யாருக்கும் தெரியாமல் லாரியில் மூடி கொண்டுவந்தது இதுக்கு தானா? கார் விலையை கரெக்ட்டா நிர்ணயித்துவிட்டால் போதும்
டெஸ்லா (Tesla), உலகளவில் பிரபலமான அமெரிக்க கார் நிறுவனம். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் களமிறங்க உள்ள டெஸ்லா, வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் டீலர்ஷிப் ஷோரூமை மும்பையில் திறக்க உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே நாம் பார்த்து இருந்த நிலையில், தற்போது மும்பை டெஸ்லா ஷோரூமுக்கு கொண்டுவரப்பட்ட டெஸ்லா மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் காரின் படங்கள் வெளியாகி உள்ளன.
குறுகிய காலத்தில் உலக மக்கள் பலர் விரும்பி வாங்கக்கூடிய கார்களாக டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்கள் மாறிவிட்டன. பலத்த போட்டி மிகுந்த சீன சந்தையில் கூட டெஸ்லா நன்கு வலுவாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவில் டெஸ்லாவுக்கு கார் உற்பத்தி தொழிற்சாலை கூட உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்க நிறுவனம் ஒன்று சீனாவில் ஆதிக்கம் செலுத்தவது எல்லாம் மிகவும் அரிதான ஒன்றாகும். ஆனால், இந்தியாவில் நுழைவதற்கு தான் பல ஆண்டுகளாக மிகவும் யோசித்தது. நம் இந்திய அரசு வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் வாகனங்களுக்கு அதிகமான வரியை விதிக்கிறது. இந்தியாவிலேயே அந்த வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யவும் என்பதுதான் மத்திய அரசின் வலியுறுத்தல் ஆகும்.
ஆனால், டெஸ்லா நிறுவனமோ இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து தொழிற்சாலை அமைத்து வணிகம் செய்ய விரும்பவில்லை. சீனா அளவிற்கு இந்தியாவை பொருளாதார ரீதியாக மேம்பட்டதாக டெஸ்லா நிர்வாகம் கருதவில்லை என்பதுதான் இதற்கு காரணம். இதனால், வெளிநாடுகளில் இருந்து (எப்படியிருந்தாலும் சீனாவில் இருந்துதான்) கார்களை கொண்டுவந்து இந்தியாவில் விற்பனை செய்ய தங்களுக்கு குறைவான வரியை விதிக்குமாறு மத்திய அரசிடம் கடந்த பல வருடங்களாகவே டெஸ்லா வேண்டுக்கோள் விடுத்து வந்தது.

ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு விடாப்பிடியாக இருந்துவந்த நிலையில், தற்போது என்ன நடந்ததோ என தெரியவில்லை இந்திய மார்க்கெட்டில் களம்புக டெஸ்லா தயாராகி வருகிறது. வருகிற ஜூலை 15ஆம் தேதியில் இந்தியாவில் முதல் டீலர்ஷிப் ஷோரூமை மும்பையில் டெஸ்லா திறக்க உள்ளது.
மும்பையில் அமைந்துள்ள இந்த டெஸ்லா ஷோரூம் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக கடந்த ஜூன் மாதத்திலேயே ஷோரூமின் படங்கள் உடன் தெரிவித்து இருந்தோம். மும்பையின் பிரபலமான பந்த்ரா பகுதியில் குர்லா காம்ப்ளக்ஸ் (Kurla Complex) என்கிற வளாக பகுதிக்குள் டெஸ்லா டீலர்ஷிப் ஷோரூம் அமைய உள்ளது. இந்த நிலையில், ஷோரூமுக்கு லாரியில் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் ஒன்று கொண்டுவரப்பட்ட போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

ஷோரூமில் காட்சிக்கு நிறுத்துவதற்காக இந்த மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் கப்பல் மூலமாக மும்பைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இவ்வாறு முதல் இந்திய டெஸ்லா ஷோரூம் திறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் (CEO Elon Musk) அவர்களும் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லாவின் முதல் டீலர்ஷிப் ஷோரூம் திறக்கப்படுகிறது என மட்டுமே தகவல்கள் கிடைத்துள்ளதே தவிர்த்து, டெஸ்லா உடன் ஷோரூம்களை நிர்வகிக்க எந்த தனியார் நிறுவனம் டீலராக இணைந்துள்ளது என்கிற விபரங்கள் கிடைக்க பெறவில்லை. ஜூலை 15க்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால், இந்தியாவில் டெஸ்லா கார்கள் குறித்த விபரங்களை அறிய நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது இல்லை.
Source: Cartog (https://www.cartoq.com/)


Click it and Unblock the Notifications









