ஏரோபிளைன் காக்பிட் மாதிரில இருக்கு... டாடா உருவாக்கும் புதிய காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பிரபலமான கார்களுள் ஒன்று, சியரா (Sierra) ஆகும். 1991ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா சியரா ஆனது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார்களுள் ஒன்றாகும். இதனாலேயே அந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை பெற்ற சியரா காரை மீண்டும் புதிய தோற்றத்தில் டாடா நிறுவனம் சந்தைக்கு கொண்டுவர உள்ளது.
புதிய டாடா சியரா வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், இந்த கார் குறித்த புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது, சியரா காரின் நடுத்தர வேரியண்ட்டின் உட்புறத் தோற்றம் குறித்த புதிய படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு உள்ளன.

இது டாப்-ஸ்பெக் வேரியண்ட்களுக்குக் கீழ் நிலைநிறுத்தப்பட உள்ள மிட்-வேரியண்ட்டின் உட்புற கட்டமைப்பு பற்றிய முதல் தெளிவான பார்வையை அளிக்கிறது. முன்னதாக வெளிவந்த சியராவின் டாப்-ஸ்பெக் வேரியண்ட்டின் படங்களில் காருக்குள் டேஷ்போர்டில் மூன்று திரை அமைப்புகள் இருந்தன. ஆனால், நடுத்தர வேரியண்ட்களில், அதே நவீன, பிரீமியம் வடிவமைப்பைத் தக்க வைத்துக்கொண்டு, இரண்டு திரை கொண்ட டேஷ்போர்டு அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக வெளிவந்த படங்களில், காருக்குள் முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளேவும், பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டும் டேஷ்போர்டின் மையத்தில் பொருத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது. இரண்டு திரைகளும் டேஷ்போர்டில் அழகாக ஒருங்கிணைக்கப்பட்டு, சியராவிற்கு ஒரு நேர்த்தியான, எதிர்கால தோற்றத்தை அளிக்கின்றன.

இந்த திரை அமைப்பு, சமீபத்திய டாடா கார்களில் உள்ளதைப் போலவே, பல கனெக்டட் அம்சங்கள், நேவிகேஷன், பொழுதுபோக்கு செயலிகள் மற்றும் வாகனத் தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு புதிய தலைமுறை யூஸர் இன்டர்ஃபேஸ் உடன் இந்த திரைகள் வருகின்றன. நடுத்தர வேரியண்ட்களிலும் டாடா நிறுவனம் டேஷ்போர்டு மற்றும் கதவு பேனல்களில் விளக்குகளை வழங்கியுள்ளது.
இது, குறைந்த வெளிச்சத்தில் கேபினுக்கு ஒரு ஆடம்பரமான தோற்றத்தை அளிக்கிறது. மென்மையான தொடுதலுக்கு ஏற்ற பொருட்கள், பல அடுக்கு அமைப்புகள், மறுவடிவமைக்கப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் டாடாவின் புதிய தலைமுறை ஸ்டீயரிங் சக்கரம் ஆகியவை சியராவின் உட்புற அழகை மேலும் மேம்படுத்துகின்றன.
மிதப்பது போன்ற எஃபெக்ட் கொண்ட திரை கன்சோல் உடன் அகலமான திரைகள், நேர்த்தியான ஏசி வென்ட்கள் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் பேனலுக்கு கீழே நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட க்ளைமேட் கண்ட்ரோல் பட்டன்கள் மூலம் டேஷ்போர்டு அமைப்பானது மிகவும் சுத்தமாகவும் விசாலமாகவும் தெரிகிறது. இவற்றுடன், பல அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப அம்சங்களையும் புதிய சியரா கார் பெற்றுவர உள்ளது.

அதன்படி, ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், பவர் அட்ஜெஸ்மெண்ட் & மெமரி வசதி உடன் டிரைவர் இருக்கை, வயர்லெஸ் சார்ஜிங் பேட், பின்பக்க ஜன்னல் கண்ணாடிகளில் சன்ஷேட்கள், 360-டிகிரி கேமரா, லெவல்-2 அடாஸ் (ADAS) மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவையும் புதிய சியராவில் இடம்பெறவுள்ளன.
புதிய டாடா சியரா நவம்பர் 25 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த வடிவமைப்பு, வலுவான அம்சங்கள் மற்றும் உட்புறத் தோற்றத்தின் தெளிவான பார்வை போன்ற காரணங்களால் புதிய சியரா மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது வெளியாகி இருக்கும் புதிய படங்கள் மூலம், சியராவுக்காக ஒரு சிறந்த வேரியண்ட் வியூகத்தை டாடா மோட்டார்ஸ் வகுக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதன் மூலம், பிரீமியம் அம்சங்கள் சியரா நடுத்தர வேரியண்ட்களிலும் கிடைக்க உள்ளன. அதேசமயம், மூன்று திரை அமைப்பு போன்ற எதிர்கால தொழில்நுட்பங்கள் உயர் வேரியண்ட்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறை, தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர்களில் இருந்து குறைந்த செலவில் கார் வாங்க நினைப்பவர்கள் வரை, பரந்த வாடிக்கையாளர்களை ஈர்க்க சியராவுக்கு உதவும்.


Click it and Unblock the Notifications









