கத்து குட்டீனுகூட பாக்கல ஓங்கி கொட்டி ஓரங்கட்டிருச்சு டாடா.. கொஞ்ச, நஞ்ச ஆட்டமா போட்டாங்க..
நாட்டின் நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவானாக டாடா மோட்டார்ஸ் உள்ளது. கொஞ்சம் காலமாகவே மின்சார வாகன விற்பனையில் இந்த நிறுவனம் அடி வாங்கி வந்த நிலையில், தற்போது அது மீண்டு வர தொடங்கி இருக்கின்றது. அது தன்னுடைய தலைவன் இடத்தை மீண்டும் அலங்கரித்திருக்கின்றது. அதாவது, டாடா மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் கார்களுக்கு மீண்டும் நல்ல வரவேற்பு நாட்டில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. சென்ற ஜனவரி மாத விற்பனையில் அதிக எண்ணிக்கையில் டாடா மின்சார கார்களே விற்பனையாகி இருக்கின்றன.
ஆகையால், 2025 ஜனவரியில் நம்பர் 1 மின்சார கார் உற்பத்தி நிறுவனமாக அது மீண்டும் முன்னேறி இருக்கின்றது. முந்தை மாதங்களில் இந்த இடத்தை எம்ஜி நிறுவனமே பிடித்திருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே இந்த கத்து குட்டி நிறுவனத்திற்கு விற்பனை வாயிலாக மாபெரும் அடியை வழங்கி இருக்கின்றது, டாடா.

எம்ஜி நிறுவனம் அதன் 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' எனும் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பின்னரே இந்தியர்கள் பலரும் அதன் பக்கம் சாய தொடங்கினர். குறிப்பாக, இந்த திட்டத்தின்கீழ் அந்நிறுவனம் அதன் விண்ட்ஸர் இவி (Windsor EV)-யை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதுதான் கூடுதல் ஹைலைட்டே.
இதுவே இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் மின்சார கார் மாடலான நெக்ஸான் இவி (Nexon EV)-க்கு பெருத்த சவால் அளிக்கக் கூடியதாக மாறியது. இந்த மாதிரியான சூழலிலேயே அதிக எண்ணிக்கையில் இ-கார்களை விற்பனைச் செய்து முன்னணி மின்சார கார் உற்பத்தியாளராக டாடா மோட்டார்ஸ் மீண்டும் அவதாரம் எடுத்திருக்கின்றது.
2025 ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் 5,047 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. அதேவேளையில், எம்ஜி நிறுவனத்தின் மின்சார கார்களோ சென்ற ஜனவரி மாதத்தில் வெறும் 4,237 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. இதை வைத்து பார்க்கையில் பலமடங்கு டாடா மோட்டார்ஸைக் காட்டிலும் இவி விற்பனையில் எம்ஜி பின் தங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
அதேவேளையில், டாடா மோட்டார்ஸ் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 2025 ஜனவரியில் பெற்றிருக்கும் இவி விற்பனை எண்ணிக்கை சற்றே குறைவானது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 2024 ஜனவரியில் டாடாவின் இ-கார்கள் 5,802 யூனிட்டுகள் வரை விற்பனையாகின.
இதைவிட 13.01 சதவீதம் குறைவாகவே டாடா எலெக்ட்ரிக் கார்கள் 2025 ஜனவரியில் விற்பனையாகி இருக்கின்றன. எனவே, நம்பர் 1 இடத்தை 2025 ஜனவரியில் பிடித்திருந்தாலும், இது சற்றே நிறுவனத்திற்கு வேதனை அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. போட்டி அதிகரித்திருப்பதாலே இந்த விற்பனை சரிவு நிறுவனத்திற்கு ஏற்பட்டு இருக்கின்றது.
அதேநேரத்தில் எம்ஜி நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மாபெரும் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. 2024 ஜனவரியில் வெறும் 1,203 யூனிட்டுகள் மட்டுமே எம்ஜி மின்சார கார்கள் விற்பனையாகிய நிலையில், அது 2025 ஜனவரியில் 252.2 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.
அடுத்தடுத்து வரும் மாதங்களிலும் இதன் விற்பனை எண்ணிக்கை என்பது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், டாடா மோட்டார்ஸும் இ-வாகன விற்பனை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அது விரைவில் இன்னும் சில புதுமுக மின்சார கார்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
அந்தவகையில் நிறுவனத்தின் அடுத்த அறிமுக பட்டியலில் ஹாரியர் இவி (Harrier EV) இருக்கின்றது. இன்னும் ஒரு சில மாதங்களில் இது விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. டாடா மற்றும் எம்ஜி, இந்த இரண்டு நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக வெறும் 688 யூனிட்டுகள் மின்சார வாகனங்களை விற்பனைச் செய்து மூன்றாவது இடத்தை மஹிந்திரா (Mahindra) நிறுவனம் பிடித்திருக்கின்றது.
இந்த நிறுவனமும் அடுத்து வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸுக்கு மிகப் பெரிய சவால் விடும் வகையில் அமைய உள்ளது. நிறுவனத்தின் மிக சூப்பரான எலெக்ட்ரிக் கார்களான எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) ஆகிய இ-கார்களின் விற்பனையைச் சமீபத்திலேயே தொடங்கியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் விரைவிலேயே தன்னுடைய புதுமுக எலெக்ட்ரிக் கார்களின் டெலிவரி பணிகளை நாட்டில் தொடங்க இருக்கின்றது. ஆகையால், எம்ஜியை போல மாபெரும் விற்பனை வளர்ச்சியை அடுத்து வரும் மாதங்களில் மஹிந்திரா பெறும் என நம்பப்படுகின்றது. இதற்கேற்ப நிறுவனத்தின் தயாரிப்புகள் இப்போதே பலரின் கவனத்தைக் கவர தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








