ஏசி வசதி இல்லாத டாடா லாரியை இனி பார்க்க முடியாது! ஓய்வு நேரம் எல்லாம் தேவையே படாது!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் சமீப சில மாதங்களாக சிறிய சறுக்கலை சந்தித்து இருப்பினும், ஒட்டுமொத்தத்தில் சமீப காலங்களில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இத்தகைய டாடா மோட்டார்ஸின் பயணம் முதலில் கமர்ஷியல் வாகனங்களில் இருந்துதான் துவங்கியது என்பது நம் எல்லாருக்குமே தெரியும். 1954ஆம் ஆண்டில் இருந்து கனரக லாரிகளை டாடா மோட்டார்ஸ் உருவாக்க ஆரம்பித்துவிட்டது. இந்த வகையில் பார்த்தால், லாரிகளை உருவாக்குவதில் டாடா நிறுவனத்துக்கு 70 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளது.
இந்தியாவில் சாலைகளில் டாடா லாரிகளை பார்க்காமல் இருக்கவே முடியாது என்கிற நிலை உருவாகிவிட்டது. இந்த 70 வருடங்களில் லாரிகளை உற்பத்தி செய்வதில் பல பிரிவுகளில் டாடா மோட்டார்ஸ் நிபுணத்துவம் அடைந்துள்ளது. அந்த வரிசையில், தனது லாரி உற்பத்தி பயணத்தில் புதிய மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் கடந்துள்ளது. அது என்னவென்றால், லாரிகளில் ஏசி (Air-conditioning) வசதி ஆகும்.

ஒரு காலத்தில், வாகனங்களில் ஏசி வசதி ஆனது மிகவும் விலையுயர்ந்த கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. செல்வந்தர்களும், பெரும் பணக்காரர்களும் சொகுசான பயணத்திற்காக கார்களில் ஏசியை கொண்டுவர ஆரம்பித்தனர். பின்னர் எப்போது வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்ததோ அப்போதே விலை குறைவான கார்களிலும் பரவலாக வர ஆரம்பித்துவிட்டது.
தற்போது, ரூ.5, 6 லட்ச ரூபாய் கார்களில் கூட ஏசி கொடுக்கப்படும் அளவிற்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இருப்பினும், இன்னமும் நிறைய லாரிகளில் ஏசி வசதி வழங்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்றும் விதமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து லாரிகளிலும் ஏசி வசதியை அடிப்படை அம்சமாக கொண்டுவந்துள்ளது.

இதன்படி, டாடா எஸ்.எஃப்.சி (SFC), எல்பிடி (LPT), சிக்னா (Signa) மற்றும் பிரைமா (Prima) லாரிகள் அனைத்தையும் இனி ஏசி வசதி கொண்ட கேபின் உடன் வாங்கலாம். லாரிகள் ஏசி சிஸ்டம் ஆனது டாடாவின் தொழிற்சாலையிலேயே பொருத்தி வழங்கப்படும். இதனால், டாடா தொழிற்சாலைக்கு உள்ளேயே ஏசி சிஸ்டம் பொருத்தப்படுவதற்கு ஏற்ப லாரிகள் வடிவமைக்கப்படும்.
இரு விதமாக செயல்படக்கூடிய வகையில் லாரிகளுக்கான ஏசி சிஸ்டத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன்படி, ஈக்கோ (Eco) மற்றும் ஹெவி (Heavy) என இரு விதமான ஏசி செட்டிங்க்ஸை பெறலாம். இதில் ஈக்கோ மோடில் போதுமான அளவிற்கு குளிர்ச்சி உடன் எரிபொருளை மிச்சப்படுத்தி லாரி ஓட்டலாம். ஹெவி செட்டிங்க்ஸில் ஏசியின் குளிர்ச்சி அதிகமாக இருக்கும்.

இதனை கோடைக்காலங்களில் குளிர்ச்சி அதிகமாக தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தலாம். லாரிகள் அனைத்திலும் ஏசி சிஸ்டத்தை அறிமுகம் செய்திருப்பதுடன், அதிக சுமையை சுமக்கக்கூடிய கனரக லாரிகளான டிப்பர் (Tipper) மற்றும் பிரைம் (Prime) லாரிகளின் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய அதிகப்பட்ச இயக்க ஆற்றலையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகரித்துள்ளது.
இந்த லாரிகளில் இனி அதிகப்பட்சமாக 320 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த அப்கிரேட் செய்யப்பட்ட லாரிகளில் எரிபொருள் செலவை மிச்சப்படும் வகையில் லாரி நின்றால் தானாக என்ஜின் ஆஃப் ஆகக்கூடிய தொழிற்நுட்பம், லாரியை பற்றிய எச்சரிக்கைகளை குரல் மூலமாக வழங்கும் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லாரிகளில் நீண்ட காலமாக ஏசி வசதி அதிகமாக வழங்கப்படாமல் இருப்பதற்கு, அவற்றின் நடைமுறை சிக்கல்கள் முக்கியமான காரணம் ஆகும். லாரிகளை அதிக நாட்கணக்குகளில் கூட ஓட்டுவதால், எல்லா நேரங்களிலும் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்திருப்பது சிரமமானதாக உள்ளது. அதுவும் நம்ம ஊர் லாரி டிரைவர்களுக்கு வெளிக்காற்று இல்லையென்றால், லாரி ஓட்டவே தோணாது. இருப்பினும், காலங்கள் மாறி வருவதால், ஏசி வசதி கொண்ட லாரிகளுக்கான தேவை இருக்கும் என உணர்ந்து தனது லாரிகள் அனைத்திலும் ஏசி வசதியை டாடா நிறுவனம் வழங்க ஆரம்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications









