50 வருஷமா செயல்படுதா? இப்படியொரு டிராக்டர் கம்பெனியையே நிறைய பேர் கேள்விப்பட்டது இல்லையே! தோனி விளம்பர தூதர்
ஸ்வராஜ் டிராக்டர்ஸ் (Swaraj Tractors), இந்தியாவில் கிட்டத்தட்ட கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் டிராக்டர் உற்பத்தி நிறுவனம். பிரம்மாண்டமான மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஸ்வராஜ் நீண்ட காலமாக செயல்படும் டிராக்டர் உற்பத்தி நிறுவனம் என்பது மட்டுமின்றி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் டிராக்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.
எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான உற்பத்தி என்றால், இதுவரையில் உற்பத்தி செய்த ஒட்டுமொத்தமாக டிராக்டர்கள் எண்ணிக்கையில் 25 லட்சம் என்கிற பிரம்மாண்டமான மைல்கல்லை ஸ்வராஜ் நிறுவனம் தற்போது கடந்து சாதனை படைத்துள்ளது. மற்ற போட்டி நிறுவனங்களினால் தென்னிந்தியாவில் ஸ்வராஜ் டிராக்டர்ஸ் பெரியதாக ஆதிக்கம் செலுத்தாவிடினும், வட இந்தியாவில் இந்த நிறுவனத்தின் மார்க்கெட் பெரியதாக உள்ளது.

ஏனெனில், இந்த நிறுவனத்தின் டிராக்டர் உற்பத்தி தொழிற்சாலை ஆனது பஞ்சாப் (Punjab) மாநிலத்தின் மொஹாலியில் செயல்படுகிறது. இங்கிருந்துதான் 25 லட்ச டிராக்டர்களையும் ஸ்வராஜ் நிறுவனம் உற்பத்தி செய்து வெளியேற்றி உள்ளது. 1974ஆம் ஆண்டில் மஹிந்திரா குழுமத்தால் நிறுவப்பட்ட ஸ்வராஜ் நிறுவனம் டிராக்டர்கள் உற்பத்தியில் 20 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்த 2022ஆம் ஆண்டில்தான் எட்டியது.
அதனை தொடர்ந்து, அதற்கடுத்த மூன்றே வருடங்களில் மேலும் 5 லட்ச டிராக்டர்களை உற்பத்தி செய்து டிராக்டர்கள் உற்பத்தியில் 25 லட்சம் என்கிற மிக முக்கியமான மைல்கல்லை ஸ்வராஜ் கடந்துள்ளது. இதில் இருந்து சமீப ஆண்டுகளில் ஸ்வராஜ் நிறுவனத்தின் டிராக்டர்களுக்கு எந்த அளவிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதை அறியலாம்.

1974இல் மார்க்கெட்டில் நுழைந்த பின் ஸ்வராஜில் இருந்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் டிராக்டர் 'ஸ்வராஜ் 724' ஆகும். அதிகப்பட்சமாக 20இல் இருந்து 25 எச்பி வரையிலான இயக்க ஆற்றலில் இயங்கக்கூடியதாக உருவாக்கப்பட்ட ஸ்வராஜ் 724 தான் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் டிராக்டர் என கூறப்படுகிறது.
எந்தவொரு பாதையிலும் இயங்கக்கூடிய, ரக்டான தோற்றம் கொண்ட டிராக்டர்களை எதிர்பார்ப்பவர்களுக்கு ஸ்வராஜ் டிராக்டர்கள் ஏற்றவையாக உள்ளன. மேலும், நீண்ட காலத்திற்கு நம்பகத்தன்மை உடனும், விலை குறைவானவைகளாகவும் விளங்குவதால் ஸ்வராஜ் டிராக்டர்களை குறிப்பாக வட இந்திய விவசாயிகள் அதிகம் வாங்குகின்றனர். அந்த அளவிற்கு, இந்திய நிலப்பரப்புக்கு ஏற்ப ஆரம்பத்தில் இருந்தே இந்திய பொறியியலாளர்களால் ஸ்வராஜ் டிராக்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

முதன்முதலாக டிராக்டர்களை உற்பத்தி செய்து ஓரளவுக்கு வெற்றி கண்ட பின், மற்ற டிராக்டர் உற்பத்தி நிறுவனங்களை போன்று விவசாயம் சார்ந்த மற்ற கருவிகளையும் உற்பத்தி செய்ய ஸ்வராஜ் ஆரம்பித்தது. 1974ஆம் ஆண்டிலேயே மார்க்கெட்டில் நுழைந்துவிட்டாலும், 5 லட்சம் டிராக்டர்களை உற்பத்தி செய்ய இந்த நிறுவனத்திற்கு 28 வருடங்கள் தேவைப்பட்டு உள்ளது.
ஆனால், அதற்கடுத்த 23 வருடங்களில் சுமார் 20 லட்சம் டிராக்டர்களை ஸ்வராஜ் உற்பத்தி செய்துள்ளது. ஸ்வராஜ் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ஸ்வராஜ் 855, 735, 744, 960, 742, 963, ஸ்வராஜ் டார்க்கெட் (Target) மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நாயா ஸ்வராஜ் (Naya Swaraj) டிராக்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து தனியாகவும் டிராக்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், ஸ்வராஜ் பிராண்ட் மூலமாகவும் வாடிக்கையாளர்களை பெறும் முயற்சியாக தொடர்ந்து ஸ்வராஜ் டிராக்டர்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா நடத்தி வருகிறது. மஹிந்திரா டிராக்டர்கள் அளவிற்கு ஸ்வராஜ் டிராக்டர்களுக்கு இந்தியா முழுவதும் மார்க்கெட் இல்லையென்றாலும், டிராக்டர்கள் உற்பத்தியில் 25 லட்சம் என்கிற இமாலய மைல்கல்லை ஸ்வராஜ் நிறுவனம் கடந்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









