தமிழ்நாட்டை 3வது இடத்திற்கு தள்ளிவிட்டு 2 இடத்தில் கர்நாடகா! எலக்ட்ரிக் கார்களுக்கு எது பெரிய மார்க்கெட்?
எலக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) இந்தியா முழுவதுமே மெல்ல மெல்ல தேவை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும் இதற்கு தனது உதவிகளை மானியம் வாயிலாக வழங்கி வருவதால், எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்கள் அவை என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு கொஞ்சம் மெதுவாகவே வளர்ச்சி காணும் என்பது நாம் எதிர்பார்த்த ஒன்று தான். மத்திய அரசு 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் சாலையில் ஓடும் வாகனங்களில் குறைந்தது 30 சதவீதத்தை எலக்ட்ரிக் வாகனமாக மாற்ற வேண்டும் என்கிற கொள்கை உடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் விரிவடைந்து வருகிறது என்றாலும், ஒரு சில மாநிலங்களில் இந்த வளர்ச்சி ஆனது அதிகமாக உள்ளது. அத்தகைய மாநிலங்களுள் நமது தமிழ்நாடும் ஒன்றாக உள்ளது என்றாலும், கடந்த ஏப்ரல் மாத எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் தமிழ்நாட்டை இரு மாநிலங்கள் முந்தி உள்ளன.
அந்த இரு மாநிலங்கள் வேறு எதுவும் இல்லை... மஹாராஷ்டிரா (Maharashtra) மற்றும் கர்நாடகா (Karnataka) ஆகும். இதில் குறிப்பாக, இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையை கொண்டிருக்கும் மஹாராஷ்டிராவில் மாதத்திற்கு மாதம் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் பெரியதாகி கொண்டே வருகிறது. பணக்காரர்களை அதிகம் கொண்ட மாநிலம் என்பது மட்டுமின்றி, மஹாராஷ்டிராவில் எலக்ட்ரிக் கார்களுக்கு நல்ல தேவை இருப்பதற்கு இன்னும் சில காரணங்கள் உள்ளன.

அவற்றுள் முக்கியமானது, மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக மஹாராஷ்டிரா மாநில அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளில் கொண்டுவந்த திட்டங்கள் ஆகும். இந்த 2025ஆம் ஆண்டு துவக்கத்தில் கூட, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான புதிய திட்டத்தை ரூ.1,993 கோடி நிதி உடன் மஹாராஷ்டிரா மாநில அரசு அறிவித்தது.
மஹாராஷ்டிராவில் கடந்த 2024இல் அறிவிக்கப்பட்ட திட்ட நிதி உடன் ஒப்பிடுகையில், ரூ.1,993 கோடி என்பது கிட்டத்தட்ட டபுள் மடங்கு ஆகும். புதிய 2025 திட்டத்தின்படி, எலக்ட்ரிக் கார்கள் மற்றும் எஸ்யூவிகளை வாங்குவோருக்கு விலையில் 10% மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மானியம் வழங்கியதுடன், மாநிலத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25கிமீ-க்கும் ஒரு இவி சார்ஜிங் நிலையத்தை அமைக்கவும் மஹாராஷ்டிரா மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.
இதன் விளைவாக, எலக்ட்ரிக் கார் ஓனர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுடன், மாநில அரசாங்கத்தின் உந்துதலினால் எலக்ட்ரிக் கார் நிறுவனங்களும் மஹாராஷ்டிரா முழுவதும் பல பகுதிகளில் இவி சார்ஜிங் வசதிகளை கொண்டுவந்துள்ளன. கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 68 எலக்ட்ரிக் கார்கள் ஆர்டிஓ (RTO)-இல் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் எலக்ட்ரிக் காரை வாங்கி, அதனை இந்தியாவிற்கு கொண்டுவந்து பயன்படுத்துபவர்களும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் பேர் உள்ளனர். அவ்வாறான வழிகளில் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான் என்றாலும், மேலே கூறப்பட்ட 2,068 எலக்ட்ரிக் கார்களில் அத்தகையவர்களது எலக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹாராஷ்டிராவை தொடர்ந்து 2வது இடத்தில் கர்நாடகா உள்ளது. இதற்கு அடுத்தே 3வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக பல அறிவிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே, மிகவும் பின்தங்கி இல்லாமல், 3வது இடத்தில் உள்ளோம். இருப்பினும், மஹாராஷ்டிராவின் சில டெக்னிக்குகளை பின்பற்றினால் தமிழ்நாடு முதலிடம் பிடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.


Click it and Unblock the Notifications








