விலையை ஏத்த மனசில்லாமல் தவிக்கும் கார் நிறுவனம்! அறிமுகத்தப்போ நிர்ணயித்த விலைய சில நாளுக்கு நீட்டிச்சுட்டாங்க
கார் காதலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் சில விலை உயர்வைப் பற்றி அறிவித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்த ஏப்ரல் மாதத்தில் நிறைய நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை உயர்த்தப்பட்ட புதிய விலையில் விற்பனைச் செய்ய இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய புதுமுக கார் மாடல் ஒன்றின் விலையை உயர்த்த மனமில்லாமல் தவித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்கோடா (Skoda) நிறுவனமே அது ஆகும்.
இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைலாக் (Kylaq) எனும் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி (Sub-4 Meter SUV) ரக கார் மாடல் ஆகும். மிகப் பெரிய எதிர்பார்ப்பு இந்த காருக்கு இந்தியாவில் நிலவியது.

இதற்கு மத்தியிலேயே இந்த காரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று ஸ்கோடா நிறுவனம் கைலாக் கார் மாடலின் ஆரம்ப விலையை அறிவித்து அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்தது. ஆனால், புக்கிங் பணிகள் டிசம்பர் 2 ஆம் தேதி அன்றே தொடங்கியது.
'இந்தியா 2.0' திட்டத்தின்கீழ் ஸ்கோடா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த 3 ஆவது கார் மாடல் இந்த கைலாக் ஆகும். இதனாலேயே இந்த காரை அவர்கள் மிக குறைவான ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்தனர். அறிமுகமாக ரூ. 7.89 லட்சம் என்கிற விலையை அதற்கு ஸ்கோடா நிறுவனம் நிர்ணயம் செய்தது.

மலிவு விலை வாயிலாக இந்தியர்களைக் கவர வேண்டும் என்கிற நோக்கிலேயே இவ்வளவு குறைவான விலையை அதற்கு அது நிர்ணயம் செய்தது. இந்த அறிமுக விலையையே ஸ்கோடா நிறுவனம் இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி இந்த அறிமுக சலுகை விலை இம்மாத இறுதி வரை கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
அதாவது, ஏப்ரல் இறுதிக்கு பின்னர் புதிய உயர்த்தப்பட்ட விலையிலேயே கைலாக் கார் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. முன்னதாக பார்த்தது ஆரம்ப நிலை தேர்வான கிளாசிக் எம்டி (Classic MT)-இன் விலை ஆகும். இதன் உயர்நிலை தேர்வான பிரெஸ்டீஜ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் (Prestige Petrol AT) ரூ. 14.4 லட்சம் என்கிற விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

ஸ்கோடா நிறுவனம் இந்த கைலாக் காரை அதன் புகழ்பெற்ற 'எம்க்யூபி ஏஓ ஐஎன்' (MQB-A0-IN) பிளாட்பாரத்தை தழுவியே தயார் செய்திருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தைத் தழுழியே குஷாக் (Kushaq) மற்றும் ஸ்லேவியா (Slavia) ஆகிய இரண்டு கார் மாடல்களையும் ஸ்கோடா தயாரித்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த இரண்டு கார் மாடல்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு கிடைத்த மாதிரியான சிறப்பான வரவேற்பே தற்போது கைலாக்-கிற்கும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக புக்கிங் பணிகள் தொடங்கிய முதல் பத்தே நாட்களில் சுமார் 10 ஆயிரம் புக்கிங்குகளை கைலாக் கார் மாடல் பெற்றது.

இந்த மாதிரியான தருணத்தைத் தொடர்ச்சியாக்கும் பொருட்டே சலுகை விலையை நீட்டித்திருக்கின்றது ஸ்கோடா நிறுவனம். அதுமட்டுமல்ல, சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் என்பது இந்தியாவில் போட்டி மிகுந்த கார் பிரிவாக உள்ளது. இந்த பிரிவின் மிக சிறந்த போட்டியாளன்களாக டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ உள்ளிட்ட கார் மாடல்கள் உள்ளன.
இவர்களுக்கு கடுமையான போட்டியை வழங்க வேண்டும் என்கிற நோக்கிலும் கைலாக் காரின் விலையை ஸ்கோடா உயர்த்தாமல் இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. எஞ்சினைப் பொருத்த வரை கைலாக் கார் மாடலில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 115 எச்பி மற்றும் 178 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் ஆகிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றன. இந்த காரின் மைலேஜ் திறனும் நம்மை கவரும் வகையிலேயே உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இதன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 19.68 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 19.05 கிமீ மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஸ்கோடா நிறுவனம் தன்னுடைய இந்த கைலாக் காரை எளிதில் வாடிக்கையாளர்களிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காக ஜெப்டோ உடன் கூட்டணியைச் சமீபத்தில் தொடங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் பொருட்களை டெலிவரி செய்யக் கூடிய ஓர் நிறுவனமே ஜெப்டோ ஆகும்.
இதேபோல், சிறப்பம்சங்களை இந்த காரில் ஸ்கோடா நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 10 அங்குல தொடுதிரை சிஸ்டம், வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்-பிளே இணைப்பு வசதியுடனும், 8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுமட்டுமல்ல, க்ளைமேட் கன்ட்ரோல், இரண்டு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களையும் கைலாக் காரில் வழங்கி இருக்கின்றனர். இத்துடன், பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமிரா, ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றை ஸ்கோடா நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கியிருப்பதில் மட்டுமல்ல பாதுகாப்பை வழங்கும் விஷயத்திலும் தலை சிறந்த கார் மாடலாக கைலாக் காட்சியளிக்கின்றது. ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. பாரத் என்சிஏபி (Bharat NCAP) வாயிலாகவே இந்த ரேட்டிங்கை அது பெற்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கோடா கைலாக் காருக்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பே நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பையே தொடர்ச்சியாக்கும் பொருட்டு தற்போது அறிமுக சிறப்பு விலையை இந்த ஒரு மாதத்திற்கும் ஸ்கோடா நீட்டித்து இருக்கின்றது. இது வரவேற்பை இரட்டிப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









