாக்கப்பட்டது.
இரண்டு ஜிஎல்சி ஏஎம்ஜி கார்கள் ஜூலை 17, 2024 முதல் ஜனவரி 31, 2025 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டவை ஆகும். பாதிக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. காரணம், இது காரின் முக்கிய பாதுகாப்பு அம்சத்துடன் தொடர்புடையது.

காரின் ஸ்டீயரிங் சக்கர இணைப்பு போல்டிங்கில் உள்ள குறைபாடே இந்த நடவடிக்கைக்குக் காரணமாகும். இந்த போல்டிங் தேய்மானம் அடைவதை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இத்தனை நாட்கள் கழித்து இப்போது கண்டுப்பிடித்து உள்ளது. இந்த பிரச்சனையால், ஸ்டீயரிங் வீலுக்கும் ஸ்டீயரிங் ரேக்குக்கும் இடையிலான இயந்திர இணைப்பு காலப்போக்கில் தளர்ந்து போக வாய்ப்புள்ளது.
இந்தக் குறைபாடு கவனிக்கப்படாமல் போனால், ஸ்டீயரிங் கட்டுப்பாட்டை கார் இழக்கும் நிலை ஏற்படலாம். இது ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும். மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட கார்களின் உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளும் என்று தெரிவித்துள்ளது. தேவையான ஆய்வுகள் மற்றும் பழுதுபார்ப்புகள், தேவைப்பட்டால் உதிரிபாகங்கள் மாற்றுவது உட்பட, அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்படும்.

மேற்கூறப்பட்ட மெர்சிடிஸ் கார்களின் நொய்டா ஆன்-ரோடு விலைகள் (Noida On-road Prices) ரூ.86 லட்சத்தில் இருந்து ரூ.1.23 கோடி வரையில் உள்ளன. ஜிஎல்சி எஸ்யூவியின் 300 4MATIC வேரியண்ட்டின் விலை ரூ.86.16 லட்சம் முதல் தொடங்குகிறது. ஜிஎல்சி ஏஎம்ஜி 4MATIC வேரியண்ட்டின் விலை ரூ.1.23 கோடி மற்றும் சி-கிளாஸ் சி43 ஏஎம்ஜி காரின் விலை ரூ.1.10 கோடி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தத் திரும்பப் பெறுதல், வாடிக்கையாளர் பாதுகாப்புக்கான மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும், சிறிய குறைபாடுகள் கூட பெரிய சம்பவங்களுக்கு வழிவகுக்கும் முன் அவற்றைச் சரிசெய்வதில் அதன் முனைப்பான அணுகுமுறையையும் எடுத்துக்காட்டுகிறது. மேலே குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் உரிமையாளர்கள், தங்களது டீலர்களைத் தொடர்புகொண்டு திரும்பப் பெறுதல் மற்றும் ஆய்வு குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications









