எம்ஜியில் எந்த காரை வாங்கினாலும் சரி, இனி இந்த வசதியை பெறலாம்! நம்ம நாட்டுக்கு ரொம்ப அவசியமான ஒண்ணு...!!
இந்தியாவில் தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைக் காலம் கொண்டாட்டங்களைக் கொண்டாடும் அதேவேளையில், பட்டாசுகள், பயிர் கழிவுகள் எரிப்பு மற்றும் பிற காரணிகளால் காற்று மாசுபாடு பெருமளவு அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம் தனது கார்கள் அனைத்திலும் தற்போது காற்று சுத்திகரிப்பானை நிலையான வசதியாக வழங்க துவங்கியுள்ளது.
வாகனங்களுக்குள் தூய்மையான காற்றை உறுதி செய்வதன் மூலம் வாடிக்கையாளர் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை எம்ஜி கையில் எடுத்துள்ளது. எம்ஜி நிறுவனம் தனது கார்களில் (குறிப்பிட்ட வேரியண்ட்களில்) கிடைக்கும் PM 2.5 ஏர் ஃபில்டர்கள் மற்றும் ஏர் ப்யூரிஃபையர்களை இதற்காக முன்னிலைப்படுத்துகிறது.

இந்த புதுமையான தொழில்நுட்பங்கள், வெளிப்புற காற்றின் தரம் குறைந்தாலும், எம்ஜி வாகன உரிமையாளர்கள் ஒவ்வொரு பயணத்தையும் தூய்மையான, ஆரோக்கியமான உட்புறச் சூழலில் அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்கின்றன. PM 2.5 என்பது 2.5 மைக்ரான்ஸ் அளவை விட சிறிய நுண்துகள்களைக் குறிக்கிறது. இவை மூக்கு மற்றும் தொண்டையைத் தாண்டி நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மிகச் சிறியவை.
எம்ஜியின் இந்த தூய காற்று தொழில்நுட்பம் இந்த குறிப்பிட்ட அச்சுறுத்தலையும் எதிர்த்துப் போராடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்ஜி ஹெக்டர், அஸ்டர், க்ளோஸ்டர் போன்ற எரிபொருள் என்ஜின் கார்களிலும், வின்ட்சர் இவி, காமட் இவி மற்றும் இசட்.எஸ் இவி போன்ற எலெக்ட்ரிக் கார்களிலும் PM 2.5 ஏர் ஃபில்டர்கள் கிடைக்கின்றன.

குறிப்பாக, எம்ஜி ஹெக்டர் (MG Hector) காரில், தூசி மற்றும் புகையை மட்டுமல்லாமல், துர்நாற்றங்கள் மற்றும் சில ரசாயன மாசுபடுத்திகளையும் வடிகட்டக்கூடிய ஒரு பிரத்யேக காற்று சுத்திகரிப்பான் வழங்கப்படுகிறது. இது கிருமி மற்றும் ஆக்டிவேட்டட் கார்பன் வடிகட்டுதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த மேம்பட்ட ஃபில்டர்கள், தூசி, புகை, கசடு, மகரந்தம் மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட 95-99% தீங்கு விளைவிக்கும் துகள்களை வடிகட்டுகின்றன.
பிரபலமான எம்ஜி ஹெக்டர், PM 2.5 ஏர் ப்யூரிஃபையர் மூலம் கேபின் பாதுகாப்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. இது மாசுபடுதல்கள், ஒவ்வாமை காரணிகள் மற்றும் துர்நாற்றங்களை திறம்பட நீக்க ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டரை பயன்படுத்துகிறது. மேலும், வாகனத்தின் டாஷ்போர்டில் உள்ள நிகழ்நேர காற்றின் தரக் குறியீடு (AQI) டிஸ்பிளே, கார் பயணத்தின் போது உட்புற காற்றின் தரத்தை பயணிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கிறது.

இதன் மூலம், மன அமைதி உடன் பயணத்தை மேற்கொள்ள முடியும். இந்த முன்முயற்சி ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் தூய்மையான, புத்திசாலித்தனமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான நோக்கத்துடன் இணைகிறது. மேம்பட்ட காற்று வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிப்பு அமைப்புகளைத் தனது தயாரிப்புகளில் ஒருங்கிணைப்பதன் மூலம், எம்ஜி நிறுவனம் வாடிக்கையாளர் நலனுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கிறது. அதேநேரம், சுற்றுச்சூழல் பொறுப்பை ஊக்குவிப்பதிலும் எம்ஜி கவனம் செலுத்துகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மேம்பாடுகள் இந்திய சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை. இங்கு காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட ஆரோக்கியமான வரம்புகளைத் தொடர்ந்து மீறுகிறது. இதனால், ஆண்டின் பல மாதங்களில் வாகனத்திற்குள் உள்ள காற்று, வெளியே இருப்பதை விட சுத்தமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆதலால், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









