வாங்கிய கஸ்டமர்கள் எல்லாருக்கும் மைலேஜில் கை மேல் இலாபம்! டாடா சிஎன்ஜி கார்கள் மீதுதான் எல்லாரது கண்ணும்
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. ஏனெனில் அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. குறிப்பாக, கடந்த 10 வருடங்களில் நெக்ஸான் (Nexon), பஞ்ச் (Punch), அல்ட்ராஸ் (Altroz) போன்ற தரமான கார்கள் மூலமாக பெரிய அளவிலான வளர்ச்சியை டாடா நிறுவனம் பதிவு செய்து வருகிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக டாடா கார்கள் விற்பனை சற்று குறைந்து வருகிறது என்றாலும், இந்த நிலை தற்காலிகமானதாகவே இருக்கும்.
டாடா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு புதிய கார் அறிமுகங்கள் ஒரு காரணம் என்றாலும், அதேபோல் மற்றொரு காரணம் சிஎன்ஜி (CNG) எனப்படும் அழுத்தத்திற்கு உள்ளாகப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய கார்கள் விற்பனையில் கடந்த சில வருடங்களாக டாடா மோட்டார்ஸ் தீவிரமாக இறங்கியது மற்றொரு காரணம் ஆகும்.

பெட்ரோலுக்கு பதிலாக சிஎன்ஜியில் இயங்கக்கூடிய கார்கள், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. இதன் மூலமாக மத்திய அரசாங்கத்திற்கும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்பதால் அரசு சார்பிலும் சிஎன்ஜி கார்களின் பயன்பாட்டை அதிகரிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) சிஎன்ஜி கார்கள் விற்பனையில் தீவிரமாக இறங்க ஆரம்பித்தது.
மாருதி சுஸுகியை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சிஎன்ஜி கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தது. டாடாவில் இருந்து முதல் சிஎன்ஜி கார்கள் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன்பின் குறிப்பிட்ட கால இடைவெளியில் நெக்ஸான் சிஎன்ஜி, பஞ்ச் சிஎன்ஜி, அல்ட்ராஸ் சிஎன்ஜி என தொடர்ச்சியாக டாடா சிஎன்ஜி கார்கள் களமிறக்கப்பட்டன.

இவ்வாறு தொடர்ந்து புது, புது சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்வதன் மூலமாக டாடா சிஎன்ஜி கார்கள் விற்பனை 35% அதிகரித்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 2025 மார்ச் 31ஆம் தேதி வரையில் 1.39 லட்ச சிஎன்ஜி கார்களை இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.
இது, இதற்கு முந்தைய 2023-24ஆம் நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்ட டாடா சிஎன்ஜி கார்களை காட்டிலும் 35% அதிகமாகும். ஏனெனில், 2023 ஏப்ரல்- 2024 மார்ச்சில் ஏறக்குறைய 91 ஆயிரம் சிஎன்ஜி கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது. சிஎன்ஜி கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் அடைந்திருக்கும் இந்த 35% வளர்ச்சிக்கு சில காரணங்கள் உள்ளன.

அவற்றுள் முக்கியமானது, டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரின் அறிமுகம் ஆகும். இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரான நெக்ஸானில் புதியதாக சிஎன்ஜி வெர்சனை கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே முதல்முறையாக டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் சிஎன்ஜி காராக நெக்ஸான் சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி, இந்தியாவிலேயே பனோராமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) உடன் அறிமுகம் செய்யப்பட்ட 2வது சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார், நெக்ஸான் சிஎன்ஜி ஆகும். இதற்கு முன்னர், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (Mahindra XUV 3XO) முதல் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காராக பனோராமிக் சன்ரூஃப் உடன் கடந்த 2024 மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெக்ஸான் சிஎன்ஜி காரின் அறிமுகம் தான் டாடா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் என்றாலும், டாடா டிகோர் சிஎன்ஜி மற்றும் டியாகோ சிஎன்ஜி கார்களில் புதியதாக ஏஎம்டி கியர்பாக்ஸ் (AMT Gearbox) ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டதும் சிஎன்ஜி கார் மார்க்கெட்டில் டாடா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மற்ற காரணங்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications









