எம்ஜி கார்களை வாங்குவதா வேண்டாமா? மக்களை விலை உயர்வுகளிலேயே எப்போதும் வெச்சிக்கிட்டு இருக்காங்க!!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் நாம் எதிர்பார்த்ததை போல் வருகிற ஜூலை மாதம் முதல் இந்தியாவில் அதன் கார்களின் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்தே நம் இந்திய மார்க்கெட்டில் செயல்பட்டு வந்தாலும், கடந்த சில வருடங்களாக தான் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மூலமாக இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையில், இந்த புதிய விலை அதிகரிப்பு கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த முன்னணி கார் நிறுவனமான எம்ஜி மோட்டார், தற்சமயம் சீனாவின் SAIC குழுமத்தின் கீழ் செயல்படுகிறது. இதனாலேயே எம்ஜி மோட்டாரை ஒரு சீன கார் நிறுவனமாகவே மொத்த உலகமும் பார்க்கிறது. மேலும், இந்தியாவிலும் SAIC வழங்கிய வழிக்காட்டுதல்களையே ஆரம்பத்தில் எம்ஜி மோட்டார் நடைமுறைப்படுத்தியது.

ஆனால், அந்த வழிக்காட்டுதல்கள் இந்தியாவில் பெரியதாக எடுப்படாமல் போகவே, தனது யுக்தியை மாற்ற விரும்பிய எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், அதற்காக இந்தியாவிலேயே செயல்படும் வேறொரு நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து, அதன் உதவியுடன் வளர முடிவெடுத்தது. அதன்படி, ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் எம்ஜி சில மாதங்களுக்கு முன் இணைந்தது. இந்த கூட்டணி உண்மையில் நல்ல பலன்களை அளித்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
எம்ஜி கோமெட் இவி (Comet EV) என்கிற விலை குறைவான எலக்ட்ரிக் கார் மூலமாக துவங்கிய இந்த கூட்டணியின் பயணம், தற்போதுவரையில் வெற்றிநடை போட்டு செல்கிறது. இந்தியாவிலேயே விலை குறைவான எலக்ட்ரிக் காராக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட கோமெட் இவி இந்தியர்கள் பலரை கவரவில்லை என்றாலும், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை தான் அதிகமாக அறிமுகம் செய்வது என்கிற கொள்கையில் எம்ஜி உறுதியாக இருந்தது.

அதற்கு கிடைத்த பலன் தான், எம்ஜி விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் காரின் பிரம்மாண்டமான வெற்றியாகும். கோமெட் இவி எலக்ட்ரிக் காரை காட்டிலும் அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், பேட்டரி குத்தகை (BaaS) முறையில் விற்பனை செய்யப்படுவதால் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வாங்க மக்கள் நிறைய பேர் விரும்புகின்றனர்.
விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை தொடர்ந்து இந்திய சந்தைக்கென பல திட்டங்களை எம்ஜி மோட்டார் வைத்திருக்கும் நிலையில், வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியாவில் குறிப்பிட்ட சில கார்களின் விலைகளை அதிகரிக்க உள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது எம்ஜி கார்களின் தற்போது இருக்கும் விலைகளில் 1.5% வரையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வருடத்தின் துவக்கத்தில் கார்களின் விலைகளை அதிகரிக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனம், அதேபோல் வருடத்தின் மத்தியிலும் கார்களின் விலைகளை அதிகரிப்பது உண்டு. அந்த வகையில்தான் 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் நிறைவடையும் நிலையில் புதிய விலை அதிகரிப்பை கொண்டுவருகிறது. வழக்கம்போல் இந்த விலை அதிகரிப்புக்கும் அதிகரித்துவரும் செலவுகளை தான் எம்ஜி மோட்டார் நிறுவனம் காரணமாக சுட்டிக் காட்டியுள்ளது.
கார்களை உற்பத்தி செய்வதிலும், அவற்றையும், அவற்றிற்கான பாகங்களையும் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கும் ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதை வழக்கம்போல் இந்த புதிய விலை அதிகரிப்புக்கும் எம்ஜி மோட்டார் காரணமாக தெரிவித்துள்ளது. அத்துடன், அரிய வகை தனிமங்களுக்கு உலகளவில் ஏற்பட்டுவரும் பற்றாக்குறையையும் எம்ஜி இதற்கு காரணமாக கூறியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகில் மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய தனிமங்களுக்கான பற்றாக்குறை ஆனது உலகின் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களை பாதித்துள்ளது. இருப்பினும், எம்ஜி மோட்டார் போன்ற சீன நிறுவனங்களின் பின்னணியில் இயங்கும் நிறுவனங்களுக்கு பெரியதாக பிரச்சனை கிடையாது என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். அப்படியிருந்தும் தனது கார்களின் விலைகளை ஜூலை 1 முதல் எம்ஜி மோட்டார் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ஆதலால், எம்ஜி காரை வாங்க திட்டமிட்டு வருபவர்கள் ஜூலை 1க்கு முன்பே காரை புக் செய்துவிடுவது நல்லது.


Click it and Unblock the Notifications









