பெண்களின் வாழ்க்கையை ஒவ்வொரு ஊராக சென்று மாத்த போறாங்க! பிங்க் கலர் ஆட்டோக்களை சென்னையில் பார்க்கலாமா?
எந்தவொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் தனியார் நிறுவனங்களின் உதவி அவசியமான ஒன்றாகும். அதாவது, குறிப்பிட்ட கிராம அல்லது நகரத்தின் வளர்ச்சியை குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்கள் கவனித்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு பெரும் உதவியாக இருக்கும். மற்றும், அரசாங்கத்திடம் நிறுவனத்தை பற்றி நற்பெயர் ஏற்படும். இதனாலேயே பெரும்பாலான தனியார் கார்ப்பிரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் (CSR) என்கிற பெயரில் சமூக சேவைகளை செய்து வருகின்றன. அந்த வரிசையில் ஓ.எஸ்.எம் (OSM) நிறுவனம் தற்போது குறிப்பிட்ட சில பெண்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளது.
சுருக்கமாக OSM எனப்படும் ஒமேகா சீகி மொபிலிட்டி (Omega Seiki Mobility) ஆனது இந்தியாவின் மிக பெரும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். பசுமையான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை வெளியிடாத எலக்ட்ரிக் வாகனங்களை வழங்குவது என்பதுதான் ஓ.எஸ்.எம் நிறுவனத்தின் முக்கியமான நோக்கம் ஆகும்.

எலக்ட்ரிக் 2-வீலர்கள், 3-வீலர்கள் மற்றும் 4-வீலர்கள் என பல்வேறு விதமான எலக்ட்ரிக் வாகனங்களை ஓ.எஸ்.எம் நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் 3-வீலர்கள் பிஸ்னஸில் ஒமேகா சீகி மொபிலிட்டி முன்னிலையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் 3-சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் பல நகரங்களில் பயன்பாட்டில் உள்ளன.
அதேநேரம், ஒமேகா சீகி மொபிலிட்டி நிறுவனம் மற்ற வழிகளிலும் முடிந்தவரையில் தனது எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முயல்கிறது. அந்த முயற்சியின் ஒருபகுதியாகவும், சமூக சேவையாகவும் குறிப்பிட்ட சில பெண்களுக்கு எலக்ட்ரிக் ஆட்டோக்களை வழங்கி அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்பட ஒமேகா சீகி மொபிலிட்டி உதவி செய்துள்ளது.

இதற்காக 'நாரி சக்தி' (Naari Shakti) என்கிற பெண்கள் நல அறக்கட்டளை உடன் ஓஎஸ்எம் நிறுவனம் இணைந்துள்ளது. இந்த கூட்டணியின்படி, நாரி சக்தி அறக்கட்டளையின் கீழ் சுமார் 2500 பெண்களுக்கு 3-சக்கர ஆட்டோ ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பரவலாக பிடித்த நிறமான பிங்க்கில் ஆட்டோ ரிக்ஷாக்கள் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
இந்த 2,500 பெண்கள் இந்தியா முழுவதும் பல பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதன் மூலமாக பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுவதுடன், இந்தியாவின் லாஸ்ட்-மைல் போக்குவரத்து சேவையும் மேம்படுகிறது. ஒமேகா சீகி மொபிலிட்டி நிறுவனம் சமூக சேவையாக 2,500 பெண்களுக்கு குறைந்த விலையில் ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 999இல் எலக்ட்ரிக் 3-வீலர்களை வழங்கி உள்ளது.
மேலும், இந்த எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களை பெண்களுக்கு வெறும் 1% வட்டியில் ஒஎஸ்எம் நிறுவனம் வழங்கி உள்ளது. வழக்கமான சிஎன்ஜி ஆட்டோக்கள் உடன் ஒப்பிடுகையில், ஒஎஸ்எம் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் 4இல் ஒரு பங்கு எரிபொருள் செலவை மட்டுமே ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன.
பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் பசுமையான போக்குவரத்துக்கு ஏற்றதாக இருப்பது மட்டுமின்றி, டிரைவர் மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பையும் வழங்கக்கூடியவைகளாக உள்ளன. தற்போதைக்கு டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஆட்டோக்கள் வரும் மாதங்களில் சென்னை மற்றும் பெங்களூர் & வட கர்நாடக பகுதிகளில் உள்ள பெண்களுக்கும் வழங்கப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் பெண்களுக்கு இலவசமாக ஒன்றும் வழங்கப்படவில்லை. அதேநேரம், அதிக வட்டிக்கும் வழங்கப்படவில்லை. பெண்களின் சூழலை கருத்தில் கொண்டு குறைவான விலையில், வெறும் 1% வட்டியில் ஒஎஸ்எம் ஆட்டோ ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப பெண்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்தாலே தானாக அவர்களது குடும்பமும் மேம்படும்.


Click it and Unblock the Notifications








