இந்தியர்கள் செய்த காரியத்தால் உற்பத்தி ஆலையையே மாற்றும் சீன நிறுவனத்தின் சப்போர்ட்டில் இயங்கும் கார் நிறுவனம்!
இங்கிலாந்து நாட்டு நிறுவனமாக பிறந்து இப்போது சீன நிறுவனத்தின் கைகளுக்கு மாறியிருக்கும் கார் உற்பத்தி நிறுவனம் எம்ஜி மோட்டார் (MG Motor). இந்த நிறுவனம் இப்போது இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்து ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் என்கிற பெயரில் செயல்பட்டு வருகின்றது. ஜப்பானின் சுஸுகி (Suzuki)-யும், இந்தியாவின் மாருதி (Maruti)-யும் இணைந்து இந்தியாவின் வாகன சந்தையை ஆட்சிச் செய்துக் கொண்டிருக்கின்றதை போல இவர்களும் பேராதிக்கம் செய்ய வேண்டும் என்கிற நோக்கிலேயே இணைந்திருக்கின்றனர்.
நிறுவனத்தின் இந்த எண்ணமே கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற தொடங்கி இருப்பது தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. சொல்லப்போனால் நிறுவனத்தின் ஒற்றை தயாரிப்பிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அமோக வரவேற்பின் காரணமாக, கார் உற்பத்தி ஆலையையே மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார்க்கு தற்போது உருவாகி இருக்கின்றது.

எம்ஜி நிறுவனத்தின் புதுமுக கார் மாடல்களில் ஒன்றாக விண்ட்ஸர் இவி (Windsor EV) இருக்கின்றது. இது ஓர் மின்சார கார் (Electric Car) மாடல் ஆகும். மேலும், இந்தியாவின் ஒரே ஒரு சியூவி (CUV) ரக கார் மாடலாகவும் இதுவே இருக்கின்றது.
இந்த கார் மாடலுக்கே இந்தியர்கள் மத்தியில் மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில மாதங்களாகவே இதுவே இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக உள்ளது. இந்த இடத்தை முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான்.இவி-யே அலங்கரித்து வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.
நீண்ட காலமாக இந்த இடத்தை அது ஆட்சிச் செய்து வந்ததும் இங்கே கவனிக்கத்தகுந்தது. இத்தகைய காரிடம் இருந்தே முதல் இடத்தைத் தட்டி பறித்துக் கொண்டது எம்ஜி விண்ட்ஸர் இவி. இந்த அளவிற்கு அமோக வரவேற்பு அதற்குக் கிடைத்து வருவதை முன்னிட்டே விண்ட்ஸர் இவி-யின் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆலையில் சில மாற்றங்களை மேற்கொள்ளவும் அது திட்டமிட்டு இருப்பதாக தற்போது வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை குஜராத் மாநிலத்தில் ஹலோல் எனும் பகுதியில் அமைந்து இருக்கின்றது. அங்கேயே விண்ட்ஸர் இவியின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான மாற்றங்களைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
இந்த காருக்காக மட்டுமல்ல விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எம்ஜி எம்9 (M9) மற்றும் எம்ஜி சைபர்ஸ்டர் (Cyberster) ஆகிய கார் மாடல்களைக் கருத்தில் கொண்டும் அது மாற்றங்களைச் செய்ய இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த இரண்டும் மின்சார கார் மாடல்கள் ஆகும். இவற்றை விற்பனைச் செய்வதற்காக நிறுவனம் பிரத்யேக ஷோரூம் ஒன்றை திறக்க இருக்கின்றது.
எம்ஜி செலக்ட் எனும் பெயரிலேயே அந்த ஷோரூம் நாட்டில் செயல்படும். இதன் வாயிலாக பிரீமியம் மற்றும் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த வாகன மாடல்கள் மட்டுமே விற்பனைச் செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆகையால், எம்9 மற்றும் சைபர்ஸ்டர் ஆகிய கார் மாடல்களைத் தொடர்ந்து இன்னும் பல பிரீமியம் கார் மாடல்களை எம்ஜி நிறுவனம் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விண்ட்ஸர் இவி -க்கு நல்ல வரவேற்பு கிடைக்க அதில் வழங்கப்பட்டு இருக்கும் பிரீமியம் அம்சங்களே முக்கிய காரணமாக இருக்கின்றது. எஸ்யூவி கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இதன் இட வசதி உள்ளது. அதேபோல், லக்கேஜ்களையும் மிக அதிக அளவில் ஏற்றிச் செல்ல முடியும். இதுபோன்று இன்னும் பல காரணங்களுக்காக இந்த காருக்கு நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








