மாருதி எலெக்ட்ரிக் காருக்கான புக்கிங் தொடங்கிருச்சா!.. பாவம் டாடா-எம்ஜி.. இவங்கள நினைச்சாதான் கவலையா இருக்கு!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் ரிசர்வேசன் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் நீண்டகால இழுபறிக்கு பின்னர் ஒரு வழியாக தன்னுடைய இ-விட்டாரா (eVitara) எனும் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடலை சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்தியாவில் காட்சிப்படுத்தியது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் நிலவி வந்தது. இந்த மாதிரியான சூழலிலேயே பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 வாயிலாக இ-விட்டாராவை நாட்டில் மாருதி சுஸுகி வெளியீடு செய்தது.
இந்த காருக்கே தற்போது புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய எலெக்ட்ரிக் காரை நாட்டில் மாருதி சுஸுகி வெளியீடு செய்திருக்கின்றது.

சீக்கிரமே இது விற்பனைக்கும் வர இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ரிசர்வேசன் பணிகள் தொடங்கி இருக்கின்றன. ஆனால், இது அதிகாரப்பூர்வ புக்கிங் பணிகள் அல்ல. டீலர்ஷிப்புகள் அளவில் மட்டுமே புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. அதாவது, டீலர்கள் சிலர் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் இ-விட்டாராவிற்கான புக்கிங் பணிகளைத் தொடங்கி இருக்கின்றனர்.
விரைவிலேயே அதிகாரப்பூர்வ புக்கிங்கை மாருதி சுஸுகி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், தற்போது குறிப்பிட்ட சில டீலர்களே இ-விட்டாராவிற்கான புக்கிங் பணிகளை தொடங்கி இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. ரூ. 25 ஆயிரம் வரை முன்தொகையாக வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல்களாக எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) இருக்கின்றன.
இவற்றிற்கே விற்பனையில் போட்டியளிக்கும் விதமாக இ-விட்டாரா வருகை தர இருக்கின்றது. இதன் விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவிலேயே விலைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகைய ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக், டாடா கர்வ் இவி, மஹிந்திரா பிஇ6 மற்றும் எம்ஜி இசட்எஸ் ஆகிய மாடல்களுக்கே மிகப் பெரிய அளவில் போட்டியாக அமைய உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.
இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் மாருதி சுஸுகி இ-விட்டாரா விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. 49 kWh மற்றும் 61 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளே இ-விட்டாராவில் வழங்கப்பட இருக்கின்றன. இதில் முதல் ஒன்றில் ஓர் முழு சா்ர்ஜில் 350 கிமீ முதல் 400 கிமீ வரையிலான ரேஞ்ச் திறனும், இரண்டாவது பேட்டரி பேக்கில் 500 கிமீ வரையிலான ரேஞ்ச் திறனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ரேஞ்ச் தருவதில் மட்டுமல்ல தொழில்நுட்ப அம்சங்களை தாங்கி இருப்பதிலும் இந்த எலெக்ட்ரிக் கார் மிக சிறந்ததாக இருக்கும். 10.25 அங்குலத்தில் ஓர் திரையும், 10.1 அங்குலத்தில் ஓர் திரையும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும். இதில் முதல் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று டிரைவருக்கான டிஜிட்டல் திரையாகவும் செயல்படும்.
இதுதவிர, அடாஸ் அம்சம், 7 ஏர் பேக்குகள், செல்போன் சார்ஜிங் கருவிகள் மற்றும் விரைந்து கேபினை குளிர்விக்கும் ஏசி சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும். இந்த காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவின் குஜராத் ஆலையில் வைத்தே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இங்கு தயாரிக்கப்படும் இ-விட்டாரா இந்தியாவிற்காக மட்டுமல்ல ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கானதாகவும் இருக்கும். ஆமாங்க இருந்தே உலக நாடுகள் சிலவற்றிற்கு இ விட்டாரா-வை மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்ய இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய எலெக்ட்ரிக் கார் மாடல்களில் மாருதி சுஸுகி இ-விட்டாரவும் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி ரக மின்சார கார் மாடலும் ஆகும். ஆகையால், இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் பணிகள் இந்த காருக்கு நாட்டில் தொடங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








