நடு வழியில் சார்ஜ் காலியானாலும் இனி கவலை இல்ல... சென்னையில் எலெக்ட்ரிக் கார் வைத்துள்ளீர்களா?
இந்தியாவின் மிகப்பெரிய நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான டாடா.இவி (TATA.ev), வோல்ட்ரான் (Voltran) நிறுவனத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெரிய அளவில் 14 டாடா எலெக்ட்ரிக் வாகன ஃபாஸ்ட்-சார்ஜிங் (Fast-Charging) நிலையங்களை திறந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சார்ஜிங் நிலையங்களால் தமிழ்நாட்டு வாகன ஓட்டிகளுக்கு என்ன மாதிரியான நன்மைகள் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.
விஜயவாடா, குண்டூர், ஓங்கோல், நெல்லூர் வழியாக சென்னைக்கு பயணம் செய்பவர்கள், ஓங்கோல் மற்றும் நெல்லூர் நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களில் தங்கள் வாகனங்களை சார்ஜ் செய்துக்கொண்டு, ஓய்வு எடுக்கலாம். ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் வகையில் முக்கிய சாலைகளில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிற்கு 100 கிமீ இடைவெளியில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மையமும் அதிவேக சார்ஜிங் இணைப்புகள், ஏசி வசதி கொண்ட காஃபி ஷாப், தூய்மையான கழிப்பறைகள், இலவச வைஃபை உள்ளிட்ட வசதிகள் உடன் பொருத்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் நம்பகமான சார்ஜிங் மற்றும் சௌகரியமான ஓய்வு அனுபவத்தை ஒரே இடத்தில் பெற முடியும். டாடா நிறுவனம் தனது 'திறந்த கூட்டாண்மை 2.0' திட்டத்தின் கீழ், நாட்டின் சார்ஜிங் உள்கட்டமைப்பை விரைவாக விரிவுபடுத்தி வருகிறது.
இதன் மூலம், முக்கிய நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களிலும், நகரத்தின் முக்கிய பகுகளிலும் அதிவேக சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்குவதற்காக சார்ஜ் பாயிண்ட் ஆபரேட்டர்களுடன் டாடா இணைந்து செயல்படுகிறது. 2027க்குள் 4 லட்சம் சார்ஜிங் நிலையங்களை நிறுவுவது என்ற தனது நீண்டகால இலக்கின் ஒரு பகுதியாக, 500 டாடா எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை டாடா.இவி அமைத்து வருகிறது.

இதன் நோக்கம், இந்தியாவில் தடையற்ற நீண்டதூர எலெக்ட்ரிக் வாகன பயணத்தை முழுமையாக சாத்தியமாக்குவது ஆகும். டாடா எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள் குறைந்தபட்சம் 120 kW திறன் கொண்ட அதிவேக சார்ஜர்கள் உடையவை ஆகும். டாடா எலெக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களுக்கு சார்ஜிங் கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு சார்ஜிங் நிலையத்திலும் 4 முதல் 12 சார்ஜிங் சாக்கெட்கள் வரை உள்ளன. ஆந்திரா- சென்னை எலெக்ட்ரிக் வாகன பயனர்களின் வசதிக்காக புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த 14 பெரிய சார்ஜிங் நிலையங்கள் குறித்து டாடா பயணிகள் எலெக்ட்ரிக் வாகன லிமிடெட் மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் நிறுவனங்களின் தலைமை அதிகாரி பாலாஜே ராஜன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "எலெக்ட்ரிக் வாகன புரட்சி வலுவாக முன்னேறி வரும் நிலையில், எளிதில் அணுகக்கூடிய மற்றும் நம்பகமான சார்ஜிங் உள்கட்டமைப்பு மிக அவசியமாகியுள்ளது. வோல்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் 14 டாடா எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறோம்.
இவை 24 மணிநேரமும் பயிற்சி பெற்ற பணியாளர்களால் பராமரிக்கப்படும் இந்தியாவின் முதல் வகை சார்ஜிங் மையங்கள் ஆகும். முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த அதிவேக சார்ஜிங் நெட்வொர்க், மாநிலங்களுக்கு இடையேயான எலெக்ட்ரிக் வாகன பயணத்தை சுலபமாக்குகிறது. தற்போது 70க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களுடன், இந்தியா முழுவதும் நம்பகமான மற்றும் எரிபொருள் நிலையங்களை போன்று சார்ஜிங் மையங்களை வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடாவின் இந்த புதிய எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் பணம், டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகள் அல்லது யூபிஐ மூலம் நேரடியாக கட்டணம் செலுத்த முடியும். இந்த சேவைக்கு எந்த வித மொபைல் செயலியும் தேவையில்லை. ஆகையால், டாடாவின் இந்த ஃபாஸ்ட்-சார்ஜிங் வசதி அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் மற்றும் தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









