பிரதமர் கொடியசைத்து துவங்கி வெச்சாச்சு... மாருதி சுஸுகியால் இந்தியாவை மொத்த உலக நாடும் திரும்பி பார்க்க போகுது
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனம். இந்தியாவின் மாருதியும், ஜப்பானின் சுஸுகியும் இணைந்து உருவான நிறுவனமான மாருதி சுஸுகி தயாரிக்கும் பலர் கார்கள் மாதத்திற்கு சராசரியாக 15 ஆயிரம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனமாக இருப்பினும், எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் ஆரம்பத்தில் மாருதி சுஸுகி கொஞ்சம் தயக்கம் காட்டியப்படி இருந்தது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவாகவே இருப்பதற்கும் மாருதி சுஸுகியின் அந்த தயக்கமே காரணமாக இருந்தது.

இதற்கிடையில், இந்த 2025ஆம் ஆண்டு துவக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாருதி சுஸுகி தனது எலக்ட்ரிக் காராக இ-விட்டாரா (E-Vitara) மாடலை அறிமுகப்படுத்தியது. இத்தகைய சிறப்புமிக்க முதல் மாருதி சுஸுகி எலக்ட்ரிக் காரின் உற்பத்தியை தான் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களே குஜராத்தில் உள்ள மாருதி சுஸுகியின் தொழிற்சாலைக்கு நேரில் சென்று கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார்.
குஜராத்தின் ஹன்சல்புர் (Hansalpur) என்கிற பகுதியில் உள்ள மாருதி சுஸுகியின் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட முதல் இ-விட்டாரா எலக்ட்ரிக் காரை பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைத்து, அசெம்பிள் (Assemble) லைனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன்பின், அங்கிருந்து இ-விட்டாரா கார்கள் மாருதி சுஸுகியின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு (Dealership Showrooms) அனுப்பி வைக்கப்பட்டு, புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி (Delivery) செய்யப்படும்.

உலகளவில் மாருதி சுஸுகியின் முதல் பேட்டரி எலக்ட்ரிக் வாகனம் (BEV) ஆக உற்பத்தி செய்யப்பட்டு வரும் இ-விட்டாரா கார்கள் மேட்-இன்-இந்தியா (Made-in-India) எலக்ட்ரிக் கார்களாக 100க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமின்றி, சுஸுகியின் தாயகமான ஜப்பானுக்கும் கூட நமது மேட்-இன்-இந்தியா இ-விட்டாரா கார்கள் தான் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இந்த விஷயத்தில் இத்தனை சிறப்புகள் இருப்பதினாலேயே, நாட்டின் பிரதமர் நேரடியாக கார் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைக்கு சென்று இ-விட்டாரா எலக்ட்ரிக் கார் உற்பத்தியை ஊக்கப்படுத்தி உள்ளார். மாருதி சுஸுகி இ-விட்டாரா கார் மட்டுமில்லை, மத்திய அரசாங்கம் கடந்த பல வருடங்களாகவே எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்துவதில் முனைப்புடன் உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், அவற்றை வாங்கும் மக்களுக்கும் மானியம் வழங்கும் நோக்கில் ஃபேம்-2 (FAME-2) திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது எல்லாம் அந்த முயற்சிகளின் ஒரு பகுதியே ஆகும். இருப்பினும், இ-விட்டாரா விஷயத்தில் மத்திய அரசு இன்னும் தீவிரமாக இருப்பதற்கு காரணம், இனி வரும் காலங்களில் லட்சக்கணக்கிலான மக்கள் வாங்க போகும் எலக்ட்ரிக் காராக இ-விட்டாரா இருக்கலாம் என்பதினாலேயே ஆகும்.
மேலும், மேட்-இன்-இந்தியா கார்களை வெளிநாடுகளில் விற்பனை செய்வதும் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும். "இந்த மைல்கல் மூலமாக, எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் சுஸுகியின் உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா விளங்கும்" என பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பெருமிதத்துடன் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இ-விட்டாராவின் உற்பத்தியை துவங்கி வைத்ததுடன், ஹன்சல்புரில் டிடிஎஸ் லித்தியம்-இரும்பு பேட்டரிக்காக சுஸுகி நிறுவனம் புதியதாக கட்டியெழுப்பி உள்ள தொழிற்சாலையையும் பிரதமர் திறந்து வைத்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியை மத்திய அரசு எந்த அளவிற்கு ஊக்கப்படுத்துகிறது என்பதற்கு பிரதமரின் இந்த நிகழ்வே சாட்சியாகும். இதை சாதாரணமாக பார்த்தால், எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி மற்றும் அவற்றிற்கான பேட்டரி தொழிற்சாலை என்பது மட்டுமே தெரியும். ஆனால், கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால், மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைப்பு உள்ளிட்ட நன்மைகள் யாவும் புலப்படும்.


Click it and Unblock the Notifications









