இத்தன சீட்டா!.. மொத்தமா குடும்பஸ்தர்களை வளச்சு போட பிளான் போட்டுட்டாங்க.. வீட்டுல ஒருத்தர விடாம கூட்டி போகலாம்
எம்ஜி நிறுவனம் இந்திய குடும்பஸ்தர்களை மொத்தமாக வளைத்து போட திட்டமிட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடல் வாயிலாகவே இந்திய குடும்பஸ்தர்களை வளைத்து போட திட்டமிட்டு உள்ளது. இந்த கார் நாட்டில் சீக்கிரமே விற்பனைக்கும் வர இருக்கின்றது. எம்ஜி எம்9 (MG M9) எனும் கார் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் சொகுசு அம்சங்கள் நிறைந்த எம்பிவி (Luxury MPV) ரக கார் மாடல் ஆகும்.
இதன் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' ()-இல் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த காரின் பக்கம் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கின்ற விதமான முயற்சியில் எம்ஜி களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையில் ஓர் டீசரை வெளியிட்டு இருக்கின்றது.

பொதுவாக டீசர் என்றால் காரின் படம் அல்லது அதன் சிறப்பம்சங்களை விவரிக்கக் கூடியதாகவே இருக்கும். ஆனால், எம்ஜி நிறுவனம் விநோதமாக டீசரில் ஓர் கணித விளையாட்டுக்கு படத்தையே வெளியிட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக இந்த காரின் எம்9 எனும் பெயரையே அது தெரியப்படுத்தி இருக்கின்றது.
முன்னதாக இந்த காரை மைஃபா 9 (Mifa 9) என்றே நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது. ஆகையால், இந்த பெயரிலேயே அது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது பெயர் மாற்றப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கின்றது. எம்ஜி எம்9 ஏழு இருக்கைகள் தேர்வில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

இதுமட்டுமல்ல இன்னும் அதிக இருக்கைகள் ஆப்ஷன் இதில் வழங்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இந்தியாவில் அதிக இருக்கைகள் கொண்ட காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே எம்9 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் எம்ஜி களமிறங்கி இருக்கின்றது.
இந்த காரில் 7 பேரைக் கொண்ட பெரிய குடும்பமாக இருந்தாலும், ஒன்றாக அமர்ந்து பயணிக்க முடியும். மூன்று பேரை மட்டுமே கொண்ட சிறிய குடும்பமாக இருப்பின் பக்கத்து வீட்டுக்காரர்களையும் சேர்த்து அழைத்துக் கொண்ட போக முடியும். இத்தகைய ஓர் காராகவே எம்9 சீக்கிரம் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.
இது ஓர் அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய காராகவும் இருக்கும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவைத் தொடர்ந்து இந்த கார் மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ. 50 லட்சம் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே இந்த கார் விற்பனைக்கு என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், விலை விபரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எம்9 ஏழு இருக்கைகள் தேர்வுகளில் மட்டுமல்ல 8 இருக்கைகள் தேர்விலும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த காரில் வழங்கப்படும் இருக்கைகள் மிகுந்த சொகுசு வசதிகள் நிரம்பியதாக இருக்கும். அந்தவகையில், ஹீட், காற்றோட்டம் மற்றும் மசாஜ் ஆகியவற்றை செய்யக் கூடிய இருக்கையே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகையால், இந்த காரில் பயணிகளால் மிகுந்த உல்லாசமான பயணத்தைப் பெற முடியும். இதைத்தொடர்ந்து, பவர்டு பின் பக்க கதவு, ட்வின் சன்ரூஃப் உள்ளிட்டவையும் இடம் பெற இருக்கின்றன. இதுமட்டுமல்ல, பொழுதுபோக்கு திரைகள், பிரீமியம் மியூசிக் சிஸ்டம், அட்வான்ஸ்டு கார் இணைப்பு அம்சம் ஆகியவையும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.
தொடர்ந்து, ரேஞ்ச் தருவதிலும் இந்த கார் மாடல் கை தேர்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 430 கிமீ முதல் 500 கிமீ வரையில் இது ரேஞ்ச் தரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், அதிகம் ரேஞ்சை விரும்புவோர் மத்தியிலும் இந்த காருக்கு அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக எம்ஜியின் விண்ட்ஸர் இவி இருக்கின்றது. இதுவே இப்போது இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். டாடா நெக்ஸான் இவியை விற்பனையில் ஓரங்கட்டிவிட்டு இந்த இடத்தை அது பிடித்திருக்கின்றது. எம்9-க்கும் இதுமாதிரியான வரவேற்பே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









