மறுபடியும் டாடா கொடி பறக்க போகுது... வேட்டியை வரிஞ்சு கட்டிகிட்டு களத்துல இறங்கியிருக்காங்க...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV). இந்திய சாலைகளில் தற்சமயம் மிக அதிகமாக தென்படக்கூடிய எலெக்ட்ரிக் கார், அனேகமாக இதுவாகதான் இருக்கும். ஆனால் சமீப காலமாக எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) எலெக்ட்ரிக் கார், டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு விற்பனையில் குடைச்சல் கொடுத்து கொண்டுள்ளது. எனவே எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காருக்கு பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் புதிய தலைமுறை மாடல், நடப்பு 2025ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அனேகமாக தீபாவளி பண்டிகை சமயத்தில், புதிய தலைமுறை டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு களமிறக்கப்படலாம். புதிய தலைமுறை டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில், 45 kWh மற்றும் 55 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 489 கிலோ மீட்டர்கள் மற்றும் 585 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் 30 kWh பேட்டரி மாடல் தொடர்ந்து வழங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

ஒரு வேளை 30 kWh மாடல் தொடர்ந்து வழங்கப்பட்டால், அது பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும் கவரக்கூடியதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வசதிகளை (Features) பொறுத்தவரையில், தலா 12.3 இன்ச் அளவில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை வழங்கப்படலாம்.
இதுதவிர கால் அசைவு மூலமாகவே பின் பக்க பூட் பகுதியை திறக்கும் வசதியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் கைகளில் நிறைய பொருட்களை வைத்திருந்தால், கைகளை பயன்படுத்தி பூட் பகுதியை திறப்பதில் சிரமங்கள் ஏற்படும். எனவே கால் அசைவு மூலமாக பூட் பகுதியை திறக்கும் வசதி மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
அத்துடன் ஸ்மார்ட் டோர் ஹேண்டில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்ற அதிநவீன வசதிகளையும் புதிய தலைமுறை டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் நாம் உறுதியாக எதிர்பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை எம்ஜி விண்ட்சர் இவி சமீப காலமாக பெற தொடங்கியுள்ளது. இது முன்பு டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரிடம் இருந்து வந்த மகுடம் ஆகும்.
எனவே இழந்த பெருமையை மீட்டெடுப்பதற்காக நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகுவாக அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக புதிய தலைமுறை டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரின் விலை சற்று உயர்த்தப்படலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








